உ. வே. சா. : நுட்பங்களின் வெளிப்பாடு

You are currently viewing உ. வே. சா. : நுட்பங்களின் வெளிப்பாடு

ஏப்ரல் 28 உ. வே. சாமிநாதையர் நினைவு நாள். அவரது பதிப்புகள், எழுத்துக்கள் மூலம் தமிழைக்  கற்று வருபவன் நான். என் வாசிப்பு அனுபவங்களையும் அவதானிப்புகளையும் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ந்து எழுதி வருகிறேன். உ. வே. சா. வை முன்வைத்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதியவற்றைத் தொகுத்து  ‘உ. வே. சாமிநாதையரை ஒதுக்கலாமா?’ என்னும் தலைப்பில்நூலாக்கியுள்ளேன். அதற்கு எழுதிய முன்னுரை இது.

உ. வே. சா. வின் அரிய புகைப்படம் ஒன்றைப் புத்தாக்கம் செய்து தந்தவர் நண்பர் சுந்தரன் முருகேசன். அவருக்கு நன்றி.

000

உ.வே.சாமிநாதையரை இருவிதங்களில் அணுகுவது என் எழுத்துக்களின் பொதுவியல்பு. தமிழ்ச் சமூகம் இன்று பெருமை கொள்வதற்குக் காரணமாக இருக்கும் செவ்விலக்கியத் தொகுதியில் பெரும்பாலானவற்றைப் பொதுவெளிக்குச் சென்று சேரும் வகையில் உ.வே.சா. பதிப்பித்துத் தந்தார். அவரது பதிப்பு நுட்பங்களையும் பதிப்பு வரலாற்றையும் ஆய்வது ஒருவிதம். அது மிகவும் ஆர்வமூட்டும் விஷயம். அவர் பதிப்புகளை ஆராய்வதன் மூலமாகவே பதிப்பியல் துறையை ஓரளவு கற்றுக்கொண்டுள்ளேன்.

ஒவ்வொரு நூலும் வாசகர் கையில் சென்று சேரும்போது எத்தகைய தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த தெளிவு அவருக்கு இருந்தது. சில கூறுகள் பிடிபட்டுவிட்டால் அதற்குள்ளேயே சுற்றிச் சுழலும் செக்குமாட்டுத்தனத்தை அவரிடம் காண முடியாது. அத்தன்மைகளை பெருக்கி வளர்த்தெடுப்பதற்குத் தொடர்ந்து கடுமையாக உழைத்துள்ளார். ஒருநூலின் அடுத்தடுத்த பதிப்புகளில் அவ்வளர்நிலையின் விரிவாக்கத்தைக் காணலாம். அவர் கை பட்ட சிறுநூல்கூடப் பொன்போல் மிளிரும். அத்தகைய பதிப்பு நுட்பங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.

அவர் எழுதிய உரைநடை நூல்களிலிருந்து பெறுபவற்றைச் சமகாலம் சார்ந்து விளக்குதல் இரண்டாம் விதம். அவர் செயல்பட்ட முறை, தமக்கென உருவாக்கிக் கொண்ட பார்வை, தம் பணிகள் பற்றிய தெளிவு, எதையும் ஆவணப்படுத்தும் இயல்பு முதலியவற்றை அறிய மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். சமகால அரசியல் சார்ந்தும் சமூகப் பிரச்சினைகள் சார்ந்தும் எழுதுவதற்கு உ.வே.சா. உதவுகிறார். இத்தகைய கட்டுரைகள் சற்றே எளிமையானவை. ஒருசெய்தியை மையமிட்டு எழுதியிருக்கிறேன். இந்நூலின் தொடக்கத்தில் இத்தகைய கட்டுரைகளே அமைந்திருக்கின்றன. பதிப்பு சார்ந்தவை நூலின் பின்பகுதியில் இருக்கின்றன.

இவை வெளிவந்தபோது பலவித எதிர்வினைகளைப் பெற்றன. என் சரித்திரச் செம்பதிப்பு தொடர்பான கட்டுரைக்குப் பதிலாகப் ப.சரவணன் விரிவான கட்டுரை எழுதினார். ‘சாமிநாதனும் சிவகுருநாதனும்’ கட்டுரைக்குத் தி.அ.ஸ்ரீநிவாஸன் எதிர்வினை ஆற்றினார். ‘யாருக்கு யார் வழிகாட்டி?’ கட்டுரைக்கு இரா.இராஜாவின் எதிர்வினை வந்தது. அவற்றால் எனக்குக் கிடைத்த பலன் இன்னொரு கட்டுரை எழுதும் வாய்ப்பு. அவர்கள் எழுதியவற்றைப் பின்னிணைப்பில் கொடுத்திருக்கிறேன். என் கட்டுரைக்கு அடுத்து எதிர்வினைக் கட்டுரையை வாசிக்க வேண்டும். தொடர்ந்து என் பதில் கட்டுரையை வாசிக்கலாம்.

விவாதத்தில் கருத்து சார்ந்து பேசுவதையே பல்லாண்டுகளாகப் பின்பற்றி வருகிறேன். இந்த விவாதங்களிலும் நிலை தவறவில்லை. யாரையும் எதிரியாகவோ பகைவராகவோ நிறுத்திப் பார்க்கும் மனநிலை இல்லை. விவாதத்தில் பங்கேற்பவர் சற்றே பிறழ்ந்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டாலும் நிலை தவறக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறேன். விவாதங்கள் கருத்துக்களைச் செழுமைப்படுத்தும். வாசிப்புச் சுவையையும் கூட்டும்.
000

உ. வே. சா. : நுட்பங்களின் வெளிப்பாடு
‘உ.வே.சாமிநாதையர்: பன்முகப் பேராளுமை’ நூலை அவரது நூற்றைம்பதாம் ஆண்டை ஒட்டித் தொகுத்தேன். அப்போதும் அதன் பிறகும் எழுதிய கட்டுரைகள் ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ நூலில் இடம்பெற்றன. பின்னர் எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. உ.வே.சாமிநாதையர் எழுதிய முன்னுரைகளைத் தொகுத்துச் ‘சாமிநாதம்’ என்னும் தலைப்பில் ப.சரவணன் நூலாக்கம் செய்தார். அதற்கு விரிவான முன்னுரை எழுதினேன்.

இடையில் சில ஆண்டுகள் எழுத்திலிருந்து விலகியிருந்த போது மீண்டும் என்னை எழுதத் தூண்டியவர் உ.வே.சா. தான். சென்னை, மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி 2015 பிப்ரவரி 17 அன்று சென்றேன். பிப்ரவரி 19 உ.வே.சா. பிறந்த நாள். அதை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் அந்நிகழ்வில் என்னைப் பேச அழைத்தனர். பேசும் மனநிலை இல்லை என்று சொல்லித் தவிர்த்தேன். எனினும் உ.வே.சா. என்னை விடவில்லை. ஓராண்டுக்குப் பிறகு 2016 பிப்ரவரியில் அவர் பிறந்த நாள் விழாவில் பேசினேன். பொதுநிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்னும் முடிவைக் ‘கல்லூரிக்குள் நடக்கும் விழாதானே’, ‘உ.வே.சாமிநாதையர் உங்களுக்குப் பிடித்த அறிஞர் அல்லவா?’, ‘அவரைப் பற்றிய நூலைத் தொகுத்திருக்கிறீர்கள், கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள், அதையே பேசுங்கள்’ என்றெல்லாம் என்னை இளக்கிப் பேசச் சம்மதம் பெற்றனர்.

அப்போதைய உரையின் மையப்பகுதியை ‘அறிவுத் துறையாகும் மதங்கள்’ எனப் பின்னர் கட்டுரையாக்கினேன். தொடர்ந்து உ.வே.சா.வின் பிறந்த நாள், நினைவு நாள்களில் ஒவ்வொரு கட்டுரை எழுதுவதை வழக்கமாகக் கொண்டேன். அவையல்லாமலும் பதிப்புகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். எல்லாம் சேர்ந்துதான் இந்த நூல் உருவாகியுள்ளது. காலச்சுவடு, அருஞ்சொல், மின்னம்பலம், உயிர்மை ஆகிய இதழ்களில் இக்கட்டுரைகள் வெளியாகின. என் வலைத்தளத்தில் சில கட்டுரைகளை வெளியிட்டேன்.

முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கட்டுரைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை ஒன்றும் இதில் உள்ளது. ‘விளிம்புநிலை மக்களும் உ.வே.சா.வும்’ என்னும் தலைப்பில் 25-02-19 அன்று பாளையங்கோட்டை, சேவியர் கல்லூரி, பொருளியல் துறையில் ஆற்றிய ‘அல்போன்ஸ் மாணிக்கம்’ அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்தினேன். அவ்வுரை கட்டுரையாகக் காலச்சுவடு இதழில் வெளியாயிற்று. ‘தமிழ்விடு தூது பதிப்பு வரலாறு’ மட்டும் எதில் வெளியாயிற்று என்று தெரியவில்லை. எழுதி வெளியிட மறந்திருக்கவும் கூடும்.

—– 29-04-25

 

Latest comments (1)