அரசு கல்லூரிகளின் நிலை 4

You are currently viewing அரசு கல்லூரிகளின் நிலை 4

மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு; அலுவலர்களும் உண்டு. வேலை குறைவாக இருக்க வேண்டும் அல்லது வேலையே இருக்கக் கூடாது. ஆனால் ஊதியம் மட்டும் குறையக் கூடாது. உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் உண்டு. அவர்கள் எல்லா விதிகளையும் தம் பணியில் சரியாகக் கடைபிடிப்பது போலப் பாவனை செய்துகொண்டு ஏதாவது ஒரு விதியைச் சொல்லி நல்ல விஷயங்களுக்குத் தடை போடுவர். அத்தகையோரைப் புறமொதுக்குவதுதான் சமாளிக்கச் சரியான முறை.

சேர்க்கைக்கெனக் கல்லூரிக்குள் நுழையும் மாணவர் எவரும் இடமிருந்தும் சேர முடியாமல் வெளியேறக் கூடாது என்பது நான் வைத்திருந்த கொள்கை. அதைத் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் எல்லோரிடமும் வலியுறுத்துவேன். கூடுதலாக இருபது விழுக்காடு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அரசாணை இருக்கிறது. அதையும் பயன்கொண்டோம். சில அறிவியல் துறை ஆசிரியர்கள் ‘ஆய்வக வசதி போதாது. கூடுதல் மாணவர்கள் வேண்டாம்’ என்பார்கள். அவர்களுக்கு நான் ஒருகணக்குச் சொல்வேன்.

ஐம்பது மாணவர்கள் உள்ள வகுப்பில் ஒருநாளுக்கு ஏறக்குறையப் பத்துப்பேர் விடுப்பு எடுப்பர். கிராமத்துக் கல்லூரிகளில் இது இயல்பு. மழை பொழிந்துவிட்டால் விவசாய வேலை தொடங்கிவிடும். குறிப்பிட்ட விழுக்காட்டு மாணவர்கள் வர மாட்டார்கள். முகூர்த்த நாட்களில் பந்தி பரிமாறும் பணிக்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இப்படிப் பல நாட்கள் வருகைப்பதிவு குறையும் என்பதால் சராசரி எண்ணிக்கையில் தான் மாணவர்கள் இருப்பர். ஆகவே ஆய்வகத்தில் பிரச்சினை வராது என்று சொல்வேன். தமிழாசிரியர் ஒருவர் இப்படியெல்லாம் கணக்குச் சொல்வார் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களிடம் பதில் இருக்காது.

இவ்வாறு பல முயற்சி செய்து மாணவர் எண்ணிக்கையைக் கூட்டினோம். அதனால் பல நன்மைகள் கிடைத்தன. முதல் நன்மை சமூக நீதியை நிலைநாட்டுவது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வருவோருக்கு உரிய வாய்ப்பை வழங்குவதுதான் சமூக நீதி. இடமிருந்தும் ஏன் காலியாக வைத்திருக்க வேண்டும்? ஓரிடம் காலியாக இருந்தால் யாரோ ஒருவரின் கல்வி வாய்ப்பை நாம் பறித்திருக்கிறோம் என்று பொருள். நகரக் கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றிய என் நண்பர்களிடம் ‘அங்கு இடம் கிடைக்காத மாணவர்களை இங்கே அனுப்புங்கள்’ என்று சொன்னேன். அப்படிச் சிலர் வந்து பயின்றனர். கல்வியை நாடி நகரத்திற்கே ஏன் செல்ல வேண்டும்? கிராமப்புறங்களிலும் இன்று வாய்ப்புகள் உள்ளன. இடங்களும் இருக்கின்றன. அரசு விடுதிகள் நகரத்தைவிடக் கிராமங்களில் நல்ல பராமரிப்புடன் இருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்திக் கிராமப்புறக் கல்லூரிகளுக்கு வந்தால் இன்னும் பலருக்கு இடம் கிடைக்கும். காலியிடங்களே இல்லை என்னும் நிலை ஏற்பட வேண்டும்.

கிராமத்துக் கல்லூரிகளிலேயே பல்லாண்டு பணியாற்றிய அனுபவம் கொண்டே  கலைக்கல்லூரிகளுக்கும் ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வு தேவை என்பதை வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. கடந்த ஆண்டு அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர். அதற்குள் என்ன மாற்றம் வந்தது எனத் தெரியவில்லை. அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். எங்கோ ஏதோ ஒருகல்லூரியில் இடம் இருக்கிறது என்பதைச் சேர விரும்பும் மாணவர் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? ஒருபகுதியில் இடம் கிடைக்காது; இன்னொரு பகுதியில் இடம் காலியாக இருக்கும். படிக்க விரும்பும் மாணவர் இருக்க ஓரிடத்தைக் காலியாக வைத்திருப்பது அநீதி அல்லவா? ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு முறை என்பது சமூக நீதியை நிலைநாட்டும் ஒருவழி என்பது என் எண்ணம். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும் அரசு, கலைக்கல்லூரிகளுக்கு அதைப் பின்பற்றாதது கல்வியில் பாரபட்சத்தைக் காட்டுவதன் வெளிப்பாடுதான்.

இரண்டாம் நன்மை கல்லூரியின் தரத்தை உயர்த்த முடியும் என்பது. மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான் தரம் உயரும் என்று சிலர் கருதுகின்றனர். அதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. நான் முதல்வராகப் பணியேற்ற நாமக்கல் கல்லூரி தரத்தில் இரண்டாம் நிலைக் கல்லூரி. அதை முதல் நிலைக்கு உயர்த்த வேண்டுமானால் முதுகலைப் படிப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்க வேண்டும். அது அக்கல்லூரியில் இருந்தது. இன்னொரு நிபந்தனை மாணவர் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கு மேலிருக்க வேண்டும். ஆயிரத்து எழுநூறு அளவில் இருந்த எண்ணிக்கை நான் பணியேற்ற முதலாண்டிலேயே இரண்டாயிரத்தைக் கடந்தது. ஆகவே முதல்நிலைக் கல்லூரியாக மாற்றுமாறு அரசுக்கு விண்ணபிக்க முடிந்தது. ‘முதல்நிலைக் கல்லூரியாகத் தரம் உயர்ந்துவிட்டால் உங்களை வேறிடத்திற்கு மாற்றிவிடுவார்கள்’ என்று பயமுறுத்தினர். ‘நான் மாறினால் பரவாயில்லை. கல்லூரி தரம் உயரட்டும்’ என்று அரசுக்கு எழுதினேன். முதல்நிலைக் கல்லூரி ஆயிற்றென்றால் அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியளவு கூடும். கல்லூரிக்குக் கூடுதல் வசதிகளைப் பெற முடியும்.

அரசு கல்லூரிகளின் நிலை 4

மூன்றாம் நன்மை கல்லூரியின் நிதிவசதியை உயர்த்துவது. மாணவர் எண்ணிக்கை கூடும்போது பல விதங்களிலும் நிதிநிலைமை உயரும். கல்லூரிக்குச் செலுத்தும் சில கட்டணத்தொகை கூடினால் அதிலிருந்து சில நல்ல செயல்களைச் செய்ய முடியும். சான்றுக்கு ஒன்றைச் சொல்கிறேன். நூலகக் கட்டணம் மாணவர் செலுத்துவர். அதிலிருந்துதான் நூலக உதவியாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும். நான்  ‘நூலக உதவியாளர்’ என்று சொல்கிறேன். அரசு உருவாக்கிய பணியிடத்தின் பெயர் ‘Library Boy.’ சிலர் இதை ‘நூலகப் பையன்’ என்று மொழிபெயர்ப்பர். நாமக்கல் கல்லூரியில் ஒருபெண் தான் பல ஆண்டுகளாக இந்த வேலையைச் செயதார். ‘நூலக உதவியாளர்’ என்று நான் மாற்றினேன். இப்போது இந்தப் பணியிடமும் நிரப்பப்படுவதில்லை. மாணவர்கள் கட்டும் தொகையிலிருந்துதான் அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை உயர்ந்தால் அவரது ஊதியம் உயரும்.

(தொடர்ச்சி நாளை)

—–  04-05-25

Latest comments (3)

தமிழ் திருவள்ளுவர்

சில அறிவியல் துறை ஆசிரியர்கள் ‘ஆய்வக வசதி போதாது. கூடுதல் மாணவர்கள் வேண்டாம்’ என்பார்கள். அவர்களுக்கு நான் ஒருகணக்குச் சொல்வேன்.

ஐம்பது மாணவர்கள் உள்ள வகுப்பில் ஒருநாளுக்கு ஏறக்குறையப் பத்துப்பேர் விடுப்பு எடுப்பர். கிராமத்துக் கல்லூரிகளில் இது இயல்பு. மழை பொழிந்துவிட்டால் விவசாய வேலை தொடங்கிவிடும். குறிப்பிட்ட விழுக்காட்டு மாணவர்கள் வர மாட்டார்கள். முகூர்த்த நாட்களில் பந்தி பரிமாறும் பணிக்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இப்படிப் பல நாட்கள் வருகைப்பதிவு குறையும் என்பதால் சராசரி எண்ணிக்கையில் தான் மாணவர்கள் இருப்பர். ஆகவே ஆய்வகத்தில் பிரச்சினை வராது என்று சொல்வேன். தமிழாசிரியர் ஒருவர் இப்படியெல்லாம் கணக்குச் சொல்வார் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.
அவர்களிடம் பதில் இருக்காது.

இந்த கருத்தில் துளியும் நியாயம் இல்லை, கிராமப்புற மாணவனாகிய நான் அறிவியலின் கோட்பாட்டு பகுதியை படித்து செய்முறை பகுதிகளை என்னுடைய சமூக பொருளாதார சூழல் களால் சமரசம் செய்து இருந்தால், இன்று எனது பணியில் சிறப்பாக செயல்பட முடியாது… இப்படியாக அறிவியல் பாடங்களை படிப்பதற்கு சம்மந்தப்பட்ட மாணவர்கள் அப்படிப்பை தேர்வு செய்யலாம் வேறு பாடபிரிவை தேர்வு செய்வதே அவருக்கு பயன்தரும்.

தமிழ் திருவள்ளுவர்

“எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு; அலுவலர்களும் உண்டு. வேலை குறைவாக இருக்க வேண்டும் அல்லது வேலையே இருக்கக் கூடாது. ஆனால் ஊதியம் மட்டும் குறையக் கூடாது. உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் உண்டு. அவர்கள் எல்லா விதிகளையும் தம் பணியில் சரியாகக் கடைபிடிப்பது போலப் பாவனை செய்துகொண்டு ஏதாவது ஒரு விதியைச் சொல்லி நல்ல விஷயங்களுக்குத் தடை போடுவர். அத்தகையோரைப் புறமொதுக்குவதுதான் சமாளிக்கச் சரியான முறை”. இதில் முதல் வரியை தவிர அனைத்து அனைத்து வரிகளும் உண்மை, ஆனால் சில என்பதற்கு பதில் பல என்று இருந்திருக்க வேண்டும், அதை சொல்வதில் ஆசிரியருக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

Dharmalingam

தடைகளை புறம் ஒதுக்குவதும் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளும் சிறப்பு.