மரபிலக்கியத்தைப் பயில விரும்புவோர் எந்த நூலிலிருந்து தொடங்குவது? தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு.அருணாசலம் இக்கேள்வியை உ.வே.சாமிநாதையரிடம் கேட்டபோது அவர் ‘பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம்’ நூலிலிருந்து தொடங்குமாறு சொன்னாராம். அவர் சொல்லைத் தட்டாத மு.அ., திருவிளையாடற் புராணத்தை ஐந்து முறை வாசித்தாராம். அவர் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டதாம். ‘ஏன் கம்பராமாயணத்தைப் படிக்கும்படி சொல்லவில்லை?’ என்றும் கேட்டிருக்கிறார். கம்பராமாயணம் போன்ற உயர்ந்த காப்பியத்தை வாசிக்கும் முன் சில நூல்களை வாசித்துப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது உ.வே.சா.வின் எண்ணம்.
ஆனால் என்னிடம் யாரேனும் இக்கேள்வியைக் கேட்டால் கம்பராமாயணப் பாலகாண்டம், நாட்டுப்படலத்திலிருந்து தொடங்கும்படி பரிந்துரைப்பேன். அந்த ஒருபடலத்தை ஆழ்ந்து வாசித்த பிறகு எந்த நூலையும் வாசிக்கச் செல்லலாம். கம்பராமாயணம் முழுவதையும் வாசிக்கும் ஆர்வம்கூட வரலாம். காரணம் அப்படலத்தில் இருப்பவை மிகவும் எளிய பாடல்கள்; தமிழ்ச் செய்யுள் மரபின் பல கூறுகளைக் கொண்டவை. செய்யுள் உத்திகள் பலவற்றையும் இப்படலத்தில் இயல்பாகக் கம்பர் பயன்படுத்தியிருப்பார். கிட்டத்தட்ட அறுபது பாடல்கள் கொண்ட ஒருபடலத்தைப் படித்தால் செய்யுள் மரபைப் பெருமளவு புரிந்துகொள்ளலாம் என்றால் அதைவிடச் சிறந்த தொடக்கம் என்ன இருக்கிறது?
ஒருசொல்லை மையமாகக் கொண்டு வெவ்வேறு காட்சிகளை அடுக்கும் முறை செய்யுளில் ஒருவகை உத்தி. அதைப் பல இடங்களில் கம்பர் பயன்படுத்துவார். ‘தோள் கண்டார் தோளே கண்டார்’, ‘கைவண்ணம் அங்குக் கண்டேன், கால்வண்ணம் இங்குக் கண்டேன்’ ஆகிய பாடல்களைப் பலர் அறிந்திருக்கக் கூடும். நாட்டுப்படலத்தில் அவ்வகையான சில பாடல்களைப் பார்க்கலாம்.
கோசல நாடு பெருவளம் கொண்டது. ஒருநாடு வளமுடையது என்பதற்கு எத்தனையோ அளவுகோல்கள் இருக்கலாம். கம்பர் தூக்கத்தை அளவுகோல் ஆக்குகிறார். வளமிருக்கும் நாட்டில் வயிறார உணவு கிடைத்து மற்ற தேவைகளும் நிறைவேறி எல்லா உயிர்களும் நிம்மதியாகத் தூங்கும். நல்ல தூக்கம் வந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்றுதானே பொருள்? தூக்கம் வரவில்லை, தூக்கம் வரவில்லை என்று புலம்புவோர் பலர். எங்கே உயிர்கள் எல்லாம், மனிதர் எல்லாம் நன்றாகத் தூங்குகிறார்களோ அதுவே நல்ல நாடு; வளமுடைய நாடு. கோசல நாடு அத்தகையது.
மருத நிலக் காட்சி; அங்கே எவையெவை தூங்குகின்றன என அடுக்குகிறார். தெளிந்த நீர்நிலைகள்; ஊட்டம் நிறைந்த வயல்கள். ஆகவே நீரில் சங்குகள் நிம்மதியாக உறங்குகின்றன. சிறிது மேய்ந்தாலே வயிறு நிறைந்துவிடும் அளவு தீனி கிடைப்பதால் மர நிழல்களில் எருமைகள் உறங்குகின்றன. ஒரே ஒரு பூங்கொத்தில் வாய் வைத்த வண்டுகள் தேனை மிதமிஞ்சிக் குடித்து அதிலேயே உறங்குகின்றன. ஆடவரும் மகளிரும் அணிந்திருக்கும் மாலைகளில் வண்டுகள் உறங்குகின்றன என்றும் சொல்வர். பூக்களைப் பறித்து வந்து மாலை கட்டி அணியும் வரைக்கும் அவற்றின் உறக்கம் கலையவில்லை. அல்லது அணிந்திருக்கும் மாலைப் பூக்களில் வடியும் தேனை உண்ண வந்து கிறக்கத்தில் அப்படியே உறங்குகின்றன என்றும் கொள்ளலாம்.
தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் உறங்குகிறாள். யாருக்கும் அருளும் வேலையில்லை என்பதால் அவளும் உறங்குகிறாள். அங்கிருக்கும் சிறுபுதர்களில் அச்சமின்றி ஆமைகள் ஆழ்ந்து உறங்குகின்றன. நீர்த்துறைகள் தோறும் நிறைந்திருக்கும் சிப்பிகள் இனிதாக உறங்குகின்றன. குவித்து வைத்திருக்கும் தீவனப் போரில் அன்னப் பறவைகள் உறங்குகின்றன. அருகிருக்கும் அடர்ந்த சோலைகளில் மேகம் இறங்கி வந்து வேறெங்கும் செல்ல மனமில்லாமல் அசையாமல் தங்கி நிற்கின்றது; அதாவது உறங்குகின்றது. மேகம் என்பதற்குப் பாட வேறுபாடாகத் ‘தோகை’ காணப்படுகிறது. அடர்சோலைகளில் மயில்கள் உறங்குகின்றன என்றும் கொள்ளலாம். சங்கு, எருமை, வண்டு, ஆமை, அன்னம் என உயிர்களையே பாடல் வரிசைப்படுத்துவதால் மேகம் வருவது பொருத்தமில்லை. மயிலைக் குறிக்கும் ‘தோகை’ பொருத்தமான பாடம் என்று தோன்றுகிறது.
ஆழ்ந்து தூங்க வேண்டும் என்றால் தேவைகள் நிறைவேறி இருக்க வேண்டும். தமக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என்னும் பாதுகாப்பும் தேவை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரியும் பாதுகாப்பை வேண்டியும் தானே இன்றைய அரசிடமும் மக்கள் போராடுகிறார்கள். இவையிரண்டும் அங்கே நிலவுவதால் கடவுள் உட்பட அனைத்து உயிர்களும் நிம்மதியாகத் தூங்குகின்றனவாம். இயற்கை இப்படி வளத்தை வழங்கியிருக்கும் போது மனிதருக்கும் நிம்மதியான உறக்கம் இருக்கும் அல்லவா? ‘உறங்கும்’ என்னும் சொல்லை மையமாக்கிக் கம்பர் எழுதிய பாடல் இது:
நீரிடை உறங்கும் சங்கம்;
நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு;
தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்;
பொழிலிடை உறங்கும் தோகை.
இப்பாடல் அறுசீர் ஆசிரிய விருத்தம். ‘விளம் மா மா’ என்னும் வாய்பாடு. முச்சீரில் சரியாக நிறுத்தம் கொடுத்து வாசிக்கும்படி தெளிவான சந்தம். சிறுதடங்கலும் அற்ற ஆற்றொழுக்கு நடை. சொற்களை முன்பின் மாற்றாமல் நேரடியாகப் பொருள் தரும் தொடரமைப்பு. எல்லாம் கூடி வந்த செய்யுள் இது. உயிர்களுக்கு எல்லாம் நல்ல உறக்கத்தைக் கொடுக்கும் நாடே நாடு.
—– 10-05-25
🙏🙏🙏
வணக்கம் ஐயா.
எதையும் பயன்பாட்டு நோக்கில் மாற்றி யோசிக்கும் தங்களின் சிந்தனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கவியும் கருத்தும் மிகவும் அருமை. தங்களின் தமிழ்ப் பணி தொடரட்டும்… வாழ்க தமிழ் !!!