ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

You are currently viewing ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

தற்போது இணைய இலக்கிய இதழ்கள் பல வருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. 2000க்குப் பிறகு சில ஆண்டுகள் சிறுகதை எழுத்தாளர்கள் குறைந்திருந்தனர். வெளியீட்டு வாய்ப்புகள் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். இணைய இதழ்களின் எண்ணிக்கையும் பக்க வரையறை பற்றிய பிரச்சினை இல்லாமையும் புதியவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கமும் சேர்ந்து இன்று கதைகளின் எண்ணிக்கையை அபரிமிதமாகக் கூட்டியிருக்கின்றன.

இவ்வாறு வெளியாகும் கதைகள் எல்லாவற்றையும் வாசிக்க முடிவதில்லை. குத்துமதிப்பாகச் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதுண்டு. ஜூன் 2025 ‘நடுகல்’ இதழில் வெளியாகியுள்ள ‘காதுகுத்து’ சிறுகதையை அப்படித்தான் வாசித்தேன். எழுதியவர் ந.சிவநேசன். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆசிரியர் பணி. ஏற்கனவே சில நூல்கள் வெளியாகியுள்ளன.  ‘ஆனந்த விகடன்’ உள்ளிட இதழ்களில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.  ‘காதுகுத்து’ மிகச் சுவாரசியமான கதை. எடுத்துக்கொண்ட பொருளும் சொல்முறையும் கதையைச் சுவையாக்கியிருக்கின்றன.

ஒருவிஷயத்தை அதீதப்படுத்துவது கதைகளில் எளிமையான உத்தி. பிள்ளைகளின் காதுகுத்து நிகழ்ச்சியைச் செலவில்லாமல் சாதாரணமாக நடத்த விரும்பும் ஒருவனை மனைவி, அம்மா உட்பட உறவினர் எல்லாம் சேர்ந்து எப்படிப் படாடோபத்திற்குள் இழுந்து விடுகின்றனர் என்பது கதை. சர்க்கரைப் பொங்கலில் தொடங்கி சைவச்சாப்பாடு, கோழி, கிடா என்று விரிவாகிக் கடைசியில் மூன்று கிடா, முந்நூறு விருந்தினருடன் காதுகுத்து நடக்கிறது. கதைக்குப் பல இடங்களில் உச்சக்கட்டம் வருகிறது; ஆனால் முடிவதில்லை. தொலைக்காட்சித் தொடர் போல மீண்டும் எழுச்சியோடு கதை தொடர்கிறது. எங்கேதான் முடிக்கப் போகிறார் என்பதை அறிய வாசிப்பைத் தொடர வேண்டியிருக்கிறது.

காதுகுத்துக்கு முன்னாள் காதலி வருகிறார். கதையை முடிக்க அது நல்ல இடமாகத் தோன்றியது. ‘இவன் தலையைச் சரிசெய்தபடியே அனைத்தையும் மறந்து அவளருகில் ஓடினான்’ என்று அப்பத்தி முடிகிறது. கதை முடிவுக்கு இந்தத் தொடர் பொருத்தமானதுதான். ஆனால் கதாசிரியருக்கு இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. என்ன செய்ய?

ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

இந்தக் கதையைப் பற்றி எழுத என்னைத் தூண்டியது இன்னொரு விஷயம். கதைக்குள் கோழிக்கடை உரையாடல் வருகிறது. கோழி விலையைக் குறைத்துத் தரும்படி அவன் கேட்கிறான். அதற்குக் கடைக்காரர் சொல்கிறார்: ‘கட்டுபடியாவாதுண்ணா… நோம்பி நேரம்… இந்த வெலைக்கே கிடைக்கலண்ணு ஆளா பறக்கறாங்க.’

‘ஆளா பறக்கறாங்க’ என்று எழுதியிருக்கிறார். ஆள் – நபர் என்று பொருள் படுகிறது.  ‘ஆலாப் பறத்தல்’ என்பது மரபுத்தொடர். நிலையில்லாமல், அமைதியில்லாமல் தொடர்ந்து ஒன்றுக்காக முயன்று கொண்டிருப்பதைச் சுட்ட ‘ஆலாப் பறத்தல்’ என்கின்றனர். எழுத்து வழக்குக்கு இதை மாற்றுகையில் ‘ஆலாய்ப் பறத்தல்’ என எழுதுகின்றனர்.   ‘தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி’யில் இத்தொடர் இடம்பெற்றுள்ளது. அதை அப்படியே தருகிறேன்.

‘ஆலாய்ப் பற : (ஒன்றைப் பெற) தவிப்புடன் அலைதல்; தவித்தல். பணம் பணம் என்று ஏன் இப்படி ஆலாய்ப் பறக்கிறீர்கள்?/ ஒரு வேலை கிடைக்காதா என்று ஆலாய்ப் பறக்கிறான்/ இனிப்புப் பொட்டலத்தைப் பிரிப்பதற்குமுன் ‘எனக்கு எனக்கு’ என்று குழந்தைகள் ஆலாய்ப் பறந்தனர்’ (ப.18).

ஒரு மரபுத்தொடர் உருவாவதற்கும் பின்னணிக் காரணம் உண்டு. அது காலப்போக்கில் மறந்தும் மறைந்தும் போகிறது. இத்தொடருக்கும் அப்படித்தான் ஆகியிருக்க வேண்டும். ஆலா என்பது ஒருபறவை. கடல் சார்ந்து வாழும் பறவை. இப்பறவையைப் பற்றி மா.கிருஷ்ணன் கொடுக்கும் சிறுகுறிப்பு இது:

‘கடற்கரையில் வாழும் கழுகு வகை (White bellied sea eagle). இது பருந்தளவாயிருக்கும்; தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து மற்றெங்கும் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். கடல்மீது நாளெல்லாம் சளைக்காது இறக்கையடித்தும் வட்டமிட்டும் பறந்து உரத்த குரலில் கத்தும். இணைசேரும் காலத்தில் மற்ற காலங்களைவிட அதிகமாகப் பறந்து அலைந்து கூக்குரலிடும். இது நண்டு, மீன் வகைகளைப் பிடித்துத் தின்னும். ஆற்றுக்குருவியையும் ஆலா என்பதுண்டு’ (பறவைகளும் வேடந்தாங்கலும், ப.27).

இப்பறவையைப் பற்றிய குறிப்பு ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ நூலின் பாடல் ஒன்றில்  ‘ஆலாவும் கொக்கும் அருகே வருகுது; ஆசாரக் கள்ளர்போல் நாரை திரியுது’ என வருகிறது. தமிழ்ப் பேரகராதி  ‘கடற்கரைப் பறவை வகை’ எனப் பொருள் தருகிறது. ஆலா என்னும் பறவை இடைவிடாமல் பறந்து திரிவதைப் போல ஒன்றைப் பெறுவதற்காகத் தவிப்பவர், அலைபவர் என்னும் பொருளில் ‘ஆலாப் பறத்தல்’ மரபுத்தொடர் உருவாகியிருக்க வேண்டும். நெய்தல் நில மக்கள் நன்கறிந்த பறவை இது. ஆகவே அங்கேதான் இத்தொடர் முதலில் உருவாகியிருக்கும்; வழங்கியிருக்கும்.

நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட வாய்மொழி வழக்காறுகள் ஒருநிலப் பகுதியிலிருந்து இன்னொரு நிலப்பகுதிக்குப் பரவுவது இயல்பு. அப்படித்தான் மக்கள் வழக்கிலிருந்து எழுத்து வழக்கிற்கு வந்த மரபுத்தொடர்களும் பரவும். நெய்தல் நிலத்தில் உருவாகி வழங்கிப் பின்னர் படிப்படியாகப் பொதுவழக்கிற்கு இது வந்திருக்கும். பறவைப் பெயர்கள், அவற்றின் இயல்புகள் சார்ந்த மரபுத்தொடர்கள் குறைவுதான். அவற்றில் மிக முக்கியமான ஒன்று ‘ஆலாப் பறத்தல் அல்லது ஆலாய்ப் பறத்தல்.’

பயன்பட்டவை:

  1. ந.சிவநேசன், ‘காதுகுத்து’ சிறுகதை, நடுகல் இணைய இதழ், ஜூன் 2025.
  2. பா.ரா.சுப்பிரமணியன் (மு.ஆ.), தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, சென்னை, மொழி அறக்கட்டளை, 1997.
  3. மா.கிருஷ்ணன், பறவைகளும் வேடந்தாங்கலும், நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம், 2023, பதினொன்றாம் பதிப்பு.
  4. தமிழ் லெக்சிகன் தொகுதி 1.

—– 05-06-2025

Latest comments (2)

மைத்திரிஅன்பு

மகிழ்ச்சி தோழர். கதையுடன் சொல்லாய்வையும் விவரித்துள்ளீர்கள். அவசியம் காதுகுத்து கதையை படிக்கத் தோன்றுகிறது. நன்றி