தொண்டு என்னும் சொல்லைத் தம் கவிதைகளில் பலமுறை பாரதியார் பயன்படுத்தியுள்ளார். உரைநடையிலும் அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும். கவிதை அடிகள் நினைவில் இருப்பதைப் போல உரைநடை இருப்பதில்லை. நிதானமாக அவர் உரைநடையிலும் ‘தொண்டைத்’ தேடிப் பார்க்க வேண்டும். இப்போதைக்குக் கவிதையில் அச்சொல்லாட்சியைக் காண்போம்.
சுதந்திர தேவியின் துதியில்,
அம்மை உன்றன் அருமை அறிகிலார்
செம்மை என்று இழிதொண்டினைச் சிந்திப்பார்
என்று எழுதியுள்ளார். சுதந்திர தேவியின் அருமை அறியாதவர் தாம் செய்யும் இழிவான அடிமை வேலையே சிறந்தது என்று கருதுவார்களாம். இழிதொண்டு என்கிறார். அடிமையைக் குறிக்காமல் அடிமை செய்யும் வேலைகளைத் தொண்டு குறிக்கிறது. ‘புதுமைப்பெண்’ கவிதையில்,
நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம்
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்த்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே அரிதாவதொர் செய்தியாம்
என்று வருகிறது. ‘நீசத் தொண்டு’ என அடைமொழி கொடுத்திருக்கிறார். தொண்டுக்கு அடிமை என்றே பொருள். அது இழிவானது. இங்கே மரபுப்பொருளில் இச்சொல் வந்திருக்கிறது. அதே பாடலில் இன்னொரு அடி:
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
சிறிய தொண்டுகள் எனில் ‘அடிமை செய்யும் வேலைகள்’ என்றே பொருள். அவை ‘சிறியவை.’ அதாவது அற்பமானவை அல்லது இழிவானவை. அடிமையைக் குறிக்காமல் அடிமை செய்யும் செயலுக்கு இங்கே ஆகிவருகிறது.
பாஞ்சாலி சபதத்தில் அரசவையில் திரௌபதியின் நிலை கண்டு வெகுண்டு தருமனை நோக்கிப் பேசும் வீமன் கூற்றாகப் பாரதியார் எழுதியிருக்கும் அடிகள் மிகவும் பிரபலமானவை.
சூதர் மனைகளிலே – அண்ணே
தொண்டு மகளிருண்டு
சூதிற் பணயமென்றே – அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.
தொண்டு மகளிர் – அடிமைப் பெண்கள். தொண்டச்சி என்பது பாரதியாரின் ஆக்கம். தொண்டச்சியைப் பதிவாக்கியிருக்கும் தமிழ்ப் பேரகராதி சான்றுத் தொடரைத் தரவில்லை. பாரதியார் எழுத்துக்களை அவ்வகராதி ஏனோ சான்றாகக் கருதவில்லை. தொண்டு, தொண்டச்சி இரண்டையும் அடிமைப் பொருளிலேயே பாரதியார் கையாண்டுள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கும் விஞ்ச் துரைக்கும் நடக்கும் உரையாடலாக இருகவிதைகளைப் பாரதியார் எழுதியுள்ளார். விஞ்ச் துரை கூற்று ஒன்று; அதற்கு வ.உ.சி. தரும் பதில் மற்றொன்று. விஞ்ச் துரை கூற்றாக வரும் கவிதையில் இப்படி ஓர் அடி:
தொண்டு ஒன்றே தொழிலாகக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய் புகழ் வேண்டினாய்
இங்கும் தொண்டு – அடிமை என்றே பொருள் வருகிறது. ‘அடிமையாக இருப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தோர்’ எனலாம். இன்னும் சிறிது தெளிவாக்கினால் ‘அடிமை வேலை செய்வது ஒன்றையே தொழிலாகக் கொண்டிருந்தோர்’ என்று விளக்கலாம். தொண்டு என்பது அடிமையைக் குறிக்காமல் அடிமை செய்யும் வேலைக்கு ஆகி வருகிறது என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.
இதைப் போலவே இன்னொரு பாடலும் உண்டு. ‘தொண்டு செய்யும் அடிமை’ என்னும் தலைப்பைக் கொண்ட பாடல். ‘சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது’ என்னும் குறிப்பு இப்பாடலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமே இதுதான்.
தொண்டு செய்யும் அடிமை – உனக்குச்
சுதந்திர நினைவோடா?
தொண்டு, அடிமை இருசொற்களும் ஒரே அடியில் அமைகின்றன. தொண்டு – அடிமை செய்யும் வேலை என்று பொருள் தருகிறது. இட்ட வேலையைச் செய்ய வேண்டியது அடிமையின் கடமை. ஆகவே ‘தொண்டு செய்யும் அடிமை.’
மரபான பொருளான அடிமையையும் அதிலிருந்து அடிமை வேலைகளைக் குறிக்கும் ஆகுபெயராகவும் பாரதியார் தொண்டு என்பதைப் பயன்படுத்தியுள்ளார். அவை மட்டுமல்ல. தொண்டை இன்றைய பொருளுக்கு மடை மாற்றம் செய்தவரும் பாரதியார்தான். அதற்கும் சில சான்றுகள் உள்ளன. ‘தாயின் மணிக்கொடி’ பாடலில்,
துஞ்சும் பொழுதினும் தாயின் – பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத் தினோரும்
என்று எழுதுகிறார். ‘தூங்கும் போதும் பாரதத் தாயின் பாதத்திற்குச் சேவை செய்வதையே நினைத்திடும் வங்காளிகளும்’ என்று பொருள். இங்கே அடிமை, அடிமை செய்யும் வேலை என்னும் பொருள்கள் இல்லை. ‘தன்னலம், எதிர்பார்ப்பு ஏதுமில்லாத பணி/சேவை’ என்றே பொருள் வருகிறது. பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியில் ‘தொண்டர்’ இவ்வாறு வருகிறது.
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
க்ரியா அகராதி தரும் ‘ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர்’ என்னும் பொருளுக்குப் பாரதியார் பாடலும் பொருந்துகிறது. கட்சி, பொதுநல அமைப்பு என்று க்ரியா அகராதி கூறும் நிறுவனங்களோடு தொண்டைப் பிணைத்தல் பின்னர் வந்திருக்கலாம். ‘ஊதியம் இல்லாமல் பணி செய்பவர்’ என்பதைப் பாரதியார் பாடலுக்கே சொல்லலாம்.
இன்று சமூகத் தொண்டு, தேசத் தொண்டு, தமிழ்த் தொண்டு, இலக்கியத் தொண்டு, கட்சித் தொண்டு, பொதுத் தொண்டு என்றெல்லாம் பலவாறாக விரிந்து பொருள் பெற்றிருக்கும் தொண்டுக்கு இப்பொருளை முதலில் ஏற்றியவர் பாரதியார்தான். தொண்டு – அடிமை என்னும் இழிபொருள் தருவதாகப் பல நூற்றாண்டுகளாக வழங்கி வந்தது. அதை உயர்பொருட்பேறு பெறச் செய்தவர் பாரதியார்.
கழகம் என்னும் சொல் சங்க காலத்தில் சூதாடும் இடத்தைக் குறித்தது. இன்று ‘பலர் கூடியிருக்கும் அமைப்பு – கட்சி, சங்கம், நிறுவனம்’ எனப் பொருள் தருகிறது. இழிபொருளில் வழங்கிய ஒருசொல் காலவோட்டத்தில் உயர்பொருளைப் பெறுவது மொழியில் இயல்பாக நடக்கும் செயல். அதற்குப் பொருத்தமான சான்றாகக் கழகம் என்பதைப் பலரும் காட்டுவதுண்டு. தொண்டும் இழிபொருளில் இருந்து உயர்பொருட்பேறு அடைந்த சொல். உயர்பொருளைப் பெறச் செய்ததில் பாரதியாரின் பங்கு முக்கியமானது.
பயன்பட்டவை:
- மகாகவி பாரதியார் கவிதைகள், சக்தி காரியாலயம், சென்னை, 1958, நான்காம் பதிப்பு.
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா, சென்னை, 2011, மறுபதிப்பு.
- தமிழ் லெக்சிகன் தொகுதி 4, பகுதி 1, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1982, மறுபதிப்பு.
(பாரதியார் கவிதைகள் பக்கம் என் கவனத்தைச் செலுத்தத் தூண்டிய கவிஞர் தி.பரமேசுவரி அவர்களுக்கு நன்றி.)
—– 22-05-25
பாரதியாரின் தீவிர வாசகரான பா. லிங்கம் அவர்களுக்கு தங்களின் இந்தக் கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன் ஐயா. நல்ல கட்டுரை.
கொங்கு மண்டலத்தில் ‘தொண்டு’க்கு கிடைத்த அரும்பொருட்பேரை பாரதியார் கேட்டிருந்தால் என்ன நினைத்து இருப்பார்!