(குறிப்பு: ‘அரசு கல்லூரிகளின் நிலை’ என்னும் தலைப்பில் ஆறு நாட்களாக எழுதி வந்தேன். பெரிய கட்டுரையாக இருப்பின் வாசிப்போருக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் பிரித்துப் பிரித்து வெளியிட்டேன். அது எழுத எனக்கும் வசதியாக இருந்தது. கல்லூரி ஆசிரியர்கள் பலரும் பொதுவாசகர்களும் ஆர்வமாக வாசித்ததை எதிர்வினைகள் மூலம் அறிந்தேன். தற்போது கல்லூரி முதல்வராக இருக்கும் நண்பர் ஒருவர் எழுதிய எதிர்வினை களநிலவரத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதை அவர் பெயர் குறிப்பிடாமல் இங்கே வெளியிடுகிறேன். அனைவருக்கும் நன்றி.)
பேராசிரியர் கதிரவன் என்ற பெயரில் ‘அறம்’ இதழில் வெளியான பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்த செய்திகளைப் படித்தேன். முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்தியாகக் கூறியிருப்பது சற்றே அதிர்ச்சியைத் தந்தது. பேராசிரியராக இருக்கும் ஒருவர் அவருடைய கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவராக இருப்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். கணினிக்கும் கைப்பேசிகளுக்கும் புதுப்பித்தல் அவ்வப்போது அவசியம் என்பது போல், கல்லூரி நிகழ்வுகளையும் கல்லூரி ஆசிரியர்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். கல்லூரியில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சுமத்தியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று.
வெளிமுகமை மூலம் தூய்மைப்பணியாளர்களையும் துப்புரவுப் பணியாளர்களையும் காவலர்களையும் நியமித்திருப்பது, கல்லூரிகளுக்கு முழுமையாகப் பயன் தரவில்லை என்பதுதான் உண்மை. ஒரு கட்டடம் மட்டுமே உள்ள கல்லூரிகளுக்குப் போதுமானவை. எங்கள் கல்லூரியில் (மூன்றாயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்) எட்டு கட்டடங்கள் உள்ளன. எட்டு கழிவறைத் தொகுப்புகள் உள்ளன. தூய்மைப் பணியாளர் இருவர், துப்புரவுப்பணியாளர் ஒருவர், காவலர்கள் இருவர் (பகல்நேரக் காவலர், இரவுநேரக் காவலர்) என ஐவர் வெளிமுகமை மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு நானூறு ரூபாய் வீதம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் வெளிமுகமை மாதத்திற்கு ஒன்பதாயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகின்றது. தூய்மைபணியாளர்களுக்கும் துப்புரவுப்பணியாளர்களுக்கும் எட்டாயிரம் மட்டுமே. ஞாயிற்றுக் கிழமைகளுக்கு ஊதியம் இல்லை.
நகரப் பகுதிகளில் மாதம் பதினைந்தாயிரம் ரூபாயை எதிர்பார்ப்பவர்களுக்கு ஊதியமும் குறைவு; வேலையும் அதிகம். வேலையைக் குறைக்க பெற்றோர் ஆசிரியர்கழக நிதிதான் கைகொடுக்கிறது. அதன் மூலம் கூடுதலாக மூன்றுபேரைப் பணியில் நியமித்திருக்கிறோம். நகரங்களில் துப்புரவுப்பணியாளர் வீடுகளில் வாரம் இருமுறை மட்டுமே வேலைக்குச் சென்று ஓராயிரம் ரூபாய் பெறும் சூழல் இருக்கையில், கல்லூரிகளில் அதிகளவில் உள்ள பணிகளைச் செய்வதற்கு அவர்கள் கேட்கும் வகையில் ஊதியம் வழங்கவோ, குறைவான வேலையை வழங்கவோ வாய்ப்பு இல்லை. குறைந்தபட்ச ஊதியம் வழங்கி ஓரளவிற்குத் தூய்மையாக வைப்பதற்கு பணியாளர்களின் பெரிய மனமும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியும்தான் உதவும்.
வெளிமுகமைப் பணியாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் நிர்ணயம் செய்கின்றது. ஏலம் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு வெளிமுகமைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. சில நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் காப்பீடு முதலியவற்றை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தப்புள்ளி கேட்பார்கள். சில நிறுவனங்கள் இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் மிகக்குறைந்த விலைப்புள்ளிகளை வழங்கி ஒப்பந்தம் பெற்று விடுவார்கள். (குறைவான ஒப்பந்தப்புள்ளி அளித்தவருக்கே வாய்ப்பு). அதிலும் குறிப்பிட்ட தொகை வெளிமுகமை நிறுவனத்தார் எடுத்துக் கொண்டு குறைவான ஊதியத்தையே தொழிலாளர்களுக்கு வழங்குகின்றனர். எந்தவித முதலீடும் இல்லாமல் வெளிமுகமை நிறுவனங்கள் பயன்பெறுகின்றன என்பது பேராசிரியர் கதிரவன் அறிந்தும் அறியாமல் பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
மாதம் ஒரு பணியாளருக்கு இரண்டாயிரம் வீதம் ஐந்து பேருக்குப் பத்தாயிரம். வருடத்திற்கு கல்லூரி ஒன்றிற்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம். குறைந்தபட்சம் ஒரு மண்டலத்தில் பத்துக் கல்லூரிகளுக்கு வெளிமுகமை நிறுவனம் அனுமதி பெற்றிருந்தால் பெறுகிற தொகை பேராசிரியர் கதிரவனுக்குத் தெரியுமா? வெளிமுகமை மூலம் மட்டுமே அடிப்படைப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியானதும் ஏற்கெனவே சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருபவர்களைக் காக்கும் பொருட்டு அவர்களை வெளிமுகமை நீக்கிவிடாமல் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதால் வெளிமுகமை நிறுவனங்கள் தொழிலாளர்களைத் தேடிக் கண்டறிய வேண்டிய அவசியம் எழவில்லை. பெருந்தன்மையுடன் அனுமதி தந்து விட்டார்கள்.
தூய்மைப்பணிக்கான சாதனங்களோ பொருட்களோ வெளிமுகமை நிறுவனம் வழங்காது. (கல்லூரிகள் வழங்க வேண்டும். அரசு ஒதுக்கும் தொகை மிகக்குறைவு. அதனைச் சமாளிக்க பெற்றோர் ஆசிரியர் கழக நிதிதான் உதவும்). ஊதியம் மட்டுமே வழங்க வெளிமுகமை நிறுவனம் ஊதியப்பட்டியலை வழங்கும். ஊதியம் கல்லூரி அலுவலகத்தால் IFHRMS மூலம் தொழிலாளர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அடிப்படைப் பணியாளர்களை கல்லூரியின் மாணவர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவிற்கு ஏற்ப வெளிமுகமை மூலம் இல்லாமல் பணிநியமனம் செய்யப்பட வேண்டும். இதனால் அரசு ஒதுக்கும் நிதி முழுமையாகத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும்.
அரசு நேரடியாகப் பணிநியமனம் செய்யாது என்றால் தற்காலிகப் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்குவது போல, கௌரவ விரிவுரையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கல்லூரி அலுவலகத்தால் IFHRMS மூலம் வழங்குவது போலத் தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கலாம். அடிப்படைப் பணியாளர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள இடங்களில் குடியிருப்பு வசதி ஏற்படுத்தித்தந்தால் தொழிலாளர்களுக்கும் கல்லூரிகளுக்கும் பயன் கிடைக்கும். மாணவர்கள் வருவதற்கு முன்போ அல்லது கல்லூரியிலிருந்து சென்ற பிறகோ தூய்மைப்பணிகளையும் துப்புரவுப்பணிகளையும் இடையூறு ஏதும் இல்லாமல் மேற்கொள்ள முடியும். கல்லூரி வளாகத்தில் குடியிருப்பதால் தொழிலாளர்களின் பயணம், விடுப்புச் சிக்கல்கள் வெகுவாகக் குறையும்.
கூடுதலாகச் செலவினம் ஏதும் வந்துவிட்டால் அரசுக் கணக்குகள் எதுவும் கைகொடுக்காது. அதிகாரிகளே முன்னாள் மாணவர் சங்கம் அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து செலவு செய்யுமாறு அறிவுறுத்துவார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ஆசிரியர்களின் பங்களிப்பினையும் கல்லூரிகள் பெற்றுள்ளன. சில ஆசிரியர்கள் நிதிதர மறுத்து கேள்வி கேட்டபோது, கல்லூரியில் உள்ள PTA பெற்றோர் ஆசிரியர் கழகமா? பெற்றோர் கழகமா? என்பதை முடிவு செய்து சொல்லுங்கள் என்று கூறி ஆசிரியர்களின் நிதி பங்களிப்பைப் பெறுவது தனிக்கதை.
நிரந்தர ஆசிரியரும் கௌரவ விரிவுரையாளரும் இல்லாத நிலையில் பத்துக்கு அஞ்சு பழுதில்லாமல் ஏதேனும் செய்யவேண்டும் என்றால், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து, அண்மையில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களைக் கொண்டு கல்லூரி முதல்வர்களால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிகிறது. ஆய்வக உதவியாளர்கள் இல்லாத கல்லூரிகளுக்கும் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள கல்லூரிகளுக்கும் பணியாளர்களை நியமித்து ஊதியம் வழங்கப் பெற்றோர் ஆசிரியர் கழகமும் முன்னாள் மாணவர் சங்கமும்தான் உற்றதுணை. கல்லூரி வளாகத்தை எந்தவித அலங்காரமும் இல்லாமல் தூய்மையாக வைத்திருப்பது மிகப்பெரிய சவால். சவாலைச் சமாளிக்க யானைப்பசிக்கு சோளப்பொரியாகப் பெற்றோர் ஆசிரியர் கழக நிதிதான் உதவுகிறது. பேராசிரியர் கதிரவன் சந்தித்த முதல்வர் ஏறுமாறாக இருக்கலாம். இது அனைவருக்கும் பொதுவானதாக அமையாதே.
—– 07-05-25
சிறந்த பதிவுங்க ஐயா