வரைகலை நாவலாக வாடிவாசல் வெளியாகித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழில் இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஒருபதிப்பே கூடுதலான எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவர். முதல் பதிப்பு விற்பனை நிறைவாக இருக்கிறது. காமிக்ஸ், கிராபிக்ஸ் வடிவ நூல்களுக்குப் பெருந்திரள் வாசகர் இருப்பதை இந்நூல் வெளியீட்டின் மூலம்தான் அறிந்தேன். அவர்களுக்கு நூலைக் கொண்டு சேர்க்கச் சைமன் சூஸ்டர் பதிப்பகம் தொடர்ந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது மகிழ்ச்சி தருகிறது.
12 ஏப்ரல் 2025 அன்று பெங்களூரு, வசந்த் நகரில் உள்ள ‘சம்பகா புத்தகக் கடை’யில் ஓர் உரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாலை 5.30 மணிக்கு நிகழ்வு. ஐந்து மணிக்கு அங்கே சென்றுவிட்டேன். காரில் இருந்து இறங்கியதும் தவறான இடத்திற்கு ஓட்டுநர் என்னை அழைத்து வந்துவிட்டாரோ என்று சந்தேகம் வந்துவிட்டது. பெங்களூரு போன்ற மாநகரில் கடைவீதியில் தானே ஒரு புத்தகக் கடை இருக்கும்? இது குடியிருப்புப் பகுதி. கடைகள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ஆட்களின் நடமாட்டமும் இல்லை. கதவுகள் அடைத்த பெரிய வீடுகளில் யாரிடம் கேட்பது? ஓட்டுநரைத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். வரைபடம் இவ்விடத்தைத்தான் காட்டுகிறது என்று தம் கைப்பேசியை நீட்டுகிறார்.
ஓவியர் அப்புபென் எனக்கு முன் வந்துவிடுவேன் என்று சொன்னதால் அவருக்கு அழைத்துக்கொண்டே சுற்றிலும் கண்ணோட்டினேன். அழைப்பை அவர் ஏற்ற நொடியில் எதிரே ‘சம்பகா’ என்னும் சிறுபலகையைக் கண்டேன். ‘வந்துவிட்டேன்’ என்று அவரிடம் சொன்னேன். அதற்குள் அங்கே நின்றிருந்த சிலர் ‘வாங்க’ என்று அழைத்துச் சென்றனர். பலகை இருந்த வீட்டில் கடை இருக்கும் என்று நினைத்தேன். இல்லை, உள்ளே நுழைந்து சிறுசந்து ஒன்றுக்குள் சென்று இரும்புப் படிகள் ஏறிச் சென்றால் மாடியில் கடை.
எனக்கு எழுத்தாளர் திலீப்குமார் நினைவு வந்துவிட்டார். 1990களில் இலக்கிய நூல்களை வாங்க வேண்டும் என்றால் சென்னையில் இரண்டே கடைகள் தான். தியாகராய நகர், ரங்கநாதன் தெருவின் கடைசியில் இருந்த முன்றில் புத்தகக் கடை ஒன்று. மந்தைவெளியில் தம் வீட்டிலேயே திலீப்குமார் நடத்திய பெயரற்ற புத்தகக் கடை இன்னொன்று. பேருந்தில் இறங்கிப் பெரியதும் சிறியதுமான தெருக்களைக் கடந்து திலீப்குமார் வீட்டை அடைய வேண்டும். அவர் கடைக்குப் போன பழக்கத்தில் மந்தைவெளிப் பகுதியே நன்றாக அறிமுகமாயிற்று.
அப்படி ஒரு கடையாக இருக்கும் போல.. இந்த இடத்தைத் தேடி வாசகர்கள் எப்படி வருவார்கள் என்று யோசித்தபடி மாடியேறினேன். என்னை வரவேற்றது ஒரு கபே. வலப்பக்கத்தில் சிறு உணவகம். இடப்பக்கம் பெரிய அலமாரிகளில் புத்தகங்கள். இத்தாலிப் பயணத்தில் கண்ட ‘Book with Kitchen’ கடை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சம்பகா புத்தகக் கடையும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான். இங்கே உள்ள உணவகத்தில் சிற்றுண்டிகளும் குளிர்பானம், சுடுபானங்களும் கிடைக்கின்றன. உணவு இல்லை என்பதுதான் வேறுபாடு. நாற்காலிகளும் மேஜைகளும் கொண்ட கடை. குடிக்க ஏதேனும் வாங்கிக்கொண்டு புத்தகத்தோடு உட்கார்ந்துவிடலாம்.
ஒரு வீட்டின் மொட்டை மாடிதான் அது. நாற்புறமும் கூரை இறக்கி நடுவில் வெளிச்சம் வரும்படி அட்டை பதித்து அழகாக அவ்விடத்தை உருவாக்கியிருந்தனர். கொங்குப் பகுதியில் அந்தக் காலத்தில் ‘தொட்டிக்கட்டு வீடு’ என்று ஒருவகை வீடுகள் இருக்கும். நாற்புறமும் இறங்கிய கூரைகளில் இருந்து மழைநீர் வடிந்து நடுவில் இருக்கும் தொட்டி போன்ற பகுதியில் கொட்டும். வீட்டின் பரப்புக்கு ஏற்ப நடுப்பகுதி சிறிதாகவோ பெரிதாகவோ அமைந்திருக்கும். சாதிப் பெருமை பேசும் திரைப்படங்களில் அவற்றைப் பார்த்திருக்கலாம்.
சம்பகாப் புத்தகக் கடையின் அமைப்பும் அப்படித்தான் இருந்தது. உணவகமும் புத்தகங்களும் எதிரெதிரே இருக்க இன்னொரு பகுதியில் நாற்காலிகள். டகர வடிவம். கிட்டத்தட்ட இருபது பேர் கடையில் கூடியிருந்தனர். உணவு மேசைகளுக்கு இடையே எப்படிக் கூட்டம் நடக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருமையான காப்பி கொண்டு வந்து கொடுத்தார்கள். நண்பர்களோடு பேசிக்கொண்டே அருந்தினேன். அப்போது கடை ஊழியர்கள் மெல்ல வந்து ஒருநிமிடம் நின்று கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். எனக்குப் புரியவில்லை. எழுந்து நின்றோம். மேசைகளைத் தூக்கி ஒருபுறம் அடுக்கிவிட்டு நாற்காலிகளைப் போட்டனர். ஐந்து நட்சத்திர விடுதி பார்களில் ஓராள் உயரத்திற்குப் போட்டிருப்பார்களே, அத்தகைய நாற்காலிகள் சில இருந்தன. அவற்றைப் பின்னால் போட்டுச் சிறுநாற்காலிகளை முன்னால் போட்டு ஐந்து நிமிடத்தில் அதை ஓர் அரங்காக்கிவிட்டனர்.
உரையாளர்கள் அமரும் பகுதி டகரத்தின் இணைப்பு மூலை. இருபுறமும் வாசகர்கள் அமர்ந்தனர். ஏற்பாடுகள் முடிவதற்குள் கிட்டத்தட்ட அறுபது பேர் கூடிவிட்டனர். சிலருக்கு அமர இடம் இல்லை. நின்று கொண்டனர். வயதான முகங்கள் குறைவாகவே தென்பட்டன. இளைய முகங்களே அதிகம். சித்திரக் கதை, வரைகலை நூல்களுக்கு இளையவர்கள் பெருமளவு வாசகர்களாக இருப்பதை வாடிவாசல் நிகழ்வுகளில் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வளவு பேரையும் காணப் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் உணவகத்தை மூடிவிட்டனர்.
வாடிவாசல் நூலுக்குத் தொடக்கத்தில் வரைந்த ஓவியங்கள் சிலவற்றைத் திரையில் காட்டி விளக்கி அப்புபென் தொடங்கினார். நிகழ்வை ஒருங்கிணைத்தவர் சமிக்தா ஆரணி (Samhita Arni). அவருடைய பூர்விகம் தமிழ்நாட்டில் உள்ள ஆரணிதானாம். ஆங்கிலத்தில் எழுதுபவர். தம் பதினோராம் வயதிலேயே மகாபாரதம் பற்றி நூல் எழுதிப் புகழ் பெற்றவர். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களைத் தம் பார்வையில் தொடர்ந்து புனைவுகள் ஆக்கியுள்ளார். பல நாடுகளில் வசித்த அவர் இப்போது பெங்களூருவில் இருக்கிறார். பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராகவும் பிரபலம். நல்ல தயாரிப்புடன் வந்திருந்தார்.
இந்த நூல் திட்டம் உருவான விதம், அப்புபெனுக்கும் எனக்கும் இடையிலான இயைபு, ஜல்லிக்கட்டைக் காண அப்புபென் மேற்கொண்ட பயணம், எழுத்து வடிவம் தருவதில் இருந்த சிக்கல் என்று கேள்வியும் பதிலுமாக உரையாடல் விரிந்தது. வழக்கமாக அப்புபென் ஜாலியாகப் பேசுவார். நான் தீவிர பாவத்துடன் பேசுவேன். இந்த நிகழ்ச்சியில் என் தீவிரம் குறைந்து ஜாலியான மனநிலைக்கு ஆளானேன். இருவரும் ஒரே நிலையில் பேச அரங்கே சிரித்தும் மகிழ்ந்தும் களைகட்டியது. எந்த நிகழ்ச்சியிலும் சி.சு.செல்லப்பாவை மையப்படுத்துவதில் மிகுந்த கவனத்தோடு இருப்பது என் வழக்கம். இதிலும் அவ்வாறே செய்தேன்.
என் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பூர்வஜா. என்னை ஏற்கனவே சில நிகழ்ச்சிகளில் சந்தித்திருப்பதாகச் சொன்னார். எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். கல்வி சார்ந்த செயற்பாட்டாளர். என் பேச்சை மொழிபெயர்க்கக் கிடைத்த வாய்ப்பு பெருமை தருவதாகச் சொன்னார். நான் எங்கும் தமிழில் பேசுவதில் கிடைக்கும் ஒரு நன்மை பல மொழிபெயர்ப்பாளர்கள் அறிமுகம் ஆவது. ஒரு செய்தியைச் சொல்லி நிறுத்தித் தொடர்ந்ததால் மொழிபெயர்க்க அவருக்கு எளிமையாக இருந்தது.
தொடர்ந்து வாசகருடன் உரையாடல். ஆர்வத்துடன் கேட்டனர். காந்தியவாதியான செல்லப்பா வன்முறையான ஒரு விளையாட்டை மையப்படுத்தி எப்படி நாவல் எழுதினார் என்றும் ஒரு கேள்வி வந்தது. ஜல்லிக்கட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்றொரு கேள்வி. இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. வாடிவாசலோடு என் நூல்களும் விற்பனைக்கு இருந்தன. அரைமணி நேரம் கையொப்பம் போடும் வேலை. என் நூல்களைக் கட்டாகக் கொண்டு வந்து இருவர் கையொப்பம் வாங்கினர். புத்தகக் கடைக்கெனக் கொஞ்சம் பிரதிகளில் கையொப்பம் இட்டேன். கடை உரிமையாளர் தமக்கென ஒருநூலில் கையொப்பம் வாங்கிக் கொண்டார். கடையில் காசாளராக வேலை செய்யும் பெண்ணும் உதவியாளராக இருக்கும் பெண்ணும் தமிழர்கள். அவர்களிடம் பேசியதும் மகிழ்ச்சியாக இருந்தது.
அற்புதமாக நெய்த கம்பளத்தில் பறந்துகொண்டு பேசுவது போன்ற உணர்வை அந்த இடமும் சூழலும் உண்டாக்கின.
—– 18-04-25
அருமை ஐயா