அரசு கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஏதோ ஒருவகையில் அரசாங்கம் புதிய கட்டிடங்களைக் கட்டுகிறது. அதனால் துப்புரவுப் பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது. நான் பணியாற்றிய கல்லூரியில் மூன்று பணியாளர்கள் மட்டும் இருந்தனர். இரண்டாயிரம் மாணவர்கள் பயிலும் கல்லூரி; ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த கல்லூரி. வகுப்பறைகள், முற்றம், கழிப்பறைகள், வளாகம் அனைத்தையும் பராமரிக்க மூவர் எப்படிப் போதும்? போதாமையால் அவர்கள் மீது தினமும் புகார்கள் வரும். அவர்கள் விளக்கம் சொல்வர். எங்கள் வகுப்பறையைக் கூட்டி ஒருவாரம் ஆகிறது, இந்தக் கழிப்பறை சுத்தமாக இல்லை என்பது போன்ற புகார்கள்; தினமும் என்னென்ன வேலை செய்கிறேன் என்பதான விளக்கம். இவற்றை ஆராய்ந்து பணியாளர் பற்றாக்குறைதான் பிரச்சினைக்குக் காரணம் என்பதை உணர்ந்து மூன்று பேர் இருந்ததை அப்படியே இன்னொரு மடங்காக்கி ஆறாக உயர்த்தினேன். அதுவும் போதவில்லை. அவ்வளவுதான் சாத்தியம். அதன் பின் வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் பெருமளவு சுத்தமாகப் பராமரிக்க முடிந்தது. அலுவலக உதவியாளர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். வருகைப் பதிவேட்டை அனைத்துத் துறைகளுக்கும் கொண்டு கொடுத்துப் பின்னர் எடுத்து வருவதற்கே ஒருமணி நேரம் ஒன்றரை மணி நேரம் ஆகும். சில துறைகளில் யாரோ ஓராசிரியர் தாமதமாக வருகிறார் என்று உடனே கொடுக்காமல் நிறுத்தி வைத்துவிடுவர். இப்படிப் பல வேலைகள். இவற்றை இருவர் மட்டும் எப்படிச் செய்ய முடியும்? அவர்களுக்கு நிற்க நேரம் இருக்காது. பல வேலைகளும் சுணங்கின. நேரத்தைப் பின்பற்றவே முடியாத நிலை இருந்தது. இரண்டு உதவியாளர்களைக் கூடுதலாகப் பணியமர்த்தித்தான் சமாளிக்க முடிந்தது.
நாமக்கல் கல்லூரியில் வரலாற்றுத் துறை இளங்கலைப் படிப்பு தொடங்கி இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. நான் முதல்வர் பணியேற்றபோது அத்துறையில் ஓராசிரியர்கூட இல்லை. துறைப் பொறுப்பு இன்னொரு துறைத்தலைவரிடம் இருந்தது. மொழிப்பாட வகுப்புகள் மட்டும் அம்மாணவர்களுக்கு நடந்தன. முதன்மைப் பாட ஆசிரியரே இல்லாமல் ஒருதுறையை எப்படி நடத்த முடியும்? எனக்கு முன்னர் இருந்த முதல்வர் பலமுறை கடிதம் எழுதியும் கௌரவ விரிவுரையாளர்கூட நியமிக்கவில்லை. துறைக்கென்று ஓர் அறையே இல்லாத நிலை. உடனடியாக இரண்டு ஆசிரியர்களை நியமித்தேன். துறைக்கு ஓர் அறையை ஒதுக்கிக் கொடுத்தேன். ஒருதுறையில் நிரந்தர ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒதுக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையில் பாதிக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் அத்துறைக்கு ஒன்றோ இரண்டோ கௌரவ விரிவுரையாளர்களை நியமித்தேன்.
இத்தனை பணியாளர்களை எப்படி நியமிக்க முடிந்தது? பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதியைக் கொண்டுதான் செய்ய முடிந்தது. மாதம் ஒன்றுக்கு முப்பது பணியாளர்களுக்கு இவற்றின் நிதியில் இருந்துதான் ஊதியம் வழங்கினோம். ஒவ்வொருவருக்கும் குறைவான ஊதியம்தான். ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரத்திற்குள். உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு அவர்கள் சென்றால் இதைவிட ஒருமடங்கோ இருமடங்கோ கூடுதல் ஊதியம் பெறுவார்கள். எனினும் அவர்களின் குடும்பச் சூழல், கல்லூரிக்கு அருகில் இருந்த ஊரிலேயே வசித்தது, சனி ஞாயிறு இருநாட்கள் விடுமுறை என்னும் வசதி, அரசு விடுமுறை நாட்கள், உடல்நிலை இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஊதியம் குறைவாக இருப்பினும் பரவாயில்லை என்று வந்தோரைப் பணியமர்த்தினோம்.
ஆம், ஆள் கிடைக்காத நிலையில் யார் வருகிறார்களோ அவர்களைப் பணியமர்த்தினோம். என்னிடம் தமிழ் இலக்கியம் பயின்ற மாணவியர் இருவர் அலுவலக உதவியாளர் பணிக்கு வந்தனர். எம்.ஏ.,பி.எட். முடித்தவர்கள். எனக்கு மனமில்லை. வீட்டில் இருப்பதற்கு இங்கே வந்தால் நன்றாக இருக்கும் ஐயா, ஊதியம் குறைவாக இருந்தால் பரவாயில்லை என்று சொன்னார்கள். தற்காலிக வேலையில் சேர்ந்தால் கொஞ்ச நாளில் நிரந்தரம் செய்துவிடுவார்கள் என்று நினைத்தனர். அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை முதலிலேயே தெளிவாக எடுத்துச் சொன்னோம். இவ்வாறு பணியமர்த்திய ஊழியர்களுக்கு வழங்கும் மொத்த ஊதியம் ஒவ்வொரு மாதமும் சில லட்சம் ரூபாய் வரும்.
இத்தனை பேருக்கும் ஊதியம் வழங்கப் பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் மூலம் எப்படி நிதி திரட்ட முடிந்தது? அரசு விதித்திருக்கும் குறைந்தபட்ச சந்தாத் தொகையைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கூடுதலாக நன்கொடை பெறுவதற்கும் விதி இருக்கிறது. மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை கேட்டுப் பெறுவோம். மாணவர் சேர்க்கைக் கட்டணம் இல்லை என்பது அரசு விதி. அதனால் கல்லூரி நிலையுணர்ந்து சிலர் நன்கொடை செலுத்துவர். சிலர் தர மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பர். எடுத்துரைத்தும் விடாப்பிடியாக இருப்போரிடம் சந்தாத் தொகை மட்டும் பெற்றுக் கொள்வோம். சிலரது பொருளாதார நிலை மோசமாக இருக்கும். பெற்றோர் அற்றோர், மாற்றுத் திறனாளர், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளோர் ஆகியோரிடம் எந்த நன்கொடையும் பெறுவதில்லை. தம் ஏழ்மை நிலையை எடுத்துச் சொல்வோரையும் தொந்தரவு செய்வதில்லை.
ஆசிரியர்கள், துறைத்தலைவர்கள் ஆகிய அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஏதேனும் பிரச்சினை வந்தால் முதல்வரிடம் அனுப்புவார்கள். சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து அவர்கள் மனம் கொள்ளும்படி பேசிச் சரிசெய்வேன். எனக்குப் பேச்சு வார்த்தையில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆசிரியர், முதல்வர் என்னும் மனநிலையில் அதிகாரத் தொனியில் பேசினால் பிரச்சினை பெரிதாகும். அதிகாரத்தை ஓரம் கட்டிவிட்டுச் சக மனிதர் என்னும் உணர்வில் பேசும்போது நம் நிலையை அவர்களுக்கு உணர்த்த முடியும்; அவர்கள் நிலையையும் நாம் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பரஸ்பரப் புரிதல் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க உதவும்.
(தொடர்ச்சி நாளை)
—– 02-05-25
நல்ல முன்னெடுப்பு சார்; நீங்கள் சிறந்த நிர்வாகி. ஒரு தமிழாசிரியர் நிர்வாகியாகும்போது எங்கனம் எதிர்கொள்ளப்பட்டார் என்பதையும் நீங்கள் எழுத வேண்டும்.