(குறிப்பு: ‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசிய சர்ச்சை தொடர்பாக நான் எழுதிய கட்டுரை இன்றைய (09-06-25) ஆங்கில இந்து (The Hindu) நாளிதழில் Decoding the Kamal-Kannada episode என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பையும் தமிழ் வடிவையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்கள் வாசிக்கவும்.
இணைப்பு: https://www.thehindu.com/opinion/op-ed/decoding-the-kamal-kannada-episode/article69672123.ece )
‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசியது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துவிட்டது. இது அவர் புதிதாகக் கண்டுபிடித்த கருத்தல்ல. இருநூற்றாண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் நிலவிவருவதுதான். கால்டுவெல்லும் சரி, பிந்தைய மொழியியலாளர்களும் சரி, தொல்திராவிட மொழியிலிருந்து பிரிந்தவற்றைத் திராவிட மொழிக் குடும்பம் என்று வரையறுத்து ஏற்றுக்கொண்டனர். எனினும் தமிழ்த் தேசியக் கருத்துடையோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் இருந்து பிரிந்தவையே திராவிட மொழிகள் அனைத்தும் என்று கூறி வந்தனர். அதன் உச்சமாக ‘உலகின் முதல் மொழி தமிழே; அதிலிருந்து உருவானவையே உலக மொழிகள் எல்லாம்’ என்றும் கூறினர்.
இருவேறு சிந்தனைக் குழுக்களின் கருத்துக்களும் தமிழ்ச் சூழலில் இப்போதும் உயிர்ப்போடு இருந்து வருகின்றன. ‘தொல்திராவிட மொழியை’ ஏற்றுக்கொள்ளும் சிந்தனை தமிழ்நாட்டுக்கு வெளியிலும் பரவியிருக்கிறது. அதற்குப் பிறரிடம் ஏற்பும் இருக்கிறது. ‘தமிழே மூலம்’ என்னும் கருத்துக்கு வெளியுலகப் பரவல் குறைவு; ஏற்பும் குறைவுதான். பன்மொழிச் சூழல் நிலவும் இந்தியாவில் மொழி ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வு அரசியல்ரீதியாகப் பெருகியிருக்கும் காலம் இது. ஒவ்வொரு தேசிய இனமும் தம் அடையாளத்தை உருவாக்கிய காரணத்தால் முதல் பெருமையாகத் தம் மொழியையே முன்வைக்கின்றன. தம் மொழிப் பெருமைக்கு ஊறு நேரும் கருத்தோ செயலோ எதுவாக இருப்பினும் கடுமையான எதிர்வினைகள் வருகின்றன.
இந்நிலையில் தொல்திராவிட மொழியிலிருந்தே திராவிட மொழிகள் அனைத்தும் தோன்றின என்னும் சிந்தனையே பொதுத்தளத்தில் வைப்பதற்கு ஏற்புடையது. அது பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணக்கத்தையும் சமத்துவத்தையும் வளர்க்க வல்லது. ‘தமிழிலிருந்துதான் பிற மொழிகள் உருவாயிற்று’ என்று சொன்னால் அது தம் மொழியையும் இனத்தையும் கீழ் என மதிப்பிடுவதாகவே பிறர் கருதுவர். அப்படிச் சொல்வதே தம் மீது செலுத்தும் ஆதிக்கம் என்றே உணர்வர். முப்பாட்டன் கதை சொல்லி அரசியல் செய்யும் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பழம்பெருமை பேசுவதற்கு இது உதவலாம். மற்றபடி சமகால அரசியலில் தமிழ்நாட்டைத் தனிமைப்படுத்துவதற்கே இக்கருத்து பயன்படும். அறிவுலகம் ஏற்றுக்கொள்ளும் வலுவான சான்றுகள் இல்லாத நிலையில் ’தமிழே மூலம்’ என்று வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. பிறருக்கு ஏற்பில்லாத கருத்தைத் திணிப்பதற்கு ஏன் முயல வேண்டும்?
தமிழின் செம்மொழிப் பண்புகளான தொன்மை, இலக்கிய வளம், இலக்கியத் தொடர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் பிற மொழியினர் அறிவர்; உலகம் அறியும். ஏற்கனவே இருக்கும் பெருமைகளை உள்ளபடி எடுத்துச் சென்றாலே தமிழுக்குப் பெருமை சேரும். எந்த இந்திய மொழியின் நவீன இலக்கியத்தோடு ஒப்பிட்டாலும் தமிழ் நவீன இலக்கியம் சமமாகவோ மேலாகவோ இருக்கும். அதை வெளியுலகிற்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையிருக்கிறது. இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீ 2022ஆம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் விருது பெற்றார். இவ்வாண்டு கன்னட மொழி எழுத்தாளர் பானு முஷ்தாக் அதே விருதைப் பெற்றிருக்கிறார். தமிழை அந்த இடத்திற்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் நடக்க வேண்டுமே தவிர பிற மொழியினரைப் பகைத்துக் கொள்ளும் கருத்துக்களைப் பேசி விவாதிப்பதில் பலன் ஏதுமில்லை.
‘தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்’ என்னும் கருத்தைக் கமலஹாசன் சொன்னதற்குரிய நோக்கம் அம்மொழியை இழிவுபடுத்த வேண்டும் என்பதல்ல. மேடையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இருந்தார். அவரது குடும்பத்தோடு தமக்கிருக்கும் நெருக்கத்தைக் கூறிப் பெருமைப்படுவதே நோக்கம். தாங்கள் ஒரே குடும்பம் என்று சொல்ல வந்தவர் தமிழுக்கும் கன்னடத்திற்கும் உள்ள உறவைச் சுட்டிச் சொன்னார். ‘நாம் சகோதரர்கள்; சகோதர மொழிகள் தானே நமது’ என்று சொல்லியிருக்கலாம். ’தமிழே எல்லாவற்றுக்கும் மூலம்’ என்று ஏற்கனவே நிலவும் ஒருவகைச் சிந்தனைக் குழுவின் கருத்துத்தான் அவர் மனதில் அப்போது வந்திருக்கிறது. ஆனால் அவர் நோக்கத்தைச் சந்தேகிக்கத் தேவையில்லை.
அப்படி ஒரு கருத்தைப் பொதுவெளியில் சொல்வதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கிறது. மாற்றுக் கருத்துடையோர் மறுத்துப் பேசலாம்; எழுதலாம். மாறாக மிரட்டுவதோ வாழ்வுரிமையைப் பறிப்பதோ கருத்துரிமைக்கு எதிரானது. அவர் நடித்த திரைப்படமாகிய ‘தக் லைப்’ கர்நாடகத்தில் வெளியிடுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை மன்னிப்புக் கேட்கக் கிட்டத்தட்ட நிர்ப்பந்திக்கும் வகையில் நீதிபதி கருத்துத் தெரிவித்தார். இருமாநிலத் தேசிய இனங்களுக்கு இடையேயான பிரச்சினையாக இதை மாற்றுவதற்கு மொழி அடிப்படைவாதிகள் தயாராக இருக்கையில் நீதிமன்றம் இதை அவர்களுக்குச் சாதகமாகும் வகையிலா அணுகுவது? சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் காவல்துறை இதைப் பார்க்கலாம். நீதிமன்றத்தின் பார்வை அப்படி இருக்க முடியாது. அதே போல வணிகச் சமரசம் செய்து வைக்கும் கட்டப்பஞ்சாயத்து போன்றா நீதிமன்றம் செயல்படுவது?
இதைக் கருத்துரிமைப் பிரச்சினையாக நீதிமன்றம் அணுகியிருக்க வேண்டும். குறிப்பிட்ட கருத்தால் மனம் புண்படுவதாக யார் வேண்டுமானாலும் சொல்லலாம். புண்படுவதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது? சமூகப் பதற்றத்தைத் திட்டமிட்டு யார் வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். அவர்களைச் சமரசத்திற்கான ஒருபிரிவாக நீதிமன்றம் கருத முடியாது. கமலஹாசன் இப்படி ஒரு கருத்தைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை நிதானமாக நீதிமன்றம் விசாரிக்கும், விவாதிக்கும்; திரைப்படத்தை வெளியிடுவதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டுக் காவல்துறை பாதுகாப்போடு வெளியிடுவதற்கு அனுமதித்திருக்க வேண்டும். என்ன வகையில் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருந்த போதும் கருத்துரிமைக் கோணத்தில் இதை அணுகியிருக்க வேண்டும். ஜனநாயகத்தில் நீதிமன்றமே கருத்துரிமையைக் காக்கும் இறுதிப் புகலிடம்.
கமலஹாசன் மன்னிப்புக் கேட்கவில்லை. ‘கருத்து தவறல்ல; தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டது’ என்று அவர் விளக்கம் சொன்னார். திரைப்படம் சார்ந்து ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக வருத்தம், மன்னிப்பு, காட்சிகளை நீக்குதல் முதலிய சமரசங்களுக்கு உட்பட்டுப் படத்தை வெளியிடுவதே வழக்கம். முதன்முறையாகத் திரைப்படத் துறையிலிருந்து ஒருவர் ‘மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்னால் எத்தகைய வணிகக் கணக்கு இருந்தாலும் சரி, இப்படிச் சொல்லும் துணிவைப் பாராட்டியே ஆக வேண்டும். நீதிமன்றம் சொல்வது போல இது தன்னகங்காரப் பிரச்சினை அல்ல; தன்மானப் பிரச்சினை. ஒரு கருத்தைச் சொல்வதற்கும் அதைச் சரி என்று காத்து நிற்பதற்கும் ஒருவருக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. அவருக்கு எதிராக ஜனநாயக வழிமுறைகளில் எதிர்வினைகளைத் தெரிவிக்கலாம். வன்முறையான மிரட்டலோ வாழ்வுரிமையைப் பறிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகக் கருத வேண்டியவை.
—– 09-06-25
Excellent
அருமையான பதிவு.
தெளிவான விளக்கம்.
கமல் கன்னட மொழி குறித்து சொன்னது பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகவும் நேர்மையான கட்டுரை.
எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு நன்றி
தமிழ் தான் மூல மொழி என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. தமிழில் வடமொழி கலந்து தான் பிற தென்னிந்திய மொழிகள் தோன்றின என்று மொழிகள் குறித்த சிறிய ஆய்வு செய்பவருக்குக் கூட புரிந்து விடும். இன்றும் தமிழில் இருந்து பிற மொழி சொற்களை பிரித்து விட்டால் தமிழ் தனித்து இயங்கும். கன்னடத்தில் இருக்கும் தமிழ் சொற்களை நீக்கினால் கன்னடம் இயங்குமா..
பிற இனங்கள், இச்சான்றுகளை ஏற்கவில்லை என்றால் அவர்கள் தாய்மொழி மீதுள்ள பற்றினால் அவ்வாறு கூறுகின்றனர் என புரிந்து கொள்ளலாம். தமிழால் வாழ்ந்து வரும் உங்களை போன்ற எழுத்தாளர்கள் இவ்வாறான உண்மையை ஏற்க மறுப்பதன் பின்னணி என்ன? ஒரு கன்னட எழுத்தாளராவது அவர் மொழி குறித்த சிறப்பைக் குறைத்துக் கூறுவரா? நடுநிலையாக பேசுவதாக காட்டிக் கொள்வது உங்கள் நோக்கம் என புரிகிறது. ஆனால் உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது.
எல்லோரின் சாயமும் ஒரு நாள் வெளுக்கும்.
மனதில் துணிவும் தெளிவான சிந்தனையும் உறுதியான கருத்தும் இருந்தால் எதற்கும் அஞ்சாத வேண்டியதில்லை ஐயா. கமலஹாசனுக்கு அந்தத் துணிவு இருப்பது பாராட்டுதலுக்கு உரியது ஐயா. தாங்கள் எடுத்து சொல்லிய விதம் அருமை.
எதற்கெடுத்தாலும் புண் படும் நெஞ்சங்கள் போய் மருத்துவம் பார்த்துக் கொள்வது நல்லதுங்க ஐயா.
வணக்கம் .அனைத்து நிலையிலும் நின்று ஆராய்ந்து மிகத்தெளிவாக உங்கள் கோணத்தில் நடுநிலையுடன் கட்டுரையில் கருத்து பதிவிட்டு உள்ளீர்கள் .மிக்க நன்றி .உங்கள் எழுத்து பணி இன்னும் மிளிரட்டும்.நன்றி .