புதுமைப்பித்தன் நினைவு நாள் இன்று (ஜூன் 30). ஆ.இரா.வேங்கடாசலபதியின் பேருழைப்பில் ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் ஆகிய முப்பெருந்தொகுதிகளை அடுத்து நான்காவதாக இக்களஞ்சியம் வெளியாகிறது. புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் உரைகள் எனப் பலவற்றையும் கொண்ட இந்நூல் கிட்டத்தட்ட 1200 பக்கங்கள் கொண்டது. நூலைக் கண்ணால் கண்டும் கையால் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறேன். இனித்தான் வாசிக்க வேண்டும்.
சென்னையில் இன்று நடைபெறும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துக்கள்.
000
தனிப்பாடல்களில் புதுமைப்பித்தனுக்கு நல்ல ஈடுபாடு. ஏதாவது ஒரு பாடலை எடுத்துத் தம் பார்வையில் விவரித்துச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். நெகிழ்வாகக் கண்டால் தனிப்பாடல் பற்றி அவர் எழுதியவை ஒன்பது கட்டுரைகள். தனிமை, காணாமற் போன பாக்குவெட்டி, இலைக்குணம், பஞ்சமோ பஞ்சம், வாணன்: ஒரு இலட்சிய வீரன், நமது கலைச்செல்வம், கூழுக்குப் பாடி, பட்டணங்களைப் பற்றி ஆண்டானின் அபிப்பிராயம், தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை ஆகியவை.
புதுமைப்பித்தன் மேற்கோள் காட்டும் பழந்தமிழ்ச் செய்யுள்களின் பாடம் பற்றி அவர் கட்டுரைத் தொகுப்பின் பதிப்பாசிரியராகிய ஆ.இரா.வேங்கடாசலபதி இப்படிக் கூறுகிறார்:
‘தம் கட்டுரைகளுக்கிடையில் புதுமைப்பித்தன் மேற்கோள் காட்டியுள்ள பழஞ்செய்யுள்கள் மூலங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளன. சில பாடல்களுக்கு அவர் வேறு பாடங்களைக் கொண்டுள்ளது தெரிகிறது. புதுமைப்பித்தன் கொண்ட பாடங்களே இப்பதிப்பில் கொள்ளப்பட்டுள்ளன. (பாடல்களை எடுத்தாளும்பொழுது பல சமயங்களில் அவர் நினைவிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.)’ (ப.30).
சலபதி கூறுவது போல நினைவிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கக் கூடும் என்றே நானும் கருதுகிறேன். பெயர் தெரிந்த புலவராக இருப்பினும் ‘பேர் ஊர் தெரியாத கவிஞன்’ என்று சொல்வதும் புலவர் பெயரைக் குறிப்பிடாமல் விடுவதும் நினைவிலிருந்து எழுதியவை என்பதைக் காட்டுகின்றன. மூலபாடம் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. நினைவிலிருந்து எழுதியதால் புதுமைப்பித்தன் பாடங்கள் சில மூலத்திலிருந்து வேறுபடுகின்றன. ஒப்பிலாமணிப் புலவர் எழுதிய ‘ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ’ என்று தொடங்கும் வெண்பாவின் மூன்றாம் அடியை ‘திரண்டதோ! தினகரனும் தேரும்’ என்று முச்சீராகப் புதுமைப்பித்தன் மேற்கோள் (ப.61) காட்டுகிறார். ‘திரண்டதோ! கங்குல் தினகரனும் தேரும்’ என நான்கு சீர் கொண்ட அடி அது. ‘கங்குல்’ விடுபட்டதால் யாப்புச் சிதைவு நேர்கிறதே தவிரப் பொருளில் ஏதும் பிரச்சினையில்லை. எழுதும்போது ஒருசீர் நினைவில் வராமல் போயிருக்கலாம். அதற்கென்ன, பொருள் வருகிறதே என்று புதுமைப்பித்தன் எழுதிச் சென்றிருக்கக் கூடும். அந்த அசட்டையும் அவர் இயல்பு.
மேற்கோள் காட்டும் இன்னொரு பாடலில் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் பாடம் அப்பாடலின் சுவையைக் கூட்டியிருக்கிறது. ‘காணாமற்போன பாக்குவெட்டி!’ என்றொரு கட்டுரை. தம் பாக்குவெட்டி காணாமல் போனபோது இராமச்சந்திர கவிராயர் எழுதிய பாடலைப் பற்றிய கட்டுரை அது. இந்தப் பாக்குவெட்டிப் பாடலை வைத்துப் பலர் கட்டுரை எழுதியுள்ளனர். ‘பாக்குவெட்டி பறக்குமா?’ என்னும் தலைப்பில் கு.அழகிரிசாமி எழுதியிருக்கிறார். ‘பாக்குவெட்டி மறைந்த மாயம்’ என நா.பார்த்தசாரதி எழுதிய கட்டுரை ஒன்றுண்டு. வேறு சிலரும் இப்பாடலைப் பற்றி எழுதியிருக்கின்றனர்.
தனிப்பாடல் திரட்டுக்களில் இப்பாடல் உருவான பின்னணி பற்றி வெவ்வேறு கதைகள் கூறப்படுகின்றன. பாட்டு மட்டும்தான் இருக்கிறது. பின்னணிக் கதையை நம் விருப்பத்திற்கேற்ப உருவாக்கிக் கொள்வதில் தடையேதுமில்லை. சத்திரத்தில் அவர் தங்கியிருந்த போது பாக்குவெட்டி திருட்டுப் போய்விட்டது, வீட்டில் வைத்திருந்தபோது காணாமல் போய்விட்டது, சிலர் வேண்டுமென்றே எடுத்து ஒளித்து வைத்தனர் என்றெல்லாம் கதைகள் உள்ளன. சுவரில் இப்பாடலை எழுதி வைத்தார் என்றும் சொல்வர். சாதாரணப் பாக்குவெட்டிதான் அது என்போரும் அடகு வைக்கத் தகுதியானதென்றால் வெள்ளிப் பாக்குவெட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்போரும் உண்டு. வெள்ளியில் பாக்குவெட்டி வைத்திருந்த புலவர் என்றால் கொஞ்சம் கெத்துத்தான். அப்படியே வைத்துக்கொண்டு புலவரைப் பெருமைப்படுத்துவோம். சரி, புலவருடைய பாக்குவெட்டி எப்படியோ அன்று காணாமல் போய்விட்டது; ஆனால் பாட்டு கிடைத்தது. இன்று பாக்குவெட்டி என்னும் கருவியே இல்லாமல் போய்விட்டது. அக்கருவி எப்படியிருக்கும் என்றறியும் ஆவலை இப்பாடல் ஏற்படுத்துகிறது.
திரட்டுக்களிலும் கட்டுரையாளர்களின் மேற்கோள்களிலும் இப்பாடல் உள்ள விதம் இது:
விறகு தறிக்கக் கறிநறுக்க
வெண்சோற் றுப்புக் கடகுவைக்கப்
பிறகு பிளவு கிடைத்ததென்றால்
நாலா றாகப் பிளந்துகொள்ளப்
பறகு பறகென் றேசொறியப்
பதமாய் இருந்த பாக்குவெட்டி
இறகு முளைத்துப் போவதுண்டோ?
எடுத்தீ ராயின் கொடுப்பீரே!
பாக்குவெட்டி பாக்கை வெட்ட மட்டும் பயன்படவில்லை. பல வேலைகளுக்குப் பயன்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு விறகு தறிக்கலாம். சிறுகுச்சிகளைத் தறிக்கலாம் போல. காய்கறி நறுக்கவும் ஆகுமாம். அரிவாள்மனை, கத்தியைவிட இது வசதியோ? அவை இல்லாத காரணத்தால் இதில் நறுக்கினார்களோ? சோற்றுக்குப் போடும் உப்பு வாங்க இதை அடகு வைக்கலாமாம். உப்பு அத்தனை விலையுயர்ந்த பண்டம் அன்று. ‘நெல்லும் உப்பும் நேரே’ என்று இரண்டையும் சமமான நிலையில் வைத்துச் சங்க இலக்கியம் சொல்லும். கொட்டைப்பாக்கு கிடைத்தால் அதைப் பல துண்டுகளாக்கிக் கொள்ளலாம். அதுதான் முதன்மைப் பயன்பாடு. ஆனால் புலவரின் பட்டியலில் அது நான்காம் இடத்திற்கு வந்துவிட்டது. இன்னொரு பயன்பாடு பாருங்கள். முதுகு அரித்தால் ‘பறக்பறக்’ என்று பாக்குவெட்டியால் சொறிந்து கொள்ளலாம். அப்பேர்ப்பட்ட பாக்குவெட்டி இறகு முளைத்தா பறந்து போயிருக்கும்? யாரோ எடுத்திருக்க வேண்டும். எடுத்தவர்களை நோக்கிக் ‘கொடுப்பீரே’ என்று கோரிக்கை வைக்கிறார் புலவர்.
கடைசி அடியில் ‘இறகு முளைத்துப் போவதுண்டோ?’ என்று கேட்கிறார் புலவர். ‘முளைத்து’ என்னும் சொல்லில் வரும் ‘ப்’புக்குப் பதிலாக ‘ம்’ போடுகிறார் புதுமைப்பித்தன். ‘பாக்குவெட்டி இறகு முளைத்தும் போவதுண்டோ?’ என்பது புதுமைப்பித்தன் பாடம். பாக்குவெட்டி திருட்டுப் போகலாம். காணாமல் போகலாம். ஒளித்து வைத்திருக்கலாம். யாரேனும் எடுத்துப் பின் கொடுக்க மறந்திருக்கலாம். எத்தனையோ வாய்ப்பிருக்கிறது. இறகு முளைத்துப் பறந்து போக வாய்ப்பில்லை. நடக்காத செயல் அது என்பதைக் குறிக்கத்தான் புதுமைப்பித்தன் ‘ம்’ போடுகிறார். ‘இறகு முளைத்துப் போவதுண்டோ?’ என்பதில் இருக்கும் சாதாரணம் ‘இறகு முளைத்தும் போவதுண்டோ?’ என்றால் அசாதாரணம் ஆகிறது. கேலிப்பொருளும் வருகிறது.
புலவர் எப்படி எழுதினாரோ தெரியவில்லை. புதுமைப்பித்தன் போட்ட ‘ம்’ நன்று.
பயன்பட்ட நூல்கள்:
- ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), புதுமைப்பித்தன் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2002.
- பழ.அதியமான் (ப.ஆ.), கு.அழகிரிசாமி கட்டுரைகள் தொகுதி 2, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2023.
- நா.பார்த்தசாரதி, தமிழ் இலக்கியக் கதைகள், தமிழ் புத்தகாலயம், சென்னை, 2001, மூன்றாம் பதிப்பு.
—– 30-06-25
வணக்கம் ஐயா. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பகுதியில் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றிங்க ஐயா. புதுமைப்பித்தன் நினைவுநாளில் புதுமைப்பித்தனின் தனிப்பாடல் ஆர்வத்தையும் அவர் எழுதிய தனிப்பாடல் கட்டுரைகளின் விவரங்களை பதிவு செய்திருப்பது அருமை. பாக்குவெட்டியை காட்சிப் படுத்திய விதமும் பாக்குவெட்டி தொடர்பான கட்டுரையும் புதுமைப்பித்தனை நினைவு கூற வைத்தது. சிறப்பான பதிவு.