திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமலஹாசன் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்காகக் கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓர் அமைப்பு அவர் முகத்தில் கரி பூச முயன்றதாகக் கூறியுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகத்திற்குள் அவரை நுழைய விட மாட்டோம் என்றும் அவர் நடித்த திரைப்படத்தைத் திரையிடவும் அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டுகின்றனர். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வருகின்றன.
‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்னும் கருத்து சரியோ தவறோ அதைத் தெரிவிக்கக் கமலஹாசனுக்கு உரிமை உள்ளது. அதற்கு மறுப்பு, கண்டனம் எல்லாம் தெரிவிக்கலாம். மொழியியலாளர்கள், மொழி அறிஞர்கள் கருத்துக்களை எடுத்துப் பேசலாம். ஆனால் ‘கர்நாடகத்திற்குள் நுழைய விட மாட்டோம்’ என்பதும் ‘திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம்’ என்பதும் அவரது வாழ்வுரிமையைப் பறிக்கும் மிரட்டல். வன்முறை சார்ந்த மிரட்டல் தவறானது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதே சரியானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
கமலஹாசன் கூறியது புதிய கருத்து ஒன்றுமல்ல. ஏற்கனவே தமிழ் தேசியர்கள், தனித்தமிழ் ஆர்வலர்கள் சொல்லி வருவதுதான். திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்து தோன்றியவை என்று சொல்வதோடு அவர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. உலக மொழிகள் அனைத்துமே தமிழில் இருந்து பிறந்தவை என்றே சொல்லி வருகிறார்கள். ஏற்றுக்கொள்ளத்தக்க எந்த நிரூபணமும் இன்றி ‘ஆசை பற்றி அறையலுறும்’ இத்தகைய கருத்துக்கள் மொழி அடிப்படைவாதம் சார்ந்தவை. இதைத் தங்களுக்குள் பேசி இன்பம் கண்டு வரலாம். உலகளவில் மொழியியலாளர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மொழியியல் நோக்கில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய எழுத்து வழக்கும் இலக்கிய வழக்கும் உள்ள மொழிகளோடு அவையில்லாத குவி, குயி, கோயா, மண்டா உள்ளிட்ட கிட்டத்தட்ட முப்பது மொழிகளைத் திராவிட மொழிகள் என்று கூறுகின்றனர். வட இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியில் பேசும் குரூக், மால்தோ ஆகிய மொழிகளும் பாகிஸ்தானின் பலுசிஸ்தானத்தில் ஒருபிரிவு மக்கள் பேசும் பிராகூய் மொழியும் திராவிட மொழிகளுக்குள் அடங்குகின்றன. இவற்றைத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்று வகைப்படுத்துகின்றனர். தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாகவும் இவற்றை வகைப்படுத்துகின்றனர். துணைப்பிரிவுகளும் மொழி எண்ணிக்கையும் இப்போது கூடியிருக்கின்றன. எப்படியிருப்பினும் இம்மொழிகளுக்கு இடையே தாய்சேய் உறவு இல்லை; இவை சகோதர மொழிகள் என்பதுதான் மொழியியலாளர் கணிப்பு.
பி.கே.பரமேச்வரன் நாயர் எழுதிய ‘மலையாள இலக்கிய வரலாறு’ நூலை 1968இல் சாகித்திய அக்காதெமி வெளியிட்டது. மலையாள இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு உதவும் மிகச் சிறந்த நூல் அது. அதன் முதல் இயல் ‘மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பதாகும். அதில் மலையாளத்திற்கு உள்ள தனித்தன்மையை விளக்கும் அவர் முக்கியமாகத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் உள்ளது தாய்சேய் உறவல்ல, சகோதர உறவுதான் என்பதை நிறுவுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
‘மேலெழுந்தவாறாகப் பார்க்குங்கால் மலையாளத்துக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகத் தோன்றுகிறதேயன்றி அவ்விரண்டில் ஒன்று மற்றொன்றிலிருந்து பிறந்தது என்ற தாய் சேய் உறவு ஒன்றைக் கற்பனை செய்யத் தேவையே இல்லை’ (ப.7, 8)
என்று அவர் எழுதுகிறார். தம் கருத்தை வலியுறுத்த பல தர்க்கரீதியான வாதங்களையும் வைக்கிறார். முக்கியமாக மொழியியலாளர் நோக்கையே முன்னிறுத்துகிறார். மூல திராவிட மொழி என்ற ஒன்றிலிருந்து பிற மொழிகள் அனைத்தும் பிரிந்திருக்க வேண்டும் என்னும் மொழியியலாளர் கருத்தையே நானும் ஏற்கிறேன். அப்படியானால் அந்த மூலதிராவிட மொழி எங்கே என்று கேட்கின்றனர். ஒரு கல்லை உடைத்தால் அது பல துண்டுகளாகச் சிதறிவிடும். மூலக்கல் எங்கே என்று கேட்க முடியாது. மொழியிலும் அப்படித்தான். தமிழில் இல்லாத மூல திராவிட மொழியின் சிலசில கூறுகளைப் பிற திராவிட மொழிகள் தக்க வைத்திருக்கின்றன. ஆகவே இவற்றைச் சகோதர மொழிகள் என்று சொல்வது சரியானது.
மேலும் இன்றைய அரசியல் சூழலில் இந்தத் ‘தாய்சேய் உறவு’ என்பதை வலியுறுத்துவது நன்மை பயக்காது. எங்கள் மொழியிலிருந்தே உங்கள் மொழி பிறந்தது என்று பிறரை நோக்கிச் சொல்வது ஒருவகையில் ஆதிக்கம் சார்ந்தது. ’எங்களுக்குக் கீழேதான் நீங்கள்’ என்று குறிப்புணர்த்துவது. ஒவ்வொரு மொழி சார்ந்தும் தேசிய இனமாகப் பிரிந்து மாநிலங்கள் அமைந்திருக்கும் நிலையில் இக்கருத்து தேசிய இனச் சமத்துவத்திற்கு எதிரானதாகவே பொருள் படும். எல்லாத் தேசிய இனமும் தம் மொழியைப் போற்றிக் கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கின்றன. மொழி அடிப்படைவாதம் உருவாவதற்கு முக்கியக் காரணமே பிற தேசிய இனங்கள் நம்மை அடிமைப்படுத்தி விடுமோ என்னும் அச்சம்தான்.
மாநிலங்களுக்கு இடையே நதிநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லைப் பிரச்சினைகளும் உண்டு. இவற்றில் ஒன்று முன்னெழுந்து வரும் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மொழி அடிப்படைவாதம் வன்முறையாக மாறுவதைப் பலமுறை கண்டிருக்கிறோம். திராவிட மொழி பேசும் மாநிலங்களை அரசியல் ரீதியாக இணைக்க வேண்டிய நிலையும் இன்றிருக்கிறது. இந்தித் திணிப்பை ஏன் எதிர்க்கிறோம்? அம்மொழியைத் திணிப்பதன் மூலம் பண்பாட்டிலும் அரசியலிலும் வடவர் ஆதிக்கம் இங்கே மிகும் என்று கருதுகிறோம். இந்தி எதிர்ப்பு என்பது ஆதிக்க எதிர்ப்பு. ‘தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று சொல்வதும் ஆதிக்கக் கருத்தியல்தான். அதைக் கன்னட மொழியினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் எழுதிய ‘ஹார்ட் லேம்ப்’ நூல் இவ்வாண்டு பன்னாட்டுப் புக்கர் விருது பெற்றிருக்கிறது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதாகிய ‘ஜேசிபி இலக்கியப் பரிசு’ 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏழாண்டுகளில் மலையாளம் மூன்று முறை பரிசு பெற்றிருக்கிறது. கன்னடத்துடனும் மலையாளத்துடனும் நவீன இலக்கியத் துறையில் போட்டியிட நாம் என்ன செய்கிறோம்? அதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் நடக்கிறதா? தமிழ்தான் உலகிலேயே முதன்மொழி, உலக மொழிகள் எல்லாம் தமிழிலிருந்து தோன்றியவை, திராவிட மொழிகள் அனைத்திற்கும் தாய் தமிழ்தான் என்னும் கருத்துக்களுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. உருப்படியாகத் தமிழ் மொழியை, இதன் பழந்தமிழ் இலக்கியச் செழுமையை, நவீன இலக்கிய வளத்தை உலகின் முன்னெடுத்துச் சென்று உரிய அங்கீகாரம் பெறுவதில் கவனம் செலுத்துவோம்.
—– 01-06-25
உண்மைதான் ஐயா. நீங்கள் சொல்வதே சரியெனப் படுகிறது