தொடரும் ‘தொண்டு’

You are currently viewing தொடரும் ‘தொண்டு’

தொண்டு என்னும் சொல் கொங்கு வட்டாரத்தில் வழங்கும் பொருள் பற்றி எழுதியிருந்ததை வாசித்த நண்பர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவை இச்சொல் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.  ‘தொண்டு’ என்பதன் பழைய பொருள்  ‘அடிமை’ தான். தமிழ்நாட்டில் அடிமை முறை இல்லை என்று சொல்ல முடியாது. இருந்தமைக்குப் பல ஆதாரங்கள் உள்ளன.  ஆ.சிவசுப்பிரமணியன் ‘தமிழகத்தில் அடிமை முறை’ என்னும் தலைப்பில் நூலே எழுதியிருக்கிறார்.

அடிமைத்தனம் பற்றியே இருபதாம் நூற்றாண்டு வரைக்கும் தொண்டும் இதன் பின்னொட்டுச் சொற்களும் வழங்கி வந்திருக்கின்றன. தொண்டச்சி, தொண்டி ஆகியவற்றுக்குத் ‘தேவடியாள்’ எனப் பேரகராதி பொருள் தருகிறது.  ‘வேட்கை மது மொண்டு தரும் தொண்டியர்கள்’ என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். தொண்டுப்பணி, தொண்டூழியம், தொண்டுகிழவன் என்றெல்லாம் வழக்கு இருந்திருக்கிறது. ‘தொண்டப்பறையன்’ என்பது ‘பயிரிடுதல் முதலிய தொழில் செய்யும் பறையர் வகை’ என்கிறது. இப்போது இப்படி ஒருபிரிவு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

நன்பர் ராஜன்குறை ‘தொண்டர்’ பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இன்று பெரியபுராணம் என வழங்கப்படும் நூலுக்குச் சேக்கிழார் இட்ட பெயர் ‘திருத்தொண்டர் புராணம்.’ தொண்டரடிப்பொடியாழ்வார் இருக்கிறார்.  திருக்குறிப்புத் தொண்டர் ஒருவரும் பெரியபுராணத்தில் இருக்கிறார். கடவுளுக்கு அடிமை வேலை செய்யும் தீவிரமான பக்தரைத் ‘தொண்டர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அடியார் என்பதும் அப்பொருள்தான். கடவுளுக்கு மட்டும் அடிமை செய்வோர் அடியார். தமிழ்ப் பேரகராதி ‘தொண்டர் – அடிமைகள் (slaves)’ என்றே பொருள் தருகிறது. அடியார் என்று இன்னொரு பொருள் கொடுத்து அதற்கு  Devotees, as slaves of God என்கிறது.

இச்சொல்லின் பொருள் வளர்ச்சியை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிப்படுத்துகின்றது. அதில் ‘தொண்டூழியம்’ இடம்பெற்றிருக்கிறது. அதை ‘அருகிய வழக்கு’ என்கிறது. ‘கிராமத்தில் ஜமீன்தார், பண்ணையார் போன்றோரிடம் தலைமுறை தலைமுறையாகச் செய்யும் அடிமை வேலை’ எனப் பொருள் தருகிறது. சான்றுத்தொடர் ஏதுமில்லை. அருகிய வழக்காக இருப்பதால் இப்பொருள் சார்ந்து சான்றுத் தொடர் கிடைக்கவில்லை போல.  இச்சொல்லுக்கே ‘எரிச்சலூட்டும் சிறுசிறு வேலைகள்’ எனவும் பொருள் தருகிறது. அதற்குச் சான்றாக ‘உனக்குத் தொண்டூழியம் செய்வதே என் வேலையாகப் போய்விட்டது என்று அம்மா புலம்பினாள்’ என்னும் தொடர் இருக்கிறது.

இது இன்றும் பேச்சு வழக்கில் இருக்கும் பொருள்.  ‘அடிமை வேலை’ என்னும் பொருளில்தான் பயன்படுகிறது. அதை உணர்ந்து பயன்படுத்துவதில்லை. ஆகவே ‘எரிச்சலூட்டும் சிறுசிறு வேலைகள்’ எனப் பொருள் நெகிழ்ந்துவிட்டது. சில சொற்கள் பொருள் மாற்றம் பெற்றுவிட்டாலும் மக்கள் வழக்கில் பழைய பொருளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும். இடைவிடாமல் வேலை செய்யும் ஒருவர் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்த ‘உனக்குத் தொண்டூழியம் செய்ய வேண்டுமா?’ என்று கேட்கும் வழக்கு அடுத்தடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறது. பழமொழிகள் தலைமுறைகளைக் கடப்பது போல, மரபுத்தொடர்கள் தலைமுறைகளைக் கடப்பது போலச் சில சொல்வழக்குகளும் தலைமுறைகளைக் கடக்கும். தொண்டூழியம் அதற்கு நல்ல சான்று.

இதே அகராதியில் ‘தொண்டுதுரவு’ என்பது இலங்கை வழக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. பேரகராதியிலும் இச்சொல் இருக்கிறது. ‘பணிவிடை’ எனப் பொருள். இதை இலங்கை வழக்காக க்ரியா அகராதி பதிவு செய்கிறது. ‘எடுபிடி வேலை’ எனப் பொருள். தொண்டுகிழவன் – முதிர்ந்த கிழவன் எனத் தமிழ்ப் பேரகராதி பதிவு செய்துள்ளது. ‘தொண்டுகிழவன் இவன் ஆரென’ என்பது திருப்புகழ். ‘தொண்டு கிழம்’ க்ரியா அகராதிப் பதிவு. இதில் ஒற்று மிகுத்திருக்கலாம். தொண்டுக்கிழம் என்றால் ‘மிகவும் வயதான ஆண் அல்லது பெண்’ எனப் பொருள் உள்ளது. அடிமையாக இருப்போர் உடல் கூனி இருக்க வேண்டும், தரையைப் பார்த்து நடக்க வேண்டும் என்பதற்காகக் கழுத்தில் ஒரு கட்டையை அல்லது மண்பாண்டத்தைக் கட்டிவிடுவர். வயது முதிர்ந்தோர் கூன் விழுந்து உடல் வளைந்திருப்பர். அடிமையின் உடல் போல மாறிவிடுவதால் ‘தொண்டுக்கிழம்.’

தொடரும் ‘தொண்டு’

அடிமையைக் குறிக்கும் தொண்டு வசைச்சொல்லாகவும் இழிபொருளிலும் வழங்கியுள்ளது. சரி, இக்கால வழக்குப் பொருள் என்ன? க்ரியா அகராதி ‘தன்னலம் கருதாமல், எந்தவித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றுக்காகச் செய்யும் பணி’ என்று கூறுகிறது. தொண்டர் என்பதற்கு  ‘ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர்’ என்று பொருள் தருகிறது. ‘தொண்டு நிறுவனம் – லாப நோக்கில் இல்லாமல் பொதுத்தொண்டு செய்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட அரசு சாரா அமைப்பு’ என்று ஒருபதிவும் உண்டு. தொண்டு நிறுவனம் என்பது தமிழ்ப் பேரகராதி காலத்தில் இல்லை.

1930களில் வெளியான தமிழ்ப் பேரகராதியில் தொண்டு, தொண்டர் ஆகிய சொற்களுக்கு இப்பொருள்கள் இல்லை. அடிமை என்பதே முதன்மைப் பொருளாக உள்ளது. 1992இல் முதல் பதிப்பு வெளியான க்ரியா அகராதியில்  ‘அடிமை’ என்னும் பொருளே இல்லை.  ‘தன்னலம் கருதாமல் செய்யும் பணி’ என்பதே முதன்மைப் பொருள். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளில் இத்தகைய பொருள் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இம்மாற்றத்திற்கான மூலத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? மகாகவி பாரதியாரை நாடிப் பார்க்கலாம்.

(தொடர்ச்சி நாளை)

—–   21-05-25

Latest comments (2)

எல் கோபாலகிருஷ்ணன்

‘தொண்டூழியம்’என்பதற்கு எங்கள் பக்கம்’ வேதடித்தல்’என்று எரிச்சல் கலந்த கோபத்தில் சொல்வது வழக்கம்!
கால் பாதத்தின் அடிப்புறம் அல்லது உடம்பில் எங்காவது ‘அடி’யின் பின் விளைவு இருந்து வரும்போது துணித் திம்மையை நெருப்பில் சூடு செய்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஒத்தடம் தருவதை வேது அடித்தல் என்று சொல்வது உண்டு.