மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய (15-04-25) அன்று எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாக் கட்சியுடனான தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்குச் சொன்ன பதில் இரண்டு விதங்களில் என்னைக் கவர்ந்தது. அந்தப் பதில்:
‘கூட்டணி அரசு என்று சொல்லவே இல்ல. நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டு ஏதெதோ வித்தையெல்லாம் காட்டறீங்க. தயவுசெய்து இந்த வித்தையெல்லாம் விட்டுருங்க. அதாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கூட்டணி, ஆட்சியமைக்கும். புருஞ்சுக்கங்க. ஏங்க திலுப்பித் திலுப்பி அதுக்குள்ள வர்றீங்க. எதாவது விறுவிறுப்பான செய்தி உங்களுக்கு வேணும். எங்ககிட்டருந்து புடுங்க வேணும். அப்படியெல்லாம் அவர் சொல்லவே இல்ல. திலுப்பியும் சொன்னாரு…’ (காணொலி: https://www.youtube.com/watch?v=_T4MFhKGwqQ காண்க: நிமிடம் 13 – 15)
அரசியல்வாதிகள் மொழியைக் கையாளும் விதம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சிவிடும் போல. ‘கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என்னும் தொடர் இருவிதமாகப் பொருள் கொள்ளச் செய்கிறது. ‘கூட்டணியாட்சி அமைக்கும்’ என்று இருசொற்களையும் இணைத்துச் சொன்னால் ஒருபொருள். ‘கூட்டணி, ஆட்சியமைக்கும்’ எனக் கூட்டணியில் நிறுத்தம் கொடுத்து ‘ஆட்சியமைக்கும்’ என்று சேர்த்தால் இன்னொரு பொருள். இதன் மூலமான ஆங்கிலத் தொடர் எப்படி அர்த்தம் தருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழ்த் தொடரைப் பிரித்து, நிறுத்தி அவர் சொன்னது வியப்பாக இருந்தது. அரசியல்வாதிகளுக்கு அனுபவத்தில் சமாளிப்பும் சமயோசிதமும் கைகூடி வருமோ?
அவர் பேச்சில் பயன்படுத்திய இன்னொரு சொல் ஏளனத்திற்கு உள்ளாயிற்று. ‘திலுப்பித் திலுப்பி அதுக்குள்ள வர்றீங்க’, ‘திலுப்பியும் சொன்னாரு’ என இரண்டு இடங்களில் மூன்று முறை ‘திலுப்பி’ என்று சொன்னார். ‘சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்’ அளவு இது புகழ் பெறவில்லை எனினும் அவர் உச்சரிப்பைக் கேலி செய்து வந்த பதிவுகள் சிலவற்றைக் கண்டேன். அந்தச் சொல் வருமிடத்தை மட்டும் வெட்டி எடுத்துக் காணொலியாகப் போட்டுப் பரப்பியவர்களும் இருந்தனர். ஒருகட்சித் தலைவர் தவறு செய்தால் இன்னொரு கட்சிக்குக் கொண்டாட்டமாகிறது. சரி, அந்த அரசியலுக்குள் போக வேண்டாம்.
‘திலுப்பி’ என்று அவர் சொன்னது தவறல்ல. ‘மீண்டும் மீண்டும்’ என்னும் பொருளில் அவர் அதைக் கையாண்டார். ‘திருப்பி’ என்று பொதுவழக்கில் உள்ள சொல்லைத்தான் ‘திலுப்பி’ என்று அவர் உச்சரித்தார். இது கொங்கு வட்டார வழக்கில் சாதாரணமாக வழங்கும் சொல்தான். எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். என் தலைமுறையினரில் சிலரும் கூடத் ‘திலுப்பி’ என்று சொல்வார்கள்.
‘சொன்னதையே திலுப்பித் திலுப்பிச் சொல்றான்’
என்பதில் ‘மீண்டும் மீண்டும்’ எனப் பொருள்படுகிறது.
‘திலுப்பியும் வேணும்னு கேக்கறான்’
என்பதில் ‘மீண்டும்’ அல்லது ‘மறுபடியும்’ என்று பொருள் கொள்ளலாம்.
‘கட்டலத் திலுப்பிப் போடு’, ‘மடையத் திலுப்பி உடு’
என்பவற்றில் ‘மாற்று’ எனப் பொருள் வருகிறது.
‘திருப்பி’ என்னும் சொல்லை இப்படியான பொருள்களில் ‘திலுப்பி’ என்று ஒலிப்பது கொங்குப் பகுதி வழக்காகும். பிற வட்டார மொழியில் இந்த ஒலிப்பு முறை இருப்பதாகத் தெரியவில்லை.
ஓர் எழுத்து வருமிடத்தில் பதிலாக வேறொரு எழுத்து வருவதைத் தமிழ் இலக்கணம் ‘போலி’ என்று சொல்லும். அதை வகைப்படுத்தியும் விளக்குவர். ஒரு எழுத்துக்கு எந்த எழுத்து வேண்டுமானாலும் போலியாக அமைந்துவிடாது. இனம், அண்மை, ஒலிப்பு ஒற்றுமை முதலிய காரணங்கள் இருக்கும். இதை மொழியியலும் வகைப்படுத்தி விளக்குகிறது. அவற்றில் ‘ரகரம் லகரமாதல்’ ஒன்று. ரகரமும் லகரமும் இடையின எழுத்துக்கள். யரலவழள என்னும் வரிசையில் ரகரமும் லகரமும் அடுத்தடுத்து அமைகின்றன. ஆகவே ரகரம் வருமிடத்தில் லகரம் வருவது இயல்பானது. அதே போல லகரம் வருமிடத்தில் ரகரம் அமைவதும் உண்டு.
லகரம் ரகரமாதலுக்குச் செய்யுளிலேயே சான்றுகள் உள்ளன.
பந்தல் – பந்தர்
குடல் – குடர்
சாம்பல் – சாம்பர்
கூதல் – கூதர்
ஆகியவற்றைச் சான்றாகச் சொல்லலாம்.
லாரியை ‘ராரி’ என்று சொல்லும் வழக்கம் இன்றைய பேச்சு மொழியில் இருக்கிறது. ரகரம் லகரமாதலுக்கும் பேச்சு வழக்கில் சில சான்றுகள் கிடைக்கின்றன. சமீபத்தில் ‘லப்பர் பந்து’ என்னும் தலைப்பில் திரைப்படம் ஒன்று வந்தது. ‘ரப்பர் பந்து’ தான். பேச்சு வழக்கில் ‘லப்பர் பந்து.’ பேச்சு வழக்கையே தலைப்பாகக் கொடுத்துவிட்டனர். பள்ளிக் குழந்தைகள் எழுதியதை அழிக்கப் பயன்படுத்தும் ரப்பரை ‘அழிலப்பர்’ என்று சொல்வதைக் கேட்கலாம். பென்சில் லப்பர், இங்க் லப்பர் ஆகியனவும் உண்டு. ‘மரக்கறி’ என்பதை ‘மலக்கறி’ எனச் சில பகுதிகளில் வழங்குவதாகவும் தெரிகிறது.
திலுப்பி என்பதும் லப்பர் போன்ற மாற்றம்தான். திலுப்பி என்று ஒலிப்பது வட்டார வழக்கு. தவறல்ல.
—– 21-04-25
திலிப்பித் திலிப்பி…
லப்பர் பந்து – இதெல்லாம் இப்ப வரைக்கும்
நான் பேசற வார்த்தைங்கோ…
கோவையில் லாலி ரோட்டை ராலி ரோடு லாரி ரோடு என்று அழைப்பது வழக்கம் ஐயா
லாலி ரோட்டை ராலி ரோடு என்று கோவையில் அழைப்பது வழக்கம் ஐயா
ஐயா 🙏 இன்று சொல்லித் தரவும் யாருமில்லே. எடுத்துச் சொன்னால் கேட்கவும் இல்லையே. என் செய்ய?
நடு நாட்டு வட்டாரம்தான். கொங்கு வட்டாரத்தில் சில பகுதிகளிலும்
பேசப்படுகிறது. அருமை ஐயா
எங்கள் பகுதியிலும் (சிதம்பரம், விருத்தாசலம், வடலூர், செயங்கொண்டம்) இந்த “திலுப்பி” உண்டு.