அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2

You are currently viewing அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் தரமான ஆசிரியர்கள். துறைசார் புலமை மிக்கவர்களையே நியமித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இயல்புக்கேற்ற சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைவெளி குறைவு. பாடம் அல்லாது மாணவர் திறனை ஊக்குவிக்கப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஏராளமான மன்றங்கள், மையங்கள் செயல்படுகின்றன. அவை பெருமளவு கருத்துரிமை கொண்டவையாக இருக்கின்றன. மாணவர்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. மாணவர்களே முன்னின்று எல்லாவற்றையும் செய்கிறார்கள். உள்ளே வந்துவிட்ட மாணவர் ஒருவர் வெறும் படிப்போடு மட்டும் இருக்கவே முடியாது. ஏதாவது ஒன்றில் பங்கெடுத்தே ஆக வேண்டும்.

படிப்பிலும் கள ஆய்வு சார்ந்தவை நிறைய இருக்கின்றன. கலைப்படிப்புகளில் களச் செயல்பாட்டை இணைத்திருப்பது அருமை. ஒப்படைவுகளை இணையம் மூலமாகவே அனுப்பிவிடலாம். பரந்த வாசிப்பும் தொடர்ந்து எழுதுவதும் அச்சூழலில் இயல்பாகவே இருக்கின்றது. கல்வியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு பயிலும் புதுச்சேரி மாணவர் சுக்னனிடம் பேசினேன். படைப்பிலக்கியத் தாள் பாடத்தில் இருக்கிறது. கதைகளும் கட்டுரைகளும் எழுதும் பயிற்சி தீவிரமாக வழங்கப்படுகிறது. எழுதிக் கொடுத்த பிறகு ஆசிரியருடன் அமர்ந்து விவாதித்துத் திருத்தித் திருத்தி எழுத வேண்டுமாம். அடேங்கப்பா… இந்தப் பயிற்சிகள் எல்லாம் இளம் வயதில் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே நடப்பது சாதாரணமல்ல. வட்ட வடிவில் சுழன்று சுழன்று செல்லும்  கட்டிடத்தைக் காட்டி அதுதான் நூலகம் என்றனர். நூலகத்திற்கு விடுமுறையே கிடையாது. இரவுபகல் எந்நேரத்திலும் மாணவர்கள் சென்று வாசிக்கலாம். அடையா நெடுங்கதவு.

எங்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். கர்நாடகத்திலிருந்து வந்து படிப்போரும் பிற மாநிலங்களில் இருந்து வருவோரும் இந்தியில் பேசிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆகவே இயல்பாகப் பேசுவதில் மொழிப் பிரச்சினை இருக்கிறது. தொடர்ந்து ஒரே வகையில் தயாரிக்கும் உணவைச் சில மாதம் உண்டால் வெறுத்துப் போகும். வெவ்வேறு பகுதியில் இருந்து வருவோர் அனைவருக்கும் ஏற்ற உணவு கிடைக்காது. இது போலச் சிலசில.

மற்றபடி எனக்கு அப்பல்கலைக்கழகத்தின் அமைப்பும் பாடத்திட்டமும் கற்பித்தல் முறையும் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம் அற்புதம். நான் அரசு கல்லூரியில் பல்லாண்டு பணியாற்றியவன். ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதே பாவம், சேர்ந்து நடந்தால் மாபாவம் என்று கருதும் ஆசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதிலும் பையன்களை விட்டுவிடுவார்கள். பெண்களைத்தான் பாடாய்ப் படுத்துவார்கள். அழைத்துக் கண்டிப்பார்கள். அறிவுரை சொல்வார்கள். தங்கள் பெற்றோரை அழைத்து வரச் சொல்வார்கள். பெண்கள் சரியாக இருந்தால் ஆண்களும் சரியாக இருப்பார்கள் என்று கருதும் மனோபாவம். அச்சூழலைப் பார்த்து வெறுத்திருந்த எனக்கு இப்பல்கலைக்கழகச் சூழல் பெரிதும் உவப்பாயிருந்தது.

கல்வி சார்ந்து தொடர்பணிகள் இருப்பதால் இங்கே அறிவுப்பூர்வமான செயல்பாடுகளும் அதிகம். அப்படியான ஒன்றுதான் சாவித்திரி அம்பேத்கார் பண்பாட்டு மையம். பெயரிலேயே பாலின சமத்துவம் நிலவுகிறது. அம்மையம் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறது. பெரியார் பிறந்த நாளை ஒட்டியும் சில நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். விருப்பமுள்ள மாணவர்கள் அம்மையத்தில் உறுப்பினர்களாக இருக்கலாம். பலதுறை, பல மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் புரிதல் உள்ளோர் அதில் இணைந்திருக்கின்றனர். ஏப்ரல் மாதத்தில் பூலே அம்பேத்கார் வாரம் கொண்டாடுகின்றனர்.

ஏப்ரல் 13 ஞாயிறு அன்று மாலை ஐந்து மணிக்கு முதல் நிகழ்ச்சி இருந்தது. சமூகச் செயல்பாட்டாளர் ஒருவர் பேசினார். அது முடிந்ததும் என் நிகழ்ச்சி. கால் மணி நேரத்திற்கான என் உரையை எழுத்து வடிவில் கொடுத்திருந்தேன். அதை மதிவதனி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். நான் பேசி முடித்ததும் மதிவதனியே ஆங்கிலத்தில் வாசித்தார். அடுத்து மாணவர்களுடன் கலந்துரையாடல். ஆங்கிலத்திலும் தமிழிலும் கேள்விகள் வந்தன. ஆங்கிலத்தில் இருப்பினும் கேள்வியைப் பெரும்பாலும் எனக்கு மொழிபெயர்க்கத் தேவையில்லை. கேட்டுணர்ந்து தமிழில் பதில் சொன்னேன். அங்கு ஆசிரியராகப் பணியாற்றும் தீபா என் பதில்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தீபா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மால்கம் ஆதிசேஷையா தொடங்கிய ‘சென்னை ஆராய்ச்சி வளர்ச்சி மையத்தில்’ தம் முனைவர் பட்ட ஆய்வை முடித்தவர் தீபா. பேராசிரியர் ஆனந்திதான் அவருக்கு வழிகாட்டி.

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2

என் எதிர்பார்ப்புக்குக் கிட்டத்தட்ட இருநூறு மாணவர்கள் கூடியிருந்தனர். என் உரையை உள்வாங்கியும் என் படைப்புகளை வாசித்திருந்தும் கேள்விகளைக் கேட்டனர். படைப்புகளில் சாதிப் பிரச்சினையைக் கையாள்வது தொடர்பான கேள்விகள் தொடர்ந்து வந்தன. சட்டென்று இடைமறித்தது ஒரு கேள்வி. ‘சாதியைப் பற்றி எழுதினால் தான் இலக்கியம் ஆகுமா?’ அதற்கு இப்படிப் பதில் சொன்னேன்:

‘இந்தியச் சமூகத்தில் சாதி அடையாளம் தவிர்க்க இயலாதது. இருமனிதருக்கு இடையே உள்ள உறவைச் சாதி தீர்மானிக்கிறது. நம் கிராமங்களில் சாதிப் பாகுபாடு தெளிவாக இருக்கிறது. இந்த நிலையில் எந்தப் பிரச்சினையை எழுதினாலும் அதற்குள் சாதி எப்படி வந்துவிடுவதைத் தவிர்க்க முடியாது. தவிர்த்தால் எழுத்தாளர் திட்டமிட்டுத் தவிர்க்கிறார் அல்லது அவரது அவதானிப்பு குறைபாடுடையது என்று எளிதில் கண்டுகொள்ளலாம். சாதிப் பிரச்சினையை மையப்படுத்தாமல் வேறு கருப்பொருள்களைக் கொண்டு எழுதிய படைப்புகள் அனேகம் இருக்கின்றன. நான் எழுதிய ‘கழிமுகம்’ நாவல் சமகாலக் கல்விப் பிரச்சினையைப் பேசுகிறது. நுட்பமாகப் பார்த்தால் அதில் வரும் குடும்பம் இடைநிலைச் சாதியைச் சார்ந்தது என்று கண்டு கொள்ளலாம். அந்த அளவுக்குத்தான் அதில் சாதி அடையாளம் இருக்கும்.’

கேள்விகள் முடிவதாயில்லை. என் படைப்புகள் சார்ந்த சந்தேகங்கள், தம் கருத்துக்கள், விமர்சனங்கள் எல்லாம் கேள்விகளாக வந்தன. பொதுவாகக் கேட்பவர்களைவிட வாசகராயிருந்து கேட்பவர்கள் மேல்  கவனம் குவியும்.  அவர்கள் மனம் கொள்ளும் வகையில் நிதானமாகப் பதில் சொன்னேன். கடைசியாக மூன்று கேள்விகள் என்று அறிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டியானது. வழக்கம் போலக் கையொப்பம், புகைப்படம் எல்லாம் முடிய எட்டுமணி ஆகிவிட்டது. ஒருமணி நேரம் என்று திட்டமிட்ட நிகழ்ச்சி. அடுத்து வேறேதும் இல்லை என்பதால் நேரப் பிரச்சினை எழவில்லை.

ஆசிரியர்கள் தம்முடன் இரவுணவுக்கு அழைத்தனர். இரவே திரும்புவதாக இருந்ததால் அவ்வழைப்பை ஏற்க இயலவில்லை. மாணவர்களுடன் சென்று அவர்களுடனே உண்டுவிட்டுக் கிளம்பினேன். அழைத்தவர்கள் நிகழ்ச்சி பற்றி மனநிறைவுடன் இருந்தனர். ரோகன்குமார் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மும்பையில் சில அமைப்புகளுடன் சேர்ந்தும் செயல்படுகிறார். அங்கே அழைத்தால் வருவீர்களா என்று கேட்டார். வருகிறேன் என்று ஒப்புதல் தெரிவித்தேன். மதிவதனி தம்மால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் இலக்கியத்தை மொழிபெயர்க்க முடியும் என்று நம்பிக்கையோடு சொன்னார். வாய்ப்பிருக்கும்போது சொல்கிறேன் என்றேன். இளைய தலைமுறையில் மொழிபெயர்ப்பு ஆர்வத்தோடு வருவோர் பலரைக் காண்கிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்போர் தேவை இப்போது கூடியிருக்கிறது. அதை இளைய தலைமுறை சிறப்பாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை ஏற்பட்டது.

மிகச் சிறந்த கல்வி வளாகமான அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஒருபோதும் என் மனதை விட்டு அகலாது.

—–   26-04-25

Latest comments (3)

Arunachalam Ramasami

பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை மிக விரிவாக எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி. கல்வி கற்பித்தலில் கலந்துரையாடல் ஒரு முக்கியமான நடைமுறையாகும். தாங்கள் கால் மணி நேரம் உரையாற்றிப் பல மணித்துளிகள் கலந்துரையாடலுக்கு ஒதுக்கியது ஒரு சிறந்த பயிற்றுவிக்கும் முறை. மொழிபெயர்ப்பு மிகவும் முக்கியமானது. நானும் பாரதியாரின் சுயசரிதை கனவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளேன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். தமிழ் ஆங்கில மொழிகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்த்து வருகிறேன்.

குணசேகரன் பெ

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகம் ஐயா. இந்தாண்டு இரண்டு நாட்கள் கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகச் சிறந்த அனுபவமாக அமைந்திருந்தது