அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்!

You are currently viewing அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்!

கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவை இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது தம் நூல் ஒன்றைப் பற்றிச் சில தகவல்களைச் சொன்னார். அவர் அம்மாவைப் பற்றிக் கடந்த இருபது ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். அது பல வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அடக்கவிலையில் வெளியிட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளில் அறுபதாயிரம் படிகள் விற்பனை ஆகிக் கன்னட வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதைக் கே.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்து Two Shores பதிப்பக வெளியீடாக வரவுள்ளது.

‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்னும் தலைப்பிலான அந்நூலுக்கு பிற்குறிப்பு (Blurb என்பதைப் பின்னட்டைக் குறிப்பு, பின்னட்டை வாசகம் என்றெல்லாம் கூறுகின்றனர். பின் + குறிப்பு – பிற்குறிப்பு எனக் கொண்டு நான் பயன்படுத்தி வருகிறேன். இது ‘ற்’ வருவதால் ஒருசொல் நீர்மைத்து என்னும் தன்மை வந்து சேர்கிறது எனக் கருதுகிறேன்) எழுதித் தர வேண்டும் என்று என்னைக் கேட்டார். அம்மாவைப் பற்றிய நூலுக்கு எழுதுவதில் எனக்கு விருப்பம்தான் என்று சொன்னேன். என் அம்மாவைப் பற்றி நான் எழுதிய ‘தோன்றாத்துணை’ நூலைப் பற்றியும் அது ஆங்கிலத்தில் ‘AMMA’ என வெளியாகியிருப்பதையும் சொன்னேன். நூலை உடனே வாங்கிச் சில நாட்களில் வாசித்துவிட்டார்.

பதிப்பக உரிமையாளர் ஆனந்த் தட்சிணாமூர்த்தி நூலின் பிடிஎப் வடிவை அனுப்பித் தந்தார். வசுதேந்த்ராவின் நூலை நானும் விரைவில் வாசித்து முடித்தேன். பிற்குறிப்பு ஒன்றையும் எழுதிக் கொடுத்தேன். அடுத்த முறை சந்தித்தபோது இருநூல்களுக்கும் இருக்கும் பொதுவம்சம் பற்றிப் பேசினோம். அம்மாக்களுக்கு என்றே சில பொதுவம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர் அம்மா கர்நாடகத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். என் அம்மா தமிழ்நாட்டில் வேளாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால் என்ன? இருவருக்கும் பல பொதுவம்சங்கள் இருக்கின்றன.

‘எவர்சில்வர் பாத்திரங்கள்’ என வசுதேந்த்ரா ஒருகட்டுரை எழுதியுள்ளார். அவர் அம்மாவுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கிச் சேர்ப்பதில் இருந்த ஆர்வத்தை நகைச்சுவையோடு விவரிக்கும் கட்டுரை அது. வசுதேந்த்ராவுக்கு வேலை கிடைத்து சென்னையில் வசித்தபோது ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ்க்கு அம்மாவை அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தப் பாத்திரக் கடலைப் பார்த்து அம்மா பிரமித்ததையும் வேண்டியதை எல்லாம் வாங்கிக் குவித்ததையும் எழுதியிருக்கிறார். அம்மாவின் இறப்புக்குப் பிறகு அப்பாத்திரங்கள் எல்லாம் தேவையற்றுப் போன சோகத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

‘தோன்றாத்துணை’ நூலில் ‘தங்கக்குடம்’ என்றொரு கட்டுரை இருக்கிறது. விதவிதமாகப் பாத்திரங்கள் சேர்ப்பதில் அம்மாவுக்கு இருந்த ஈடுபாடு பற்றியும் அவற்றைப் பங்கிட்டுக் கொடுத்த விதம் பற்றியும் பேசும் கட்டுரை. அம்மா வைத்திருந்த ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு கதை உண்டு. ஒவ்வொன்றும் மதிப்பு மிக்க கதை. அது தெரியாமல் அப்பாத்திரத்தைப் பயன்படுத்தும் எங்கள் மேல் அம்மாவுக்கு கோபம் வரும். கொடுத்த பாத்திரத்தைக் கோபத்தில் தூக்கிக் கொண்டு போனதும் உண்டு.

அம்மாக்களுக்கு, அதுவும் அந்தக் கால அம்மாக்களுக்குப் பாத்திரங்கள் மேலிருந்த அதீத ஆர்வம் பற்றி விரிவாகப் பேசலாம். ஒவ்வொரு பாத்திரம் வாங்குவதும் பெரும்பிரயத்தனமாக அப்போது இருந்தது காரணமாக இருக்கலாம். பாத்திரப் பித்து ஒருவகையில் அவர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கலாம். வீட்டுக்கு விருந்தினர் வரும்போது தடுமாறும் அவர்களுக்குத்தான் பாத்திரங்களின் அருமை தெரிந்திருக்கும்.

இரண்டு அம்மாக்களையும் இப்படி ஒப்பிட்டுப் பார்க்கவும் வித்தியாசப்படுத்திப் பார்க்கவும் கட்டுரைகள் இருக்கின்றன. அவர் நூலில் இருபத்து மூன்று கட்டுரைகள். என்னுடையதில் இருபத்திரண்டு. வசுதேந்த்ரா மிகவும் வெளிப்படையாகவும் சுயபகடியோடும் தம் நூலை எழுதியிருக்கிறார்.  ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ கட்டுரை இப்படித் தொடங்குகிறது: ‘எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்லிவிடுகிறேன். சிறுவயதில் நான் பீக்குண்டியாக இருந்தேன்.’ குழந்தைகள் பீக்குண்டியாக இருப்பது ஆச்சரியமில்லை. வயதாகும்போது முதியவர்கள் பீக்குண்டியானால் என்ன செய்வது? அம்மாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி இக்கட்டுரை இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசுகிறது. கட்டுரையின் அடியோட்டம் அப்படியல்ல. பெருந்துயரம்.

‘அண்ணார்’ என்று மக்கள் அன்போடு அழைக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரைப் பார்த்த அனுபவம், பொறியியல் படித்த பையனுக்குத் தொலைக்காட்சி பழுது பார்க்கத் தெரியும் என்று நம்புவது, தாம் பொறியியல் படித்ததையும் அதைப் பெற்றோர் எதிர்கொண்ட விதத்தையும் விவரித்தல் என ஒவ்வொரு கட்டுரையும் சுவாரசியமானது. இவற்றுக்குள் ஓடும் இன்னும் பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேச நிறைய இருக்கிறது. முந்தைய தலைமுறையில் எல்லாம் நன்றாக இருந்ததாகப் புளுகுவோர் இந்த நூலைப் படிக்க வேண்டும். இந்தத் தலைமுறைக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள், வாழ்க்கை வசதிகள் அற்புதமானவை என்னும் உணர்வு தோன்றும்.

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்!

அன்னையர் தினத்தில் இந்நூல் வெளியாகிறது. எல்லோரையும் பரவலாகச் சென்றடையட்டும். இந்நூலுக்கு நான் எழுதிக் கொடுத்த  பிற்குறிப்பின் முழுவடிவம் இது:

‘கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவின் இந்நூல் தம் அம்மாவைப் பற்றிய நினைவுக் கட்டுரைகளைக் கொண்டது.  பெரும்பாலானவற்றில் அம்மாவே முதன்மைப் பாத்திரம். அம்மாவின் உருவச்சித்திரம் மட்டுமல்ல, வாழ்க்கைப் பார்வையையும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சிலவற்றில் வேறொன்றைப் பற்றிய நினைவுக் குறிப்புகளுக்கு இடையே அம்மாவும் தம் வீச்சோடு தலைகாட்டிச் செல்கிறார். மதுவருந்துதல் பற்றிய கட்டுரையில் அம்மாவின் இடம் சிறிது. அது மாணிக்கக் கல் போல் ஒளிர்ந்து கட்டுரை முழுவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவர் பெற்றோர், சொந்த ஊர், பின்னணி முதலிய அனைத்தையும் அறியும் தன்வரலாற்று நூலாகவும் இதைக் காணலாம். அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவையும் சுயஎள்ளலும் வாய்விட்டுச் சிரித்தபடி வாசிக்கச் செய்கின்றன. ஆனால் துயர் சூழ்ந்த கணங்கள் பலவும் அடியோட்டமாகச் செல்கின்றன. ஒரு கட்டுரையை வாசித்ததும் அடுத்ததை நோக்கி மனம் தாவுவதைத் தவிர்க்க முடியாது. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கச் செய்யும் நூல் இது. அம்மாவைப் பற்றி நூல் எழுதியிருப்பதால் என் அம்மாவையும் வசுதேந்த்ராவின் அம்மாவையும் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே வாசித்தேன். இருவரும் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் என்றாலும் பல ஒற்றுமைகளும் உண்டு. அம்மாக்களுக்கு இருக்கும் பாத்திரப் பித்து ஓர் உதாரணம். நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். வசுதேந்த்ராவும் ஒன்றை எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்கள் இருநூல்களையும் ஒப்பிட்டும் வாசிக்கலாம். அதற்குத் தமிழ் நூல் போலவே தோன்றும் நல்லதம்பியின் மொழிபெயர்ப்பும் காரணம்.

—–   11-05-25

Latest comments (1)

பாரத் தமிழ்

தங்கள் இரு அம்மாக்களும் ரசிக்க வைக்கிறார்கள். வாசிக்க வேண்டும் அந்த இரு புத்தகங்களை.