நல்லதம்பி என்னும் நல்ல மனம்

You are currently viewing நல்லதம்பி என்னும் நல்ல மனம்

எப்போதும் வியப்புக்குரிய மனிதர்கள் சிலர்தான். சிலரது அறிவு வியப்புத் தரும். சிலரது உழைப்பு வியப்புத் தரும். சிலரது செயல்கள் வியப்பாகும். சிலரது பண்புகள் வியப்பாகும். வியப்புக்கு எத்தனையோ காரணங்கள். நாம் சோர்வுறும் போது வியப்பான சிலரை நினைத்துக் கொண்டால் சோர்வு பறந்தோடிப் போகும்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது உற்சாகமான மனநிலையில் இருப்போர் மிகச் சிலர். ஓய்வு பெறும் நாளோடு தம் வாழ்க்கையே முடிந்து விட்டதாகக் கருதுபவர்கள் பலர். எனக்குத் துறைத்தலைவராக இருந்த ஒருவர் ஓய்வு பெறும் கல்வியாண்டுத் தொடக்கத்திலேயே மனச்சோர்வுக்கு ஆளானார். ஒருநிகழ்ச்சியில் பேசிய போது ‘பணி ஓய்வு என்பது சாவுக்குச் சமம்’ என்று சொன்னார். அவர் ஒருகாலத்தில் கவிதைகள் எழுதினார். வானம்பாடி கவிஞர்களுள் ஒருவராக அவர் பெயரும் இடம்பெறும். பட்டிமன்றத்தில் பேசினார். இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். நவீன இலக்கியம் பற்றி விமர்சனப்பூர்வமாகப் பேசுவார்; எழுத்தாற்றலும் உள்ளவர். பழந்தமிழ் இலக்கியப் புலமையும் கொண்டவர். வகுப்புக்குச் செல்ல மாட்டார்; சென்றால் நன்றாக நடத்துவார்.

அவரிடம் சொன்னேன், ‘ஐயா, இந்தக் கல்லூரிப் பணியிலிருந்துதான் ஓய்வு பெறப் போகிறீர்கள். ஓய்வூதியம் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சினையில்லை. உங்களுக்கு இன்னும் எத்தனையோ ஆர்வங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு ஏது ஓய்வு? இதுவரை அவற்றில் செலுத்தாத கவனத்தை இனிச் செலுத்துங்கள்.  மகிழ்ச்சியோடு இருக்கலாம்.’

சரிதான் என்று நான் சொன்னதை அங்கீகரித்தார். ஆனால் மனச்சோர்விலிருந்து மீள முடியவில்லை. பணி ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்கள் முன்னரே மாரடைப்பால் இறந்து போனார். இத்தகைய மனநிலை பலருக்கும் வருவதால்தான் ‘பணி ஓய்வு’ என்று சொல்லாமல் இப்போதெல்லாம் ‘பணி நிறைவு’ என்று சொல்கிறார்கள் போல. அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த ஆசிரியருடன் முரண்பாடு கொண்டிருந்தார்.  ‘நான் ஓய்வு பெறும்போது துறைச் சாவியை அவர் கையில் தர மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்த்துறைக்குள் என்ன இருக்கப் போகிறது? மாணவர் வருகைப் பதிவேடுகளும் சான்றிதழ்களும் இருக்கும். கருவூலமா இருக்கும்?

அவரைப் பொருத்தவரைக்கும் வெறும் சாவியல்ல அது. அதிகாரப் பரிமாற்றம். அதனால் வேறு கல்லூரிகளில் இருந்த சிலரை இக்கல்லூரிக்குப் பணியிட மாறுதலில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தார். அப்படி யாராவது வந்தால் துறைத்தலைவர் ஆகிவிடுவார்கள். அவர்களிடம் சாவியை ஒப்படைப்பதில் பிரச்சினையில்லை. தனக்கு அடுத்திருக்கும் ஒருவர் அதிகாரம் பெற்றுவிடக் கூடாது; அவ்வளவுதான். ஓய்வு பெறும் காலத்தில் மனக்கனிவு ஏற்பட வேண்டும். மாறாகப் பழியுணர்ச்சி மிகுந்திருந்தது. அடுத்திருந்தவரிடம் மட்டுமல்ல, யாரிடமும் சாவியை ஒப்படைக்க முடியாமல் போய்ச் சேர்ந்துவிட்டார்.

பணிக் காலத்தில் தாம் அனுபவித்த அதிகார மனநிலை ஓய்வுக் காலத்தில் செல்லுபடியாகாது. அதிகாரத்தை யாரெல்லாம் துய்க்கிறார்களோ அவர்களால் ஓய்வின் மகிழ்வைத் துய்க்க இயலாது. ஓய்வை இயல்பாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதை இயல்பாக ஏற்றுப் பிந்தைய காலத்தைப் பயனுள்ள வகையில் மாற்றிக்கொள்வோர் வியப்புக்குரியவர்கள். அப்படிப்பட்ட வியக்க வைக்கும் ஆளுமை கே.நல்லதம்பி.

நல்லதம்பி என்னும் நல்ல மனம்

தமிழ், கன்னடம் ஆகிய இருமொழி இலக்கிய உலகிலும் கடந்த பத்தாண்டுகளில் தீவிரமாகச் செயல்பட்டுத் தமக்கென ஓரிடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர். தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய அளவில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகுதான் எதேச்சையாக இலக்கிய உலகிற்குள் நுழைந்தார். கன்னடத்தில் ‘லங்கேஷ்’ இதழில் வெளியாகி நூலான ஏறத்தாழ ஆயிரத்தைந்தூறு குறுங்கவிதைகளில் இருந்து நானூறைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார். அதைத் தம் வீட்டுக்கு அருகில் வசித்த எழுத்தாளர் தமிழவனிடம் கொடுத்திருக்கிறார். பின்னர் அது நூலாக்கம் பெற்றது. அதன் பிறகு அவரது மொழிபெயர்ப்புப் பயணம் நிற்கவேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் கன்னடத்திலிருந்து தமிழுக்கு முப்பத்தைந்து நூல்கள்; தமிழிலிருந்து கன்னடத்திற்கு இருபத்தைந்து நூல்கள். கிட்டத்தட்ட அறுபது நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரைப் போல இருமொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்பவர்கள் அரிது. மைசூரில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் சிறுவத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஓராசிரியரை வரவைத்துக் கிட்டத்தட்ட நூறு குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க அவர் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். பள்ளிக் கல்வி கன்னட வழியில் என்றாலும் தமிழையும் நன்கு அறிந்திருக்கிறார். தமிழ் இதழ்களைத் தொடர்ந்து வாசித்திருக்கிறார். ஆகவே இருமொழிப் புலமை இயல்பாக வந்திருக்கிறது.

தமிழிலிருந்து கன்னடத்திற்கு இவர் மொழிபெயர்த்த முதல் நூல் ‘மாதொருபாகன்.’ அடுத்து ‘பூக்குழி’யையும் இவர் மொழிபெயர்க்க இரண்டையும் கௌரி லங்கேஷ் வெளியிட்டார். பூனாச்சியின் கன்னட மொழிபெயர்ப்பும் இவர் செய்ததே. 2017ஆம் ஆண்டிலிருந்தே இவரை அறிவேன். எனினும் அதிகம் சந்திக்கவும் பேசவும் வாய்த்ததில்லை. பெங்களூருவிலும் தமிழ்நாட்டிலும்  இலக்கிய நிகழ்வுகளில் சில நிமிடங்கள் பார்த்துப் பேசியதுதான்.  சமீபத்தில் ஏப்ரல் 23 அன்று பெங்களூருவில் சந்திக்க வாய்த்தது. நானிருந்த இடத்துக்கும் அவர் வீட்டுக்கும் வெகுதொலைவு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். தேடி வந்தவர் பொறுமையாகச் சில மணி நேரம் தங்கியிருந்தார். நிதானமாக அவருடன் பேச வாய்த்தது.

மாதொருபாகன் மொழிபெயர்ப்பு கன்னட இலக்கியச் சூழலில் அவருக்கு பெரும் ஏற்பை உருவாக்கிக் கொடுத்தது என்று சொன்னார். அதில் ‘மயிராண்டி’ என்று ஒரு வசைச்சொல் வரும். அதற்குப் பொருத்தமான சொல்லைக் கன்னடத்தில் கண்டுபிடித்துப் போடச் சில நாட்கள் ஆயிற்று என்று சொன்னார். அச்சொல் மிகவும் பொருத்தமாக இருப்பதாகப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். மூவாயிரம் படிகள் வீதம் அச்சிட்ட என் நாவல்கள் இரண்டுக்கும் கன்னட இலக்கிய உலகில் நல்ல கவனம் கிடைத்தது; விற்பனையும் ஆயிற்று. அடிப்படைவாதிகளால் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு அவை மறுபதிப்பாகவில்லை. வேறு பதிப்பகத்தில் மறுபதிப்பு வெளியிடப் பேசுவதாகச் சொன்னார்.

அவரது பெயரைப் பற்றி எனக்கு ஓர் ஊகம் இருந்தது. 1949ஆம் ஆண்டு நவம்பரில் அவர் பிறந்திருக்கிறார். அவ்வாண்டு பிப்ரவரியில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த ‘நல்லதம்பி’ திரைப்படம் வெளியானது. அறிஞர் அண்ணாவின் கதை. அவர் பெயருக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் தொடர்ப்பு இருக்குமோ என்று எனக்கு ஐயம். அந்தப் படப்பெயரைத்தான் அவருக்கு வைத்தார்கள் என்று உறுதிப்படுத்தினார். தமிழ்த் திரைப்படங்களுக்கும் மக்கட்பெயருக்குமான தொடர்பு ஆழமானது. அது பற்றிய ஆய்வில் சுவையான தகவல்கள் கிடைக்கும்.

1950, 60களில் பிறந்த பெண் குழந்தைகள் பலருக்கு ‘சரோஜா’ என்று பெயர் இருக்கும். அப்போது பேபி சரோஜா, பி.எஸ்.சரோஜா, ஈ.வி.சரோஜா, சரோஜாதேவி எனப் பிரபல நடிகையர் இருந்தனர். அதன் தாக்கத்தை மக்கட்பெயர்களில் காணலாம். கே.பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ 1979ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதன் கதாநாயகியின் பெயர் ‘சரோஜா.’ 1960களில் பிறந்தவள் என்று யூகம் செய்ய அப்பெயரே போதுமானது. ‘பூக்குழி’ நாவல் நாயகிக்கு அந்த எண்ணத்தில்தான் ‘சரோஜா’ என்று பெயர் வைத்தேன். நடிகர், நடிகையர் பெயர்களை வைப்பது மட்டுமல்ல, கதாபாத்திரங்களின் பெயர்களையும் வைப்பார்கள். நல்லதம்பி அதற்கு நல்ல சான்று. உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் ‘கோபி.’ மிகப்பெரிய வெற்றிப் படம் அது. அது வெளியான ஆண்டும் அதற்கு அடுத்த சில ஆண்டுகளிலும் பிறந்த ஆண் குழந்தைகளுக்குக் ‘கோபி’ என்று பலர் பெயர் வைத்தனர்.

அதைப் பற்றியும் பேசினோம். அவர் தமது மொழிபெயர்ப்புப் பயணம் பற்றி விரிவாகப் பகிர்ந்துகொண்டார். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது உள்பட பலவற்றைப் பெற்றிருக்கிறார். சிறுகதை எழுத்தாளராகவும் மாறிவிட்டார். 2018இல் காலச்சுவடு இதழில் ‘தமன் நெகாரா’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதை வெளியாயிற்று. மொழிவளமும் சொல்முறையும் என்னைக் கவர்ந்தன. அந்நியச் சூழலில் சந்திக்கும் நடுத்தர வயது ஆணும் பெண்ணும் காதல் வயப்படுவது தொடர்பான கதை. அதன் முடிவில் வரும் ‘No’ என்ற ஒற்றைச் சொல்லும் அற்புதமான தழுவலும் கதையை வேறொரு இடத்திற்குத் தூக்கிச் சென்றுவிடும். அதைப் போல வேறுபட்ட காதல்களை வைத்து எழுதிய ஆறு கதைகளைக் கொண்ட தொகுப்பு ‘அத்தர்’ என்னும் தலைப்பில் நூலாகியுள்ளது. எதிர் வெளியீடு.

நல்லதம்பி என்னும் நல்ல மனம்

அடுத்துத் தம் குடும்பக் கதையை மையமாகக் கொண்டு நாவல் எழுதும் திட்டம் வைத்திருக்கிறார். அவரது பூர்வீகம் கரூர் மாவட்டம். அவரது குலதெய்வம் அங்கேதான் இருக்கிறது. குடும்பப் பின்னணி பற்றிச் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். நாவலாக்கத்திற்கு விரிவான களம்தான் அது. விரைவில் எழுதுங்கள் என்று சொன்னேன். தொடக்கம் பற்றியும் சொல்முறையையும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரிடமிருந்து நல்ல நாவல் வரும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

பணி ஓய்வுக்குப் பிறகு இலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கிப் பெருஞ்சாதனை புரிந்திருக்கும் அவர் இப்போது எழுபத்தைந்து வயதைக் கடந்திருக்கிறார். இன்னும் அறுபதை எட்டாத எனக்கு அவ்வப்போது ஏற்படும் சோர்வைப் போக்கிக்கொள்ளும் மருந்தாக நல்லதம்பி அவர்களைத்தான் நினைத்துக்கொள்கிறேன். நல்ல மனம் வாழ்க!

—–   07-05-25

Latest comments (2)

நாகராஜன்

நல்லதம்பி ஐயா அவருக்கு நீங்கள்
நல்ல தம்பியாக இருப்பிர்கள் ஐயா
சோர்வு இன்றி.

T. LAKSHMAN

நல்லதம்பி என்ற மொழிபெயர்ப்பாளரை குறித்த சிறந்த அறிமுகம் ஐயா. தங்களுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் ஊட்டும் நல்லதம்பி சாரின் பணிகள் தொடர வாழ்த்துகள்