படைப்புக் குழுமம் நேர்காணல் 2

You are currently viewing படைப்புக் குழுமம் நேர்காணல் 2

ஆசுவாசம் தருவது கவிதை

  1. வட்டார இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியே மொழிபெயர்த்தால் அதன் மாெத்தக் கருவும் அந்நிய மொழியில்  மூலத்தின் உயிர்ப்பை இழந்து விடாதா? இதை எப்படிக் கையாள்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு திருப்தியாக இருக்கிறதா? எப்படி அவற்றைச் சரிபார்க்கிறீர்கள்?

ஆங்கிலத்தைப் பொருத்தவரை ஒரு நூலை வெளியிடுவது என்பது நீண்ட முறைப்பாடு (process). அதுவும் மொழிபெயர்ப்பு என்றால் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். பதிப்புக் குழு (Editorial board)  இருக்கும். மொழிபெயர்ப்பைச் சரிபார்ப்பது, அதில் வரும் சிக்கல்களைத் தீர்க்கும் முறைகளை விவாதித்து முடிவெடுப்பது, செம்மைப்படுத்துவது என அக்குழு முறையாகச் செயல்படும். ஆகவே எழுத்தாளருக்கு அதிகக் கஷ்டம் இல்லை. வட்டார வழக்கு என்பது பெரிய பிரச்சினை இல்லை. அதன் பொருளை மொழிபெயர்ப்பாளர் அறிந்துகொண்டு  நிகரான சொல்லைப் பெறுமொழியில் கண்டுபிடித்துவிட்டால் போதும். அதற்கு மிகவும் உழைக்கிறார்கள். மற்றபடி வட்டார வழக்கின் தொனியைப் பெறுமொழியில் கொண்டு வருவது சிரமம். அதனால் மொழிபெயர்ப்பில் சில இழப்புகள் இருக்கும்தான். அதேசமயம் சில பெறுமதிகளும் கிடைக்கும். மூலமொழியில் இல்லாத விளக்கம் மொழிபெயர்ப்பில் வந்து சேரும். அதனால் மொழிபெயர்ப்பில் உயிர்ப்பு இருக்காது என்று சொல்வது சரியல்ல. மனித உணர்வுகள் எல்லா மொழிகளுக்கும் பொது. ஆகவே மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பாகவே பிறமொழி வாசகர்களுக்குப் போய்ச் சேருகிறது. எனக்கு வாய்த்த மொழிபெயர்ப்பாளர்கள் இருமொழிப் புலமை மிக்கவர்கள். வட்டார வழக்கு தொடர்பாக என்னுடன் கலந்து பேசுவார்கள். எந்த அளவுக்கு மேன்மையான மொழிபெயர்ப்பைக் கொடுக்க முடியுமோ அதற்கு மெனக்கெடுவார்கள்.

7. உங்கள் நூல்களில் அதிகமாக விற்பனையான நூல் எது?

‘மாதொருபாகன்.’

8.தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? படிப்பதற்கும் எழுதுவதற்கும் அவகாசம்  இருக்கிறதா?

தற்போது கொஞ்சம் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்து ஒரு நாவலை எழுதவும் திட்டமிருக்கிறது. எனக்கு நிறைய அவகாசம் இருக்கிறது. படிக்கவும் எழுதவும் தவிர எனக்கு வேறு ஈடுபாடுகளும் இருக்கின்றன. ஆகவே எனக்கு ஈடுபாடுள்ள எல்லாவற்றுக்கும் என் நேரத்தைப் பகிர்ந்து தருகிறேன்.

  1. உங்கள் எதிர்காலத் திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா? காெங்கு வட்டாரச் சாெல்லகராதியை மீண்டும் காெண்டு வர வாய்ப்பு உள்ளதா?

கொங்கு வட்டாரச் சொல்லகராதியின் மேம்பட்ட பதிப்பைக் கொண்டுவர விருப்பம் உள்ளது. அதில் நேரத்தைச் செலவழிக்க மனம் ஒன்ற வேண்டும். பார்க்கலாம். மற்றபடி பெரிய திட்டமிடாமல் தோன்றுவதை எழுதிச் செல்லும் மனோபாவத்தையே இப்போது பெற்றிருக்கிறேன்.

  1. ஒரு காலத்தில் எழுத்தாளனாக உருவாக ஏதோ ஒன்று மிகப்பெரும் தூண்டுதலாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் அப்படிச் சாத்தியமில்லை. இணையம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இன்றைய அச்சு, ஒலி, ஒளி, இணைய ஊடகங்களில் அப்படி எழுத்தாளர்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

சமூக ஊடகங்கள் மூலமாக இன்றைக்கு நிறைய எழுத்தாளர்கள் உருவாகிறார்கள். முந்தைய காலத்தைவிடவும் இன்று வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. ஒரு கதை பத்திரிகையில் பிரசுரமாகிக் கவனம் பெறுவதற்கான காத்திருப்பு இன்றைய தலைமுறைக்கு இல்லை. அது நல்லது என்றே நினைக்கிறேன். வாய்ப்பு நிறைய இருப்பதால் எல்லோரும் படைப்பாளர்கள் ஆகிவிட முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. படைப்புணர்வு மிக்கவர்கள் அடையாளம் பெறுவார்கள்.

11. ஒரு எழுத்தாளனாக உங்களை மிகப் பாதித்த எழுத்தாளர் யார்? ஒரு வாசகனாக உங்களை மிகவும் பாதித்த எழுத்தாளர் யார்? அவரிடமிருந்து உங்கள் எழுத்துக்குத் தேவையானது என்று ஏதேனும் இருந்ததா? இல்லை அவரிடம் இருந்து ஏதாவது பெற்றுள்ளீர்களா? ஆம் எனில், அது என்ன?

எப்போதும் ஒருவரை என் ஆதர்சமாக வரித்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவன் நான். திரைப்படத்திலும் அப்படித்தான். என் பால்யம், பதின்வயது தொட்டு ஒற்றை பிம்பத்தில் சிக்கிக்கொள்ளாத மனநிலை எனக்கு வாய்த்திருந்தது. வாசித்து வரும்போது ஆர்.ஷண்முகசுந்தரம் எழுத்துக்களில் பிடிப்பு உருவாயிற்று. கொங்குப் பகுதி வாழ்வை எழுதியவர் அவர். அவர் எழுதாமல் விட்டவை நிறைய எனவும் அவர் எழுதியதற்குப் பிறகான வாழ்க்கை பெரிது எனவும் எனக்குத் தோன்றியது. ஆகவே அவர் எழுத்துக்களின் தொடர்ச்சியாக என் எழுத்துக்களை அமைத்துக்கொள்ளலாம் என நினைத்ததுண்டு. அது ஓரளவு சாத்தியம் ஆகியிருக்கிறது.

படைப்புக் குழுமம் நேர்காணல் 2

ஒரு வாசகனாக என்னைப் பாதித்தவர் கு.ப.ராஜகோபாலன். எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய உளவியல் நோக்கு இயல்பாகக் கைவரப் பெற்றவர் அவர்.  உடல்நிலை இடம் கொடுத்திருந்து இன்னும் சில பத்தாண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால் விரிவான தளத்தை அடைந்திருப்பார் என்று நான் அனுமானிக்கிறேன். அவரது எந்தக் கதையும் ஏமாற்றம் தந்ததில்லை. அவரிடமிருந்து மனிதர்களின் மனதைப் படிக்கும் வித்தையைப் பெற்றுக்கொள்ள முயன்றிருக்கிறேன்.

12. எழுத்தில் உங்கள் முன்னோடியாக யாரைக் கருதுகிறீர்கள்? எதனால் அவரை உங்கள் முன்னோடியாக பார்க்கிறீர்கள்?

முந்தைய பதிலில் சொன்னதே இதற்குப் பொருந்தும். செவ்வியல் இலக்கியத்தை நிரம்பப் பெற்றிருக்கும் மொழியில் எழுதுபவனுக்குப் பலரும் முன்னோடிகள்தான். எனினும் ஒருவரைச் சொல்லியே தீர வேண்டும் என்றால் ஆர்.ஷண்முகசுந்தரம் பெயரைச் சொல்வதில் எனக்குச் சந்தோஷமே.

  1. எல்லோரையும் போல் கவிதையில் தொடங்கிப் பிறகு புனைவு எழுதியுள்ளீர்கள். ஒரு படைப்பாளியாக இரண்டுக்குமான வித்தியாசம் என எதைச் சொல்வீர்கள்?

பல வித்தியாசங்கள் இருக்கின்றன. உணர்வை உடனடியாகப் பிடித்து வைக்க ஏற்ற வடிவம் கவிதை. எழுதி முடித்ததும் பெரிய ஆசுவாசத்தைத் தருவதும் கவிதை. மரபின் தொடர்ச்சியில் ஒரு புள்ளியாகச் சட்டென்று இணைத்துக்கொள்வதும் கவிதை. இந்த வகையில் பிற புனைவு வடிவங்களை அடுத்த நிலையில்தான் வைப்பேன்.

—–   28-05-25

(2020இல் படைப்புக் குழுமம் சார்பில் எடுத்த நேர்காணலின் இரண்டாம் பகுதி.)

Latest comments (3)

T. LAKSHMAN

படைப்பார்கள் மற்றும் படைப்பு மனம் குறித்த உங்கள் பதில்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கிறது ஐயா. படைப்பிரிவு மிக்கவர்கள் அடையாளம் பெறுவார்கள் என்ற தங்களின் கருத்து அருமையாக ஐயா.