போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

You are currently viewing போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

கம்பராமாயணத்தைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதன் கவிச்சுவை, சொல்திறன், யாப்பிலக்கணப் புலமை, விரிந்த பார்வை முதலியவற்றுக்காகப் போற்றிப் பயில்பவன் நான். கம்பரின் கருத்துக்களைப் பொருத்தவரை இருவிதமாகக் காணலாம். சில கருத்துக்களில் காலத்தை அனுசரித்துச் சென்றிருக்கிறார். சிலவற்றில் காலத்தை மீறிச் சிந்தித்திருக்கிறார். மீறல்களில் பல இன்றும் பொருந்துவனவாக உள்ளன.

இராமனுக்கு முடிசூட்டத் தசரதன் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. ஒவ்வொன்றாக விவரித்து வரும் கம்பர் அரசேற்கும் இராமனுக்கு உறுதிப்பொருள்களை அறிவுறுத்தும் பகுதி ஒன்றை வைக்கிறார். அரசன் எவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என்று வசிட்டர் மூலம் கூறும் பகுதி அது. பதினாறு பாடல்களைக் கொண்ட அப்பகுதி விரிவான ஆய்வுக்குரியது. அவற்றுள் எவை அக்காலத்தைப் பிரதிபலிப்பவை, எவை இக்காலத்திற்கும் உரியவை, எவை எக்காலத்திற்கும் உரியவை எனப் பகுத்துப் பார்க்கலாம்.

அக்காலம், இக்காலம் மட்டுமல்ல, எக்காலத்திற்கும் உரிய விஷயத்தை ஒருபாடல் சொல்கிறது. அது போர் பற்றியது. சங்கத் தமிழர் பற்றிப் பேசுகையில் ‘காதலும் வீரமும்’ என்று சொல்வோம். வீரம் போற்றப்பட்ட காலத்திலேயே போருக்கு எதிரான குரல்களும் கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இராமாயணம் அடிப்படையில் ‘போர்க்காப்பியம்.’ இராவணன் உள்ளிட்ட அசுர குலத்தை அழித்தொழிப்பதற்காகத் திருமாலே அவதாரம் எடுத்து வந்த கதை. கம்பராமாயணத்தின் ஆறு காண்டத்தில் மிகவும் பெரியது யுத்தகாண்டம். அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்பில் 10533 பாடல்கள் உள்ளன. அவற்றுள் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் எண்ணிக்கை 6185. யுத்தகாண்டம் மட்டும் 4348 பாடல்கள் கொண்டது. ஏறத்தாழ ஐந்தில் இரண்டு பகுதிப் பாடல்கள். அவ்வளவு விரிவாகப் போரைக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் யுத்தகாண்டம் போரை விதந்து பேசுவதல்ல. அப்பகுதி துயரக் கிடங்கு. எங்கும் அவல ஓலம். ஒப்பாரி பொழியும் கண்ணீரில் மூச்சு முட்டும். அவற்றை வாசிக்கும் யாருக்குப் போரைக் கொண்டாடத் தோன்றும்?

போரின் கொடுமையை எடுத்துக்காட்டத்தான் கவிஞர்கள் விஸ்தாரமாக அதைப் பாடியிருக்கிறார்கள் போல. சமகாலப் போர்களை நாமும் கண்டு வருகிறோம். இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள். அமெரிக்க வியட்நாம் போர். வங்கதேசப் பிரிவினைக்காக இந்திய பாகிஸ்தான் போர். ஈரான், ஈராக் போர். முடிவேயில்லாமல் தொடரும் இஸ்ரேல், பாலஸ்தீனப் போர். சமீபத்தில் ரஷ்யா, உக்ரைன் போர். தமிழீழத்திற்கான போர். இதோ இப்போது இந்திய பாகிஸ்தான் போர். ஆப்ரேஷன் சிந்தூர் என்கிறார்கள். எல்லாப் போரும் பதற்றத்தைத் தருபவை. உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் எல்லா உயிர்களையும் அது பாதிக்கும். மகிழ்ச்சியான வாழ்வைப் பறிப்பதே போர்.

தேசம், பாதுகாப்பு, மொழி, உரிமை என எந்தப் பேரால் போர் நடந்தாலும் அதை ஆதரிக்க முடியாது. நாகரிகம் அடைந்துவிட்டோம்,  உலகம் எங்கும் ஜனநாயகம் தழைக்கிறது என்று பேசும் காலத்தில் பேச்சு வார்த்தையின் மூலம் விட்டுக் கொடுத்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாதா? எல்லாக் காலத்திலும் போர் என்பது அதிகாரம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. ஜனநாயகத்திலும் ஒருபிரிவினர் தம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போரைக் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எத்தனை பேர் செத்தால் என்ன, மனித உழைப்பு எவ்வளவுதான் வீணாகப் போனால் என்ன, மக்கள் மீது விலைவாசியும் வரிச்சுமையும் கூடினால் என்ன, சமூகம் வறுமையில் தவித்தால் என்ன, எங்கள் அதிகாரம் நிலைத்தால் போதும் என்று கருதும் ஆட்சியாளர்களைப் பெற்றால் போர்த் துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

தம் காப்பியத்தின் பெரும்பகுதியில் போரை விவரித்து எழுதிய கம்பரும் அதற்கு எதிரானவர்தான். அயோத்தியா காண்டம் மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் வசிட்டர் வாயிலாகப் போருக்கு எதிரான தம் கருத்தை அவர் பேசியிருக்கிறார். அரசாட்சி ஏற்க இருக்கும் இராமன் எவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று அறிவுறுத்துகையில் ‘போர் கூடாது’ என்கிறார். ஒருநாட்டு அரசனுக்குப் பகைவர்களே இருக்கக் கூடாது; அண்டை நாட்டினரை எல்லாம் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். எப்படி நட்பாக்கிக் கொள்வது? அதை ஆட்சியாளர்தான் கண்டறிய வேண்டும். யாரோடும் பகையில்லை என்றால் போர் வராது. போர் இல்லாமல் எந்த அரசன் ஆள்கிறானோ அவனுக்குப் புகழ் சேரும். அதைப் ‘போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது’ என்று அற்புதமான தொடரால் கூறுகிறார்.

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

போரை ஆதரிக்கும் மன்னன் தம் மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருப்பான். அவர்கள் உழைப்பை எல்லாம் போர்க்கருவிகளைத் தயாரிப்பதிலும் போர் வீரர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து தருவதிலும் செலவழிப்பான். அவையா மக்களுக்குத் தேவை? அடிப்படைத் தேவைகள் எல்லாம் நிறைவேறி அமைதியான வாழ்க்கை வாழவே மக்கள் விரும்புவர். போரில் வேறென்ன நடக்கும்? ஏராளமான வீரர்கள் மாண்டு போவர். வீரர்களும் மக்கள்தானே? ஒருவீரன் இறந்து போனால் அவன் குடும்பத்தினர் படும் துயரம் மாளாது. இவ்வுலகத்தில் ஓர் உயிர் பிறப்பது வாழ்வதற்குத்தான். நல்வாழ்க்கை வாழ்ந்து முதுமை எய்திச் சாக வேண்டும். எக்காரணத்தாலும் அகாலத்தில் சாகக் கூடாது. போர் இல்லை என்றால் படை வீரர்கள் சாக மாட்டார்கள். போர் நடக்க நடக்க அழிவு கூடும். ஒவ்வொன்றாக அழிந்து அரசனும் அழிந்து போவான். அதை ‘வேரொடும் கெடும்’ என்கிறார் கம்பர்.

அந்தப் பாடல்:

யாரொ டும்பகை கொள்ளலன் என்றபின்

போரொ டுங்கும் புகழொடுங் காதுதன்

தாரொ டுங்கல்செல் லாதது தந்தபின்

வேரொ டுங்கெடல் வேண்டலுண் டாகுமோ.

சந்தி பிரித்த வடிவம்:

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்

தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்த பின்

வேரொடும் கெடல் வேண்டால் உண்டாகுமோ?

 

கம்பரை ஆதரிப்போர் போரை ஆதரிக்க முடியாது. நான் கம்பர் பக்கம்.

 

—–   09-05-25

Latest comments (2)

பாரத் தமிழ்

மிகச் சிறந்த மற்றும் காலத்திற்கு ஏற்ற கட்டுரை ஐயா