கிழவரா? வயதானவரா?

You are currently viewing கிழவரா? வயதானவரா?

சமூக ஊடகங்களில் செய்திகளை வாசிக்கும்போது மொழிப் பயன்பாட்டைக் கவனிப்பது என் வழக்கம். மொழிப் பயன்பாட்டில் நாம் பெரிதும் அசட்டையாக இருக்கிறோம் என வருத்தம் மிகும். எத்தனை எத்தனையோ பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. தட்டச்சுப் பிழையெனச் சிலவற்றை எளிதாகக் கண்டுகொள்ளலாம். மொழி இயல்பு அறியாமல், மொழியறிவு பெறாமல் இருப்பதால் நேரும் பிழைகள் ஏராளம். அன்றாடம் மொழியில் புழங்கிக் கொண்டிருப்போர் சற்றே கவனம் கொண்டால் இப்பிழைகளை எளிதாகக் களையலாம். தாம் எழுதியதை ஒருமுறை வாசித்துப் பார்த்தாலே சிலவற்றை இனம் காணலாம். மொழி ஒரு கருவி. அதைச் செம்மையாகப் பராமரித்தால்தான் உரிய வேலைகளைச் செவ்வனே செய்து முடிக்க முடியும்.

இன்று ‘மின்னம்பலம்’ இணைய இதழில் கண்ட  பிழை ஒன்றை எடுத்துக் காட்டுகிறேன். ஒரு தொடரில் அடுத்தடுத்து வரும் சொற்களின் இயைபினால் பொருள் மாற்றம் ஏற்படுதல் தொடர்பானது. ஓரிரு சொற்களை இடம் மாற்றினால் பொருள் குழப்பம் தீர்ந்துவிடும். இந்தத் தொடரைப் பாருங்கள்:

‘வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்’ (செய்தி: 9 மாதக் கர்ப்பிணி மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர், மின்னம்பலம், 16-04-25)

2022ஆம் ஆண்டு காதலித்து அதே ஆண்டிலேயே திருமணம் செய்து கொண்டனர் என்று இத்தொடர் பொருள் படுகிறது.

‘வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்’ என்று இத்தொடர் அமைய வேண்டும். ஏற்கனவே காதலித்துக் கொண்டிருந்த அவர்கள் 2022இல் திருமணம் செய்துகொண்டனர். ‘காதலித்து’ என்பதைப் பின்னால் தூக்கிப் போட்டால் சரியான பொருள் வந்துவிடுகிறது.

இன்னொரு தொடரைப் பாருங்கள்:

‘அரசு ஊழியராகப் பணியாற்றும் ஸ்ரீகுமார் என்னும் எஸ்கே (ராஜேஷ் மாதவன்) தொடர்ச்சியாக மூன்று வயதான ஆண்களைக் கொலை செய்கிறார்’ (மின்னம்பலம்,  ‘மரணமாஸ்’ மலையாளத் திரைப்பட விமர்சனம், 16-04-25).

இதை வாசிக்கும்போது  ‘மூன்று வயதான ஆண்கள்’ என்னும் இடத்தில் நிறுத்திக் குழம்பிப் பின் தெளிந்து மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இம்மொழியில் ஏற்கனவே நமக்கு இருக்கும் பயிற்சியினால் சூழல் சார்ந்து, முன்பின் இயைபு கொண்டு பொருள் தெளிவு பெறுகிறோம். எனினும் வாசிப்பில் இடறல் நேர்ந்து தடைபடுவதைத் தவிர்க்க முடியாது.

தொடரை இப்படி மாற்றுவோம்:

‘அரசு ஊழியராகப் பணியாற்றும் ஸ்ரீகுமார் என்னும் எஸ்கே (ராஜேஷ் மாதவன்) தொடர்ச்சியாக  வயதான ஆண்கள் மூவரைக் கொலை செய்கிறார்’

இதிலும் சின்னப் பிரச்சினை இருக்கிறது. ‘தொடர்ச்சியாக வயதான ஆண்கள்’ என்பதில் குழப்பம். தொடர்ச்சியாகத் தானே வயதாகும்? ஒருவருக்கு முதலில் வயதாகிறது; அடுத்து இன்னொருவருக்கு வயதாகிறது; அதன் பின் மூன்றாமவருக்கு வயதாகிறது. இதுதான் தொடர்ச்சியா? ‘தொடர்ச்சியாக வயதான’ என்று அடுத்தடுத்த சொற்களில் ஆக, ஆன வரும்போது வாசிப்பு ஓட்டமும் தடைபடுகிறது. சரி, தொடரை இப்படி மாற்றிப் பார்ப்போம்:

‘அரசு ஊழியராகப் பணியாற்றும் ஸ்ரீகுமார் என்னும் எஸ்கே (ராஜேஷ் மாதவன்)  வயதான ஆண்கள் மூவரைத் தொடர்ச்சியாகக் கொலை செய்கிறார்.’

மூவர் என்பதற்குப் பதிலாக  ‘மூன்று பேரை’ என்று எழுதலாம். இருவர், மூவர், நால்வர் என்றெல்லாம் எழுதுவதுதான் இன்றைய வழக்கு. அது தவறல்ல. ஒற்றைச்சொல் இருக்கும்போது இரு சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்பது என் எண்ணம்.

‘வயதான ஆண்கள்’ என்பதற்குப் பதிலாக முதியோர் என்றோ கிழவர்கள் என்றோ செய்தியாளர் எழுதவில்லை. ‘மூன்று கிழவர்களை’ என்று எழுதியிருந்தாலே ஆண்கள் என்றுதான் பொருள்படும். அப்படி எழுதவில்லை. இக்காலத்தில் அச்சொற்கள் பலருக்கும் பிடிப்பதில்லை. சராசரி ஆயுட்காலம் கூடியிருப்பதால் எழுபது, எண்பது வயது வரைக்கும் வாழ்வது இயல்பாகிக் கொண்டுள்ளது. அறுபது வயதுக்கு மேலும் ஒருவர் செயலூக்கத்துடன் இருக்கும் வகையில் மருத்துவ வசதிகளும் கூடியிருக்கின்றன. வயதானவர்களால் பயன் ஏதுமில்லை என்று எண்ணும் மனோபாவமும் மாறிக் கொண்டு வருகிறது. தம் பேரன் பேத்திகள்  பாட்டி என்று அழைப்பதைப் பலர் விரும்புவதில்லை. இந்நிலையில் கிழவன், கிழவி என்று சொல்வதை யார் ஏற்பர்?

கிழவரா? வயதானவரா?

கிழவன், கிழத்தி ஆகிய சொற்கள் தலைவன், தலைவி என்னும் பொருளில் அக இலக்கண, இலக்கியத்தில் வந்துள்ளன. எப்போது இச்சொற்கள் அப்பொருளை இழந்தன என்று தெரியவில்லை. கிழவன் அப்படியே இருக்க, கிழத்தி என்பது கிழவி ஆகிவிட்டது. பொருளும் மாறிவிட்டது. இன்றைய காலத்தின் பார்வைக்கேற்பப் பழைய சொற்கள் பலவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறோம். குருடு, செவிடி, நொண்டி முதலியவை பழைய மதிப்பீடுகளை ஏற்றவை. சட்டமன்றத்தில் இச்சொற்களைப் பயன்படுத்தியதற்காக அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் மன்னிப்புக் கேட்டு அறிக்கை விட்டார்.

மாற்றுத் திறனாளி அல்லது மாற்றுத் திறனாளர் என்பது இப்போது பெருவழக்குக்கு வந்துவிட்டது. எழுத்தாளர் த.ராஜன் தம் சிறுகதைத் தொகுப்புக்குப் ‘பழைய குருடி’ என்று தலைப்பிட்டிருந்தார். ‘அப்படி வைத்திருக்க வேண்டாமே, ராஜன்’ என்று அவரிடம் சொன்னேன். அதே போல மூன்றாம் பாலினம், அரவானி முதலியவை மாறி திருநர், திருநங்கை, திருநம்பி எனச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. பால்புதுமையினர் உள்ளிட எத்தனையோ புதிய சொற்கள் வழங்குகின்றன. வழக்கொழிந்து போகும் நிலையில் இருக்கும் சொல்தான் கிழவன், கிழவி, கிழவர் ஆகியவை. முதியோர் என்பதுகூட அப்படியாகிவிடும் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் அவற்றை வசைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறோம். ஆகவே இனி ‘வயதானவர்’ என்பது பெருவழக்காகிவிடும். இச்செய்தியில் ‘வயதான ஆண்கள்’ எனப் பயன்படுத்தியிருப்பதை அப்படித்தான் பார்க்கத் தோன்றுகிறது.

—–  17-04-25

Latest comments (1)