ஓர் ஆசிரியர் கேட்டார், ‘மாணவர் சேர்க்கைப் பணியில் நாங்கள் ஈடுபடுவதால்தானே பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நிதி வருகிறது. எங்களுக்குத் தேநீர்கூட வாங்கிக் கொடுக்க மாட்டீர்களா?’
ஊதியம் குறைவாக உள்ள ஆசிரியர் கேட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர் நிரந்தர ஆசிரியர். ‘அறம்’ கட்டுரை சொல்வது போல லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவர். ஒரு தேநீருக்குச் சண்டை போட்டார். அவருக்குச் சொன்னேன்,
‘கல்வி, கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காகத்தான் அரசு ஊதியம் தருகிறது. மாத ஊதியம் போதவில்லை, நான் வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கிறேன் என்று சொல்லுங்கள். எழுதித் தர வேண்டாம், சான்று எதுவும் கேட்கவில்லை, வாய்மொழியாகச் சொல்லுங்கள் போதும். உங்களுக்கு மட்டும் தேநீரும் மதிய உணவும் வாங்கித் தரச் சொல்கிறேன்.’
வெட்கத்தோடு வெளியேறிப் போனார். குறைந்தபட்சம் வெட்கமாவது இருக்கிறதே என்று மகிழ்ந்தேன். பொதுநிதியைக் கையாள்வது பற்றி அறவுணர்வு இன்மையே இந்தக் கேள்விக்கெல்லாம் காரணம். இன்றைக்கும் ஒரு தேநீருக்கு ஆலாய்ப் பறக்கும் இழிநிலை அரசு ஊழியர்கள் பலரிடம் இருக்கிறது.
நிதி மேலாண்மையில் மிக முக்கியமானது தேவையற்ற செலவுகளைக் குறைத்தல். நேர்மையும் சிறப்பான நிதி மேலாண்மைத் திறனும் உள்ளவர்களைப் பொறுப்புகளில் அமர்த்துவதும் முக்கியமானது. அதையும் செய்தேன். அத்தகைய ஆசிரியர்கள் என் மதிப்பிற்கு உரியவர்கள். ஆத்தூர் கல்லூரி நகரத்திலிருந்து பத்துக் கிலோ மீட்டர் தள்ளியிருக்கிறது. முதன்மைச் சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அங்கே பணியாற்றுவதை ஆசிரியர்களோ அலுவலர்களோ விரும்புவதில்லை. பல பணியிடங்கள் காலியாகத்தான் இருக்கும். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில்லை என்றால் அக்கல்லூரியை நடத்துவது கடினம்.
நான் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளராக வேதியியல் துறை ஆசிரியர் தர்மராஜ் இருந்தார். கணக்கு வழக்குகளில் துல்லியமானவர். அக்கழகப் பதிவைப் புதுப்பிப்பதில் பெருமுயற்சி எடுத்தவர். அதற்காகச் சேலத்திற்குப் பலமுறை செல்வார். போக்குவரத்துச் செலவைக்கூடச் சொந்தப் பணத்திலிருந்து செய்வார். நீங்கள் உழைப்பைக் கொடுப்பதே போதும், பணம் செலவழிக்க வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘இதொன்னும் பெரிய செலவில்லைங்கையா’ என்பார். பணியாளர்களை மரியாதையாக நடத்துவார். அவர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் கிடைக்கச் செய்வார். வீண் செலவுக்கு ஒருபோதும் அனுமதி தர மாட்டார். தம் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அவர் செய்ததை முழுமனதோடு ‘சேவை’ என்று சொல்வேன். அவர் அலைச்சலையும் வேலையின் இயல்பையும் பார்த்துவிட்டு ஒருமாணவரைப் பெற்றோர் ஆசிரியர் கழக உதவியாளராக நியமித்தேன். கல்லூரி நேரத்திற்குப் பிறகு பகுதி நேரமாக அவர் வேலை செய்தார். கல்லூரி முதல்வராக இருந்து சில நிறைவளிக்கும் வகையில் நான் பணியாற்றியதற்குக் காரணம் தர்மராஜ் போன்ற சில அற்புதமான ஆசிரியர்கள்தான். முதல்வர் பொறுப்பிலிருந்து நான் விலகியதும் அவரும் பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அடுத்த வந்த முதல்வருக்குப் பொதுப்பணம் பற்றிய பார்வை மோசமாக இருந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளில், நிதி மேலாண்மையில் குறைபாடுகளே இல்லையா, ஊழல் எதுவும் நடப்பதில்லையா என்று கேட்டால் ‘இல்லை’ என்று சொல்ல மாட்டேன். நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ‘முதல்வர் கல்லா கட்டுகிறார்’ என்று சொல்வது சிறிதும் பொருந்தாது. அவை கல்லூரியில் நிர்வகிக்கப்படும் அமைப்புகள். அவற்றில் ஊழல் நடப்பதற்குத் துணை போகும் முதல்வர்களும் இருக்கலாம். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் பணியாற்றும் ஊழியர் ஒவ்வொருவரும் தம் ஊதியத்தில் ஐந்நூறு ரூபாய் தனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்ற ஆசிரியர் ஒருவரை எனக்குத் தெரியும். ஒவ்வொரு செலவிலும் கூடுதலாக நூறு ரூபாய், இருநூறு ரூபாய் சேர்த்து எழுதி எடுத்துக்கொண்டவரையும் அறிவேன். அத்தகைய அற்பர்களும் இருப்பர்.
இத்தகைய அமைப்புகளில் உள்ளூர் அரசியல்வாதிகள் நுழைந்துகொண்டு ஆதிக்கம் செய்வதும் சில இடங்களில் நடந்ததுண்டு. இப்போது மாணவர்களிடம் அதிகமான தொகை நன்கொடை பெறக் கூடாது என்று கட்டுப்பாடு இருப்பதால் அவ்வளவாக அரசியல்வாதிகள் நுழைவதில்லை. பயனில்லாத இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை? இவ்வமைப்புகளில் பதவி பெறுவதற்காகப் பெற்றோர் சிலரும் ஆசிரியர்கள் சிலரும் அலைபாய்வதுண்டு. அப்பதவி தமக்குக் கிடைக்கும் அதிகாரத்தை எளியவர்கள் மேல் செலுத்த வாய்ப்பாகக் கருதும் அந்த இழிமனநிலை இருப்பதையும் கண்டிருக்கிறேன். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளராக இருந்த ஆசிரியர் ஒருவர் அதன் வழி ஊதியம் பெற்றுப் பணியாற்றுபவர்கள் அனைவரும் தினமும் காலையில் தன்னைச் சந்தித்து ‘வணக்கம் போட வேண்டும்’ என்று சொன்னதைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் வருந்தி இருக்கிறேன். இத்தகைய வெட்டி அதிகார மனநிலை உட்படப் பல பிரச்சினைகள் இதற்குள் உண்டு.
பிரச்சினைக்கள் இல்லாத இடம் ஏது? அதற்காகச் சுணங்கிவிடாமல் சமாளித்துக் கல்லூரியை நடத்தும் முதல்வர்கள் பலர். அரசு கல்லூரி முதல்வர் பதவி என்பது வெறுமனே கோப்புகளில் கையொப்பம் இட்டுக்கொண்டு குளிர்சாதன அறையில் வீற்றிருப்பதல்ல. இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் சமாளித்துக் கல்லூரியை நடத்த வேண்டும். பலர் சிறப்பாக நிர்வாகம் செய்கின்றனர். இயலாமை கொண்ட சிலரும் இருப்பர். அதையே பொதுவாகக் கொள்ளக் கூடாது.
‘அறம்’ போன்ற இணைய இதழ்கள் பலவற்றைச் சமூக அக்கறையோடு கவனப்படுத்துகின்றன. இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அரசு கல்லூரிகளில் இருக்கும் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுவதில் பொறுப்புணர்வு கூடுதலாகத் தேவை. அவற்றைக் களைவது எப்படி என்றுதான் சிந்திக்க அது வழிவகுக்கும். பெருமளவு உதவியாக இருக்கும் இத்தகைய துணை அமைப்புகளை விமர்சிப்பதன் மூலம் அந்த அமைப்புகளே தேவையில்லை என்னும் நிலைக்குப் போகக் கூடாது. போனால் இன்றைக்கு அரசு கல்லூரிகளைத் திறம்பட நடத்த இயலாது.
‘அறம்’ கட்டுரையோடு எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. எனினும் என் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள இது சந்தர்ப்பமாக அமைந்தது. அதற்காக அவ்விதழுக்கு நன்றி. சுயபுராணம் பாடுவதற்காக இதை எழுதவில்லை. கல்வி தொடர்பான வாசிப்பும் பார்வையும் உள்ள எவரும் இவற்றை எல்லாம் செய்ய முடியும்.
(நிறைவுற்றது)
—– 06-05-25
அரசு இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அரசு கல்லூரி ஆகட்டும் பள்ளியாகட்டும் நிர்வாகம் செய்வதில் இந்த நிலை பரவலாக உள்ளது.ஆசியர்களின் அர்பணிப்புச் செயல்பாட்டால் நடைபெற வேண்டியுள்ளது.இந்தக் கல்லூரி முதல்வரைக் கைகூப்பி வணங்குகிறேன்.பாராட்டுகிறேன்.
இவண்,வேலுசாமி ஆசிரியர்(பணி நிறைவு)
*, கீழே கொடுக்கப் பட்டுள்ள உங்களுடைய இந்த கருத்து அனைவராலும் கவனிக்கத் தக்கது,*
கிராமத்துக் கல்லூரிகளிலேயே பல்லாண்டு பணியாற்றிய அனுபவம் கொண்டே கலைக்கல்லூரிகளுக்கும் ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வு தேவை என்பதை வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. கடந்த ஆண்டு அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர். அதற்குள் என்ன மாற்றம் வந்தது எனத் தெரியவில்லை. அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். எங்கோ ஏதோ ஒருகல்லூரியில் இடம் இருக்கிறது என்பதைச் சேர விரும்பும் மாணவர் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? ஒருபகுதியில் இடம் கிடைக்காது; இன்னொரு பகுதியில் இடம் காலியாக இருக்கும். படிக்க விரும்பும் மாணவர் இருக்க ஓரிடத்தைக் காலியாக வைத்திருப்பது அநீதி அல்லவா? ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு முறை என்பது சமூக நீதியை நிலைநாட்டும் ஒருவழி என்பது என் எண்ணம். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும் அரசு, கலைக்கல்லூரிகளுக்கு அதைப் பின்பற்றாதது கல்வியில் பாரபட்சத்தைக் காட்டுவதன் வெளிப்பாடுதான்.
உங்கள் கட்டுரைத் தொடரைப் படித்த பிறகாவது, நல்ல உள்ளம் கொண்டவர்கள், உயர் கல்வித துறை செயல் பாட்டாளர்கள் , தமிழ்நாட்டில் இயங்கும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ன பிறவற்றிலும் , நமது பொறியியல் கல்லூரிகளில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை முறை பின்பற்றப் பட தக்க முயற்சிகள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
எந்த பணியையும் அனுபவத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தால் சிறப்பு அந்த வகையில் நீங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். அருமை. நன்றிங்க ஐயா
வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் நீங்கள் இந்தவகை அனுபவங்களைத் தொடர்ந்து எழுதவேண்டும் ஐயா. இவை சுயபுராணம் அல்ல; எங்களுக்கான பாடம் என்பதால்தான் கேட்கிறோம்.
சிறப்புங்க ஐயா. நல்ல முதல்வர் நீங்கள். நல்ல எழுத்தாளர் போல்.