பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதிநிலையை அதிகரிக்க இன்னொரு முக்கியமான வழி மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கிராமத்து மாணவர்களுக்குச் சில படிப்புகளைப் பற்றித் தெரியாது. ஆகவே அவற்றின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அப்படிப்புகளின் சிறப்பையும் பயின்றால் கிடைக்கும் வேலைவாய்ப்பையும் பற்றி எடுத்துச் சொல்லி மாணவர் சேர்க்கையை ஊக்குவித்தோம். நாமக்கல் கல்லூரியில் புள்ளியியல் படிப்பு இருக்கிறது. அதன் சிறப்பைப் பற்றி, வேலைவாய்ப்புகள் பற்றிக் கிராமப்புற மாணவர்களுக்குச் சிறிதும் தெரியாது. எடுத்துச் சொல்லி மாணவர்களைச் சேர்த்தோம்.
அத்துறைத் தலைவர் சுஜாதா அவர்கள் தம் துறைச் சிறப்புகளை, வாய்ப்புகளைப் பற்றிச் சலிப்பில்லாமல் வரும் மாணவர்களிடம் எல்லாம் விளக்கினார். முதல்வர்கள், ஆசிரியர்களுக்கே தம் துறை சார்ந்த புறக்கணிப்பு இருந்ததை என்னிடம் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். ஒற்றை இலக்கத்தில் இருந்த எண்ணிக்கை கூட்டு முயற்சியின் பலனாக இரட்டை இலக்கத்தை எட்டியது. என்னைப் பொருத்தவரைக்கும் ஒருதுறை உயர்ந்தது, ஒருதுறை தாழ்ந்தது என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் உள்ளது. சிலவற்றுக்குப் பருண்மையான முக்கியத்துவம் இருக்கும். சிலவற்றுக்கு நுண்மையான முக்கியத்துவம் இருக்கும். கண்ணுக்குத் தெரியும் பருண்மை மட்டுமே உண்மை என்று மயங்குபவரே மிகுதி. அறிவியல் படிப்பைப் போற்றும் பலருக்குக் கலைப்படிப்புகள் பயனற்றவை என்னும் எண்ணம் உண்டு. அவர்களிடம் நான் ஒருகேள்வி கேட்பேன்.
‘உங்கள் துறைப் பாடங்களை நீங்கள் எதன் வழியாகப் படிக்கிறீர்கள்?’
‘மொழி வழியாக.’
‘உங்கள் துறையைக் கற்பதற்கு அடிப்படையாக இருக்கும் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் நாங்கள்.’
சில காரணங்களால் குறிப்பிட்ட துறைக்கு மவுசு உருவாகிறது. இன்னொரு துறைக்கு மவுசு குறைகிறது. அது அப்படியே நீடிப்பதில்லை. சக்கரம் மேலும் கீழும் சுழல்வது போலத் துறை சார்ந்த மவுசிலும் மாற்றம் ஏற்படும். ஆகவே ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று கருதுவது முட்டாள்தனம்.
இட ஒதுக்கீட்டின் நோக்கம் சகலருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான். அரசு வகுத்திருக்கும் மாணவர் சேர்க்கை விதிகளைக் கறாராகப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிச் சில பிரிவுகளில் காலியிடங்களை அப்படியே வைத்திருப்பர். சேர்க்கை முடியும் நாள்வரை அப்படியே வைத்திருந்து கடைசி நாளில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்றால் அதுவரைக்கும் மாணவர்கள் காத்திருப்பார்களா? அந்த நாளிலும் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சரி, காலியிடங்கள் எப்படி உருவாகின்றன? குறிப்பாகக் கிராமத்துக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்வர். ஆனால் முப்பது விழுக்காடு இட ஒதுக்கீடு (முஸ்லீம்களுக்கான மூன்று விழுக்காட்டையும் சேர்த்து) அப்பிரிவுக்கு உண்டு. அப்பிரிவிலிருந்து மாணவர் யாரேனும் வருவர், வருவர் என்று எதிர்பார்த்துக் கடைசி வரை காலியாக வைத்திருந்தால் பயனில்லை. கொங்குப் பகுதி மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மைச் சாதியினர் தனியார் கல்லூரிகளில் சேர்வதையே விரும்புகின்றனர். அதற்கு அவர்களது பொருளாதார மேம்பாடு முக்கியமான காரணம்.
பிற்படுத்தப்பட்ட சாதியினர் விண்ணப்பங்களே மிகக் குறைவாகத்தான் வரும். விண்ணப்பிப்போரிலும் இருபத்தைந்து விழுக்காட்டினர்தான் வந்து சேர்வர். ஏதோ அரிதாக ஒன்றிரண்டு பேர் கடைசி நேரத்தில் வந்தால் கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெற்றுச் சேர்த்துக்கொள்ள வழிவகையுண்டு. ஆகவே பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரிவு விண்ணப்பங்கள் எல்லாம் முடிந்ததும் காலியாக இருக்கும் இடங்களில் பிறபிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றிக் கடைசி வரையில் காத்திருக்காமல் முன்கூட்டியே சேர்த்தோம்.
நாமக்கல் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அரசு கல்லூரிக்கு வருவது அரிது. பத்து விழுக்காடு சேர்ந்தார்கள் என்றால் பெரிய விஷயம். அதேசமயம் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை இருப்பதால் அங்கிருந்து பழங்குடியின மாணவர்கள் மிகுதியாக வருவர். அவர்களுக்கு இருக்கும் இடஒதுக்கீடு ஒரே ஒரு விழுக்காடு. நூற்றுக்கு ஒன்று என்றால் ஆயிரம் இடங்கள் உள்ள கல்லூரியில் பழங்குடியின மாணவர்கள் பத்துப் பேரைத்தான் சேர்க்க முடியும். கொல்லிமலையில் பல கிராமங்கள் இருக்கின்றன. இன்று அது தனிவட்டமாக உருவாகியுள்ளது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பர். நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளேயே இருக்கும் கல்லூரிகளில் சேரவே அவர்கள் பெரிதும் விரும்புவர்.
‘பதி எழு அறியாப் பழங்குடிகள்’ அல்லவா? மலையிலிருந்து இறங்கி நாமக்கல்லுக்கு வருவதே பெரிய விஷயம். வேறு நகரங்களை நோக்கிச் செல்லும் மனநிலை வராது. அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டு அளவைக் கடந்து சேர்க்க என்னென்ன வாய்ப்புகள் உண்டோ அவற்றை எல்லாம் பயன்படுத்த வேண்டும். கூடுதல் மதிப்பெண் கொண்டவர்களைப் பொதுப்பிரிவில் சேர்க்கலாம். மாணவர் சேராத இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள இடங்களில் அவர்களைச் சேர்க்கலாம். மாணவர்கள் அதிகம் விரும்பாத பாடப்பிரிவுகளில் அவர்களுக்கு இடம் வழங்கலாம். கவனத்துடன் திட்டமிட்டால் ஓரளவு வழிவகை உண்டு.
இருபாலர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதற்குக் கிராமத்துப் பெற்றோர் தயங்குவர். சாதி கடந்த காதல் பற்றியும் பாதுகாப்பு குறித்தும் அச்சம் நிலவும். மகளிர் ஓய்வறை, கழிப்பறை வசதிகள், விடுதி வசதி முதலியவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் பாதுகாப்பு பற்றிய அச்சத்தைப் போக்க முடியும். பெண் ஆசிரியர்களிடம் பேசச் சொல்வதும் உண்டு. அவர்களின் தொடர்பு எண்களைக் கொடுத்து எந்த நேரத்திலும் பேசலாம் என்று நம்பிக்கையை ஏற்படுத்துவோம். ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவியரிடமும் பேசச் சொல்வோம். அடிக்கடி பெற்றோர் வந்து துறைத்தலைவரிடமும் ஆசிரியர்களிடமும் தம் பெண்ணின் படிப்பு பற்றி நேரில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். கல்லூரியில் ‘மகளிர் மன்றம்’ என்னும் அமைப்பு உள்ளது. அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்வோம்.
(தொடர்ச்சி நாளை)
—– 03-05-25
தகவல்களும் ஆலோசனை மிகச் சிறப்பு
எதார்த்தமான பதிவு. கலை அறிவியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நிரப்பப்பட்டால் மலைவாழ் மாணவர்கள் பயன்பெற முடியும்.