கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1

You are currently viewing கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1

தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் 27 ஏப்ரல் 1944 அன்று இறந்தார். இன்று அவரது எண்பத்தொன்றாம் நினைவு நாள். இந்நாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். காரணம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் கவிதைகளைத் தொகுத்துக் ‘கருவளையும் கையும்’ என்னும் தலைப்பில் பதிப்பித்தேன். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்நூல் வெளியாயிற்று. அவர் கவிதைகள் தொடர்பாக நிலவிய குழப்பங்களை எல்லாம் பெருமளவு தீர்த்து, பாடவேறுபாடுகள், வெளியீட்டு விவரம் உள்ளிட்டவற்றுடன் வெளியிட்ட அந்நூலைத் தமிழ்க் கவியுலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. புதுக்கவிதை வரலாற்றுக்கு அந்நூல் எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்த நண்பர் ய.மணிகண்டன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை துறை சார்பாக இணைய வழிக் கூட்டம் ஒன்று நடத்தி அதை அறிமுகப்படுத்தினார். நண்பர் க.மோகனரங்கன் சுருக்கமாகப் பேசினார்.

கு.ப.ரா. கவிதைகளை நூலாக்குவதில் பட்ட சிரமம் அதற்குக் கிடைக்கும் குறைந்தபட்ச வரவேற்பால்தான் சரியாகும். தமிழில் அது இல்லை, இது இல்லை என்று புலம்பும் தமிழ்ச் சமூகம் புதையலை எடுத்து வந்து காட்டினாலும்  எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல  ஆடாமல் அசையாமல் இருக்கிறது. இந்த எதிர்வினைகள் சலிப்பை ஏற்படுத்தினாலும் தேடிக் கண்டடையும் சுகத்தை ருசித்துவிட்ட மனம் சும்மா இருப்பதில்லை. அப்படித்தான் கு.ப.ரா. படைப்புகள் பற்றிய தேடலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

‘கு.ப.ரா. கவிதைகள் – கருவளையும் கையும்’ நூல் முன்னுரையில் நான் குறிப்பிட்டிருந்த ஒரு தகவல் இது:

‘‘கள்ளுப் போனா போகட்டும் போடா, எனக்கு சொக்கி இருக்கா சொக்கா’ என்று முடியும் கு.ப.ரா.வின் கவிதை ஒன்றை நினைவுகூர்ந்து வல்லிக்கண்ணன் (புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப.17) குறிப்பிடுகிறார். அதே கவிதையைக் ‘கள்ளுப் போனா போகட்டும் போடா, எனக்குக் கறுப்பி இருக்கா குப்பா’ (எழுத்து, இதழ் எண்: 103-104) என்று முடிவதாக அவரே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். அக்கவிதை இதுவரை கிடைக்கவில்லை’ (ப.20).

வல்லிக்கண்ணன் அக்கவிதையைத் தம் நினைவிலிருந்து எழுதியிருக்கிறார். அதனால்தான் இருகுறிப்புகளிலும்  ‘சொக்கி – கறுப்பி’, ‘சொக்கன் – குப்பன்’ எனப் பெயர்க் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கு.ப.ரா.வின் பிரபலமான கவிதை ‘ராக்கி நெனப்பு.’ நாட்டுப்புறப் பாடல் அமைப்பைக் கொண்ட அதைப் போலவே ‘கள்ளுப் போனா போட்டும் போடா’ கவிதைச் சந்தமும் இருக்கிறது. அக்கவிதையை முழுமையாக எடுத்துக்காட்டிய பிறகு ‘இதேபோல ‘கள்ளு போனா போட்டும் போடா, எனக்கு சொக்கி இருக்கா சொக்கா’ என்று முடியும் ரசமான கவிதை ஒன்றும் உண்டு’ என்று புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் (ப.17) வல்லிக்கண்ணன் ஒரே ஒரு வரி மட்டும் எழுதியுள்ளார்.

எழுத்து இதழில் (103 – 104) ‘கு.ப.ரா.வின் இலக்கியச் சோதனைகள்’ என்னும் கட்டுரையில் வல்லிக்கண்ணன், ‘கிராமியப் பேச்சு முறைகளைப் புகுத்திக் கிராமிய முறையிலேயே அவர் எழுதிய சில கவிதைகளும் உண்டு. ‘கள்ளுப் போனாப் போட்டும் போடா, எனக்குக் கறுப்பி இருக்கா குப்பா!’ என்று முடியும் கவிதை இனிமையாக இருக்கும். கதிர் சுமந்த நெல்லு பிள்ளைத் தாய்ச்சிப் பொம்பிளை மாதிரி வரப்பு மேலே அசைவதை அழகாகச் சொல்லும் ஒருகவிதையும் உண்டு. தமிழின் துரதிர்ஷ்டம் – அவையெல்லாம் எந்தத் தொகுதியிலும் இடம்பெறாமலே போய்விட்டன’ (ப.7) என்று ஆதங்கத்தோடு குறிப்பிடுகிறார்.

அவர் குறிப்பிடும் ‘பிள்ளைத் தாய்ச்சிப் பொம்பிளை’ கவிதை ‘பொங்கல்’ என்னும் தலைப்புடையது. அது ‘சிறிது வெளிச்சம்’ தொகுப்பிலேயே இடம்பெற்றுள்ளது.  இந்தக் ‘கள்ளுப் போனாப் போட்டும்’ என்பது அவர் இரண்டு இடத்தில் கூறியதன் மூலம்  தனிக்கவிதை என்பது உறுதிப்பட்டது. வாய்ப்புள்ள போதெல்லாம் அவர் எழுதிய இதழ்களில், எழுதியிருக்கலாம் என்று தோன்றிய இதழ்களில் இக்கவிதையைத் தேடிக் கொண்டிருந்தேன். கிடைக்கவில்லை. கிராம ஊழியன், கலாமோகினி ஆகியவற்றில் சில இதழ்களே கிடைக்கின்றன. கிடைக்காத அத்தகைய இதழ் எதிலாவது இது வெளியாகியிருக்கலாம், இனிக் கிடைக்க வாய்ப்பில்லை போலும் என்றே துணிந்து விட்டேன்.  இப்போது அக்கவிதை கிடைத்திருக்கிறது. தேடல் தரும் மகத்துவம் இது. தேடல் தொடர்ந்து கொண்டேயிருந்தால் எதிர்பாராத தருணத்தில் இப்படி ஒரு அற்புதம் நடந்து சோர்வை விரட்டிவிடும்.

அழிசி ஸ்ரீனிவாச கோபாலன் அவர்களிடமிருந்து 2 ஏப்ரல் 2025 அன்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அவருடன் சிறுசர்ச்சையில் ஈடுபட நேர்ந்திருந்த போதும் அதைக் கருத்தில் கொள்ளாது தமக்குக் கிடைத்த தகவலை என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்பியிருக்கிறார். நல்ல மனம் வாழ்க! அம்மின்னஞ்சலில் ‘ஆனந்த விகடன் இதழின் ஐம்பதாண்டு நிறைவையொட்டி பழைய விகடன் இதழ் படைப்புகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொடரில் 1938ஆம் ஆண்டில் வெளியான படைப்புகளை சோ. சிவபாதசுந்தரம் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பில், 1-5-1938 தேதியிட்ட ‘ஆனந்த விகடன்’ இதழிலிருந்து கு.ப.ரா. கவிதை ஒன்றையும் கொடுத்துள்ளார். கவிதை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. ‘சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி…’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுதான் கவிதையின் தலைப்பா என்று விளங்கவில்லை. கவிதையை முழுமையாகப் பார்க்க முயலவேண்டும். அந்தப் பக்கங்களைத் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சோ.சிவபாதசுந்தரம் தொகுத்தளித்தவை வெளியான  ‘ஆனந்த விகடன்’ இதழின் ஆண்டு விவரம் தெரியவில்லை. ஆனால் கு.ப.ரா. எழுதிய கவிதை வெளியானது ’01-05-1938’ என்னும் விவரம் தெளிவாகிவிட்டது.

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1

‘மற்றொரு சிறுகதை எழுத்தாளர் அந்த நாளிலேயே கவிதையில் இறங்கியிருப்பதைப் பார்க்கிறோம். கு.ப.ராஜகோபாலன் தான் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார். சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி…

கள்ளில்லாமெ கொஞ்சநாளா

கெரக்கந்தாண்டா இருந்துச்சு

செள்ளெப்புடிச்ச சனியன்நெனப்பு

ரொம்பநாளு போவல்லே!

வெளக்கேத்தி வூடு வந்தா

புயுக்கி வேறே மிஞ்சிட்டா

களுக்கெண்ணு சிரிச்சி யென்னே

கேலி பண்ணத் துணிஞ்சிட்டா!

… ….  … …

கள்ளுப் போச்சு! – கருப்பி வாரா!

எயிந்து போடா சொக்கா!

கள்ளுப் போனா போ(வ)ட்டும் போடா,

கருப்பி யிருக்கா நேக்கு!                         (1-5-38)’

இதுதான் சிவபாதசுந்தரம் கொடுத்திருந்த குறிப்பு. கவிதையின் மூன்று பகுதிகளை மேற்கோள் காட்டிவிட்டு இறுதியில் நல்லவேளையாக வெளியான நாள், ஆண்டு விவரத்தையும் கொடுத்திருக்கிறார். தற்போது ஜூனியர் விகடன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றும் கவிஞர் வெய்யில் மூலம் அவ்விதழிலிருந்து கவிதையை முறைப்படி பெற்றுவிட்டேன். கவிதையின் முழுவடிவத்தைக் காண்போம்.

(தொடர்ச்சி நாளை)

—–   27-04-25

 

Latest comments (2)

Arunachalam Ramasami

கு.ப.ரா. கிராமிய மொழியில் எழுதிய கவிதைகளைப் பற்றி நீங்கள் கூறும் விவரங்களை படிக்கும் பொழுது எனக்கு அவர் ஆர் சண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் என்னும் நாவலுக்கு முன்னுரை எழுதும் பொழுது கு.ப.ரா. இந்த நாவல்”குடியான வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டது முதல் நவீனம் இதுதான்”என்று கூறுவதுடன் நாவலாசிரியர் கொங்குத் தமிழை வட்டார வழக்கைக் கையாண்ட விதத்தை மிகவும் பாராட்டி எழுதியுள்ளார். இம்முன்னுரை 1.6.1942 அன்று கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் எழுதும் வட்டார இலக்கியத்தில் முன்னோடியான ஆர் சண்முகசுந்தரத்தை சரியான முறையில் கு.ப.ரா. எடை போட்டு காட்டி இருப்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

சுராகி கொடுமுடி

பெருமாள் முருகன் அவர்கள் தரும் முத்துக்களை எல்லாம் கோர்த்து மாலையாக அணிய முயலுவோம்.