ஆனந்தவிகடன் (01-05-1938) இதழிலிருந்து கண்டெடுத்த கவிதையின் முழுவடிவம் இது:
“கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!”
-சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி –
கள்ளில்லாமெ கொஞ்சநாளா
கெரக்கந்தாண்டா இருந்துச்சு
செள்ளெப்புடிச்ச சனியன் நெனப்பு
ரொம்ப நாளுப் போவல்லே!
(1)
வெளக்கேத்தி வூடுவந்தா
புயுக்கிவேறே மிஞ்சிட்டா
களுக்கெண்ணு சிரிச்சியென்னே
கேலிபண்ணத் துணிஞ்சிட்டா!
(2)
(எண்ணாநெஞ்சு அயுத்தம் இப்ப
என்னெ ஏசிப் பேச?
அண்ணக்கி அவ அடிபட்டா –
கள்ளு குடிச்ச நேரம்!)
(3)
சிறுக்கி என்ன பேச்சுப் பேசி
என்னெ இப்போ மடக்கறா?
அறுப்புக்கூலி அல்லாம் போட்டு
சேலெவாங்கிக் கட்டிட்டா!
(4)
சட்டிப்பானெ புச்சாவாங்கி
சோறுபொங்கிப் படைக்கறா,
குட்டி “சோரா” கறிகொயம்பு
வச்சுதாண்டா போடறா!
(5)
(கறியேது, கொயம்பேது,
சோத்துப்பருக்கை யேது,
அரவவுத்துக் கஞ்சியேது
அந்தப்பாயும் குடியிலே!)
(6)
எண்ணெத் தேச்சி முயுவி மயிரே
அள்ளிச் சொருவிப் பயமவ
கண்ணெச் சிமிட்டிக் குலுக்கிக் கையை
வீசி நடந்து மினுக்கறா!
(7)
(கூளம்பேலே சிக்குப் புடிச்சி
செடெவுயந்த மயிரும்
சோளத் தட்டெப்பேலெ சொரியும்
எலும்பெடுத்து இருந்தா!)
(8)
ஒய்யார நடெபோடறா!
ஒயிஞ்ச நேரம் பாத்து
கையாரக் கொட்டெநூத்து
காலம் போக்க ராடா!
(9)
கள்ளுப் போச்சு! – கருப்பி வாரா!
எயிந்து போடா சொக்கா!
கள்ளுப்போனா போ(வ)ட்டும் போடா,
கருப்பி யிருக்கா நேக்கு!
(10)
(கு.ப.ரா.)
—–
நாட்டுப்புறப் பாடல் சந்தத்தில் அமைந்தது இது. இந்த வடிவில் அவர் எழுதிய நான்கு கவிதைகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. இது ஐந்தாவது கவிதை. இந்திய விடுதலைக்கு முன் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது தம் சொந்த மாவட்டமான சேலத்தில் (இப்போதைய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகியவை இணைந்த சேலம் மாவட்டம்) முதன்முதலாகப் பரிசோதனை முறையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அது 1937ஆம் ஆண்டின் இறுதி. மூன்று மாதங்களுக்குப் பிறகு மதுவிலக்கினால் மக்கள் வாழ்க்கைத் தரம் எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை விளக்கிச் சேலம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்தார்.
அவ்வறிக்கை ‘குடியினால் ஆயிரக் கணக்கான ஏழைக் குடும்பங்கள் துக்கத்தில் ஆழ்ந்து கிடந்தன. வீட்டில் சண்டையும் சோற்றுக்கில்லாத திண்டாட்டமும் கடன் தொல்லையும் மலிந்து கிடந்தன. மதுவிலக்கு அமுலுக்கு வந்த இந்த மூன்று மாதத்திற்குள்ளாகவே இந்த ஜில்லாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் நிலைமை வியக்கத்தக்கவாறு சீர்திருந்திவிட்டது. குடும்பச் சண்டைகளும் புருஷன் – மனைவி அடிபிடிகளும் ஒழிந்துவிட்டன. கஞ்சிக்குக் குறைவில்லை. கடன்காரன் கெடுபிடியும் தொல்லையும் குறைந்துவிட்டது’ என்று கூறியது.
தாம் பணியாற்றிக் கொண்டிருந்த ஹிந்துஸ்தான் இதழில் (13-03-1938) மதுவிலக்கினால் தாம் அடைந்த நன்மையை ஒரு பெண் பேசுவதாகக் கற்பனை செய்து கு.ப.ரா. கவிதை எழுதினார். அதுதான் ‘விமோசனப் பள்ளு.’
விமோசனப் பள்ளு
(பாரதியின் ‘காற்றடிக்குது’ என்ற மெட்டு)
கள்ளெக் குடிச்சிநீ கையாலடிச்சென்னெ
காலா லுதச்ச காலமில்லே!
பள்ளத் தெருவே பொளச்சிப் போச்சு
ஒங்க குடி ஓஞ்சயிப்போ!
மெள்ள மெள்ள செட்டிக்கடெ நவெ
போன மூக்குத்திப் பூச்சிக்கட்டு –
வள்ள வள்ளமா வாரநெல்லு கட்டி
மீட்டுவந்து போட்டுக்குறேன்!
கொள்ளப் பணமா கூடிக்குத்தவெ
பாக்கி விளுந்திருந்ததெல்லாம்
தள்ள மாட்டேன் எண்ண சமீன்தார்
தள்ளி நோட்டை கிளிச்சிட்டாரு!
வெள்ளக்கார ராசாகிட்டெவொரு
சேலத்து சாமி மந்திரியாம்;
புள்ளெகுட்டி நல்லாயிருக்கணும்
ஏளெமக்களெ காக்க சட்டம்
அள்ளிச் சோறு போல போடுராரு
காந்தி கச்சி கட்டளெயாம்!
கள்ளெ ஒளிச்சி கஞ்சி ஊத்துரார்
என்ன பெத்த மவராசா!
—-
அதன் பின் கிட்டத்தட்ட இருமாத இடைவெளியில் ஆனந்த விகடன் (01-05-1938) இதழில் அவர் எழுதியதுதான் இப்போது கிடைத்திருக்கும் ‘கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!’ கவிதை. ‘சேலம் ஜில்லாவில் ஒருகாட்சி’ என்னும் துணைத் தலைப்புடன் இக்கவிதை வெளியாகியுள்ளது. இரண்டையும் ஒரே சமயத்தில் எழுதியிருக்கக் கூடும். ஆனந்த விகடனில் தாமதமாக வெளியாகியிருக்கலாம். அல்லது ஹிந்துஸ்தான் இதழில் வெளியானதை வாசித்துவிட்டு அதேபோல இன்னொன்று எழுதித் தரக் கேட்டு வாங்கியும் ஆனந்த விகடன் பிரசுரித்திருக்கலாம்.
‘விமோசனப் பள்ளு’ பெண்கூற்று; ஐந்து பகுதிகளைக் கொண்டது. ‘கள்ளு போச்சு…’ ஆண்கூற்று; பத்துப் பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றுக்கும் கீழ் எண்ணிட்டு அமைந்திருக்கிறது. அவற்றில் மூன்று அடைப்புக்குறிக்குள் உள்ளன. அவை அவன் மனதிற்குள் சொல்லிக் கொள்வது என்பதைக் காட்ட அடைப்புக்குறி பயன்பட்டுள்ளது. கள் குடியை விட்டதும் தம் மனைவியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு விவரிக்கிறான். அதன் பின் அடைப்புக் குறிக்குள் வரும் ஒருபகுதி இன்றைய நிலையையும் மதுவிலக்கு வருமுன் எத்தகைய நிலை இருந்தது என்பதையும் ஒப்பிட்டுத் தன் நெஞ்சுக்குச் சொல்லிக் கொள்வதாக அமைகிறது. அவன் மனைவி சொக்கி இப்போது ஏசிப் பேசுகிறாளாம்; கள்ளுக் குடித்த அப்போது அவனிடம் அடிவாங்கினாளாம்.
அடுத்து இருபகுதிகள் அவள் சேலை வாங்கிக் கட்டிக்கொண்டதையும் உணவில் ஏற்பட்ட மாற்றத்தையும் சொல்கின்றன. அடுத்து வரும் அடைப்புக்குறிப் பகுதி கறியேது, கொயம்பேது, சோத்துப்பருக்கை யேது, அரவவுத்துக் கஞ்சியேது, அந்தப்பாயும் குடியிலே என்று அப்போது உணவுக்குப் பட்ட கஷ்டத்தை நெஞ்சுக்குச் சொல்கிறது. அதையடுத்து அவள் தலையைச் சீவிக்கொள்ளும் அழகு பற்றிச் சொல்கிறது. அடைப்புக்குறிக்குள் வரும் மூன்றாம் பகுதி கள் குடித்துக் கொண்டிருந்த காலத்தில் கூளம் போல அவள் தலைமயிர் சிக்குப் பிடித்துக் கிடந்ததையும் சோளத்தட்டைப் போல இளைத்து எலும்பு தெரிய அவள் இருந்த நிலையையும் ஒப்பிட்டு நெஞ்சுக்குச் சொல்கிறது. இறுதிப் பகுதி அவள் ராட்டையில் நூல் நூற்கும் வேலை செய்வதைச் சொல்லி அவன் முடிவை அழுத்தமாக வைக்கிறது. ‘கள்ளுப் போனா போகட்டும் போடா, கருப்பி இருக்கா எனக்கு’ என்று சொல்லி முடிகிறது.
பேச்சு மொழியில் எழுதிய எளிமையான பாடல் இது. ழகரத்தை யகரமாக ஒலிக்குமாறு புயுக்கி, அயுத்தம், கொயம்பு, முயுவி, ஒயிஞ்ச, எயிந்து ஆகிய ஐந்து சொற்களைப் பயன்படுத்துகிறார். அவை முறையே புழுக்கி, அழுத்தம், கொழம்பு, முழுகி, ஒழிஞ்ச, எழுந்து என வர வேண்டியவை. புழுக்கி என்பதன் பொருள் மட்டும் புரியவில்லை. மனைவியைச் செல்லமாகத் திட்டுவதற்கு அச்சொல்லைப் பயன்படுத்துகிறார். அப்படி ஒரு வசைச்சொல் இருந்ததோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இந்த ழகரம் யகரமாகும் மாற்றம் சேலம் மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்து அவர் கேட்டிருப்பார் என்பது புரியவில்லை. கடைசி அடி ‘கருப்பி இருக்கா நேக்கு’ என்று முடிகிறது. ‘நேக்கு’ என்பது பார்ப்பனர் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஓசைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார் போலும். னகரத்தைப் பெரும்பாலான இடங்களில் மாற்றவில்லை. சில இடங்களில் ணகரமாக மாற்றியிருக்கிறார். பேச்சு வழக்கைப் பயன்படுத்துவதில் ஒருமையில்லை.
கு.ப.ரா. எழுதியிருக்கும் மதுவிலக்கைப் போற்றும் இருபாடல்களும் அவர் கொண்டிருந்த இலக்கியக் கொள்கைக்கு எதிரானவை. பிரச்சாரப் பாடல்கள். நிர்ப்பந்தத்தால் எழுதினாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பினும் மதுவிலக்கு வரலாற்றில் இவற்றை எழுதியதன் மூலம் கு.ப.ரா.வும் இடம்பிடித்திருக்கிறார்.
(இக்கவிதையைக் கண்டெடுக்க உதவிய அழிசி ஸ்ரீனிவாச கோபாலன், கவிஞர் வெய்யில், ஆனந்த விகடன் ஆகிய அனைவருக்கும் நன்றி.)
—– 28-04-25
கு. ப. ரா. கிராமிய மொழியில் எழுதிய கவிதைகளின் சிறப்பை பாராட்டும் போது அவர் ஓர் இலக்கிய விமர்சகர் என்பதையும் இங்கு நினைவு கூற வேண்டும் அவர் ஆர் சண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் என்ற நாவலுக்கு முன்னுரை அளிக்கும் பொழுது அந்த நாவல் ஒரு பிராந்திய நாவல் என்றும் கிராம மொழியை கையாள்கிறது என்றும் இரண்டே மாதத்தில் நாவலாசிரியர் அதை எழுதியது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அந்த நாவலை ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டியுடன் ஒப்பிட்டு ஓர் ஒப்பாய்வுக்கு அடித்தளம் என்றார் என்பதை நாம் உணர வேண்டும்
Thomas Hardy was well known for his regional novel. His novel Tess of derbervellis deals with a tragic life of a gullible milk maid who is sexually exploited by the cunning educated persons. It deals with the women’s issues in a different platform akin to the tragic story of Nagammal in an Indian rural context. The observation of Ku.Pa.Ra. regarding the similarities between the established precursor Hardy in English to the nascent story writer in Tamil R. Shanmugasundam displays the scholarship of the Tamil poetic, story writer and literary critic and an expert in comparative literature Ku.Pa.Ra. I really appreciate your write up on this great personality. Similarly let’s also appreciate R. Shanmugasundam, hailing from Kongu region for his literary outputs in spite of his financial limitations and sufferings as a full time writer.